Followers

Friday, November 30, 2012

பி.கே.மூக்கையா தேவர்

                                                  பி.கே.மூக்கையா தேவர்

தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர்.

மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர். முக்குலத்தோர் எனப்படும் இப்பிரிவினரில் கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளிர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தேவர் இனத்தில் இந்த பிறமலைக் கள்ளர் இனம் பெரும்பான்மையானது. வீர பரம்பரையினரான இப்பிரிவினரை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இவர்களுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து இவர்களுக்கு உரிய இடத்தைப் பெற தேசபக்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் மூக்கையா தேவரின் முயற்சியும் இந்த இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.

இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.

1952இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் இவர் உசிலம்பட்டி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார்.

இவருடைய கட்சியின் பெருந்தலைவர் உ.முத்துராமலிங்கத் தேவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையை மூக்கையா தேவரும் சாதித்தார். ராமனாதபுரம் நாடாளுமன்றத் தொகுதில் இவர் 1971இல் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சட்டசபை கூடி சபா நாயகரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக இடைக்கால சபா நாயகர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் சபையின் மூத்த உறுப்பினராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பெருமை மூக்கையா தேவருக்கும் கிடைத்தது.

1963இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைமையை இவர் பெற்றது இவருக்கு மட்டுமல்ல, தென் தமிழ் நாட்டின் மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்த நிகழ்ச்சியாகும். 1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து இவர் கொடுத்த குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அவரது வலுவான வாதங்களையும் மீறி அந்தக் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதன் விளைவாக இன்று வரை தமிழக மீனவர்கள் படும் இன்னல்களை நாடு அறியும்.

கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம் செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது.

மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் "உறங்காப் புலி", அதாவது தூங்காத புலி எனப் பெருமப் படுத்தி அழைக்கப்பட்டார்.

வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6இல் காலமானார். இவர் நினைவாக மதுரை அரசரடியில் 1990இல் ஒரு சிலை அமைத்துத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்க மூக்கையா தேவர் புகழ்!

டி.எல்.சசிவர்ணத் தேவர்

டி.எல்.சசிவர்ணத் தேவர்
(6-8-1912 டொ 7-11-1973)

தென் தமிழகத்தில் தலை சிறந்த தலைவராகவும், முக்குலத்தோர் போற்றும் மாமனிதராகவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வழியில் வாழ்ந்தவருமான முத்துராமலிங்கத் தேவரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் இந்த சசிவர்ணத் தேவர். முத்துராமலிங்க தேவருடன் இவரும் பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர்.

ராமனாதபுரம் மாவட்டத்தில் டி.லாடசாமி குருவம்மாள் தம்பதியினருக்கு 1912இல் பிறந்தவர் சசிவர்ணம். 1934இல் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியினர் தங்கள் சமூகத்தை குற்றப் பரம்பரையினர் என்று முத்திரை குத்தியிருந்த கொடுமையை எதிர்த்துப் போராடினார். இவர்களுடைய போராட்டத்தின் காரணமாகத்தான் அந்தக் குற்றப் பரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார்.

1939இல் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 'பார்வார்டு பிளாக்' கட்சியில் சேர்ந்த போது, சசிவர்ணமும் அவருடன் பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போசை ஆதரிக்கும் கட்சி. புதிய அரசியல் அமைப்பின்படி நடத்தப்பட்ட முதல் தேர்தலில் இவர் இந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சென்னை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957 தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து பார்வார்டு கட்சி வேட்பாளராக நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தேவர் பெரும் வெற்றி பெற்றார். முதுகுளத்தூர் சட்டமன்றத்துக்கும் உறுப்பினராக இருந்த தேவர் அசெம்பிளி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்திற்கு சசிவர்ணத் தேவர் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

தொடர்ந்து முதுகுளத்தூர் பகுதியில் 1957இல் கலவரங்கள் நடந்தன. கலவரங்களை நிறுத்துவதற்காக சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அரசு முயற்சியில் இந்தப் பகுதியில் எல்லா ஜாதியினரும் அமைதியோடு வாழ வழிவகை காண்பதற்கு சமாதானக் கூட்டம் நடந்தது. அதில் சசிவர்ணம் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தேவர் சமுதாயத்தினர், நாடார் சமுதாயத்தினர், தேவேந்திர குலத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேவர் குலத் தலைவரும், மக்களின் அன்புக்குப் பாத்திரமானவருமான உ.முத்துராமலிங்கத் தேவர் 1963 அக்டோபர் 30இல் உடல் நலம் குன்றி காலமானார். அதனைத் தொடர்ந்து பார்வார்டு பிளாக் கட்சியின் தலைமைக்குப் போட்டி ஏற்பட்டது. சசிவர்ணத் தேவருக்கும் மூக்கையா தேவருக்கும் போட்டி. இதில் மூக்கையா தேவர் வெற்றி பெற்றதையடுத்து இந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சசிவர்ணத் தேவர் பிரிந்து போய் சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் எனும் கட்சியைத் தொடங்கினார்.

கட்சி அரசியலில் இவர்கள் பிரிந்திருந்தாலும், இவர்கள் அனைவருமே தேசபக்த சிங்கங்கள் என்பதில் ஐயமில்லை. நாடு சுதந்திரம் பெற்றதற்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் இவர்களுடைய பங்களிப்பு அளப்பற்கரியது. வாழ்க தேசபக்த சிங்கம் சசிவர்ணத் தேவர் புகழ்!

வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி

                                      ரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி

வலங்கைமான் சங்கர நாராயண ஸ்ரீனிவாச சாஸ்திரி காங்கிரசின் தொடக்க கால மிதவாத காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவர். இந்த வரிசையில் வீரம் செறிந்த பல புரட்சிக்காரர்களைப் பற்றியெல்லாம் எழுதிவிட்டு இப்போது முந்தைய மிதவாத காங்கிரஸ் தலைவர்களின் வரலாற்றைக் கொடுத்து வருகிறேன். இவர்களும் தீவிரவாத காங்கிரஸ்காரர்களுக்கு எந்த விதத்திலும் தேசபக்தியில் குறைந்தவர்கள் அல்ல. மிதவாதிகள் என்று பார்த்தால், அவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்து, பதவி இவற்றில் இருந்தவர்களாகத்தான் இருக்கும். அவர்கள் தங்கள் சமூக நிலைமையிலிருந்து இறங்கி வந்து சாலையில் நின்று போராடுவதில்லை. தங்கள் அறிவுத் திறன், வெள்ளை அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி இவற்றைக் கொண்டு மேல் நிலையில் இருந்து பாடுபட்டவர்கள். ஆகவே தீவிர காங்கிரசார், மிதவாத காங்கிரசார் இடையே எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமெங்கிற நோக்கில் இவைகள் தரப்படுகின்றன. இந்த சுய விளக்கத்தோடு வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி எனும் அறிஞரும் தேசபக்தருமான இவரைப் பற்றிய கட்டுரையைத் தருகிறேன்.

வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி என்று சொன்னவுடன் ஆங்கிலத்தில் இவரை "வெள்ளி நாக்கு சாஸ்திரி" என வழங்குவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் இவரது ஆங்கிலப் பேச்சாற்றல். பிறக்கும் போதே அந்தத் திறமையுடன் பிறந்தவர் என்பதைக் குறிக்க அவரைப் பற்றி அப்படிச் சொல்லி வந்தார்கள். அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர், வட்டமேஜை மா நாட்டுப் பிரதி நிதி, காங்கிரஸ் இயக்கத்தில் தொடர்பு என்று பல்முனை ஆற்றல் படைத்த இவர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தந்தைக்கு 1869 செப்டம்பர் 22இல் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சங்கர நாராயண சாஸ்திரி.அவர் இருந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வி கற்ற இவர் பின்னர் கும்பகோணம் சென்று அங்குள்ள நேட்டிவ் உயர் நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரி படிப்பை கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்று 1887இல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் புலமை பெற்று விளங்கினார். பின் சிலகாலம் சேலம் முனிசிபல் கல்லூரியில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர் நிலைப் பள்ளியில் 1894இல் தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அங்கு இவர் 1902 வரை சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றி யிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இவருடைய ஆங்கிலப் புலமை நாட்டுக்குத் தெரிய வந்தது. நிர்வாகத்திலும் முத்திரை பதித்தவர் ஸ்ரீனிவாச சாஸ்திரி. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பின்னாளில் துணை வேந்தராகப் பணியாற்றி பெருமை சேர்த்தவர். இவர் பணியாற்றிய காலத்தில் அங்கு பெரும் புலவர்கள் குறிப்பாக ரா.ராகவ ஐயங்கார், சோமசுந்தர பாரதியார் போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

1885இல் இவர் பார்வதி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய குடும்பத்தில் இவருடைய பெயர்த்தி கவுசல்யா பிரபலமான விஞ்ஞானியான சர்.சி.வி.ராமனின் மருமான் எஸ்.ராமசேஷன் என்பவரை மணம் செய்து கொண்டார்.

இவர் அரசியலுக்கு வந்தது 1905ஆம் வருடம். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் காங்கிரசில் மகாத்மா காந்தி வரவில்லை. திலகர், கோகலே போன்றவர்கள் இருந்தாலும் நமது கோரிக்கை பரிபூரண சுதந்திரம் என்ற அறிவிப்பு வராத காலம். சுதந்திரத்தை அடைய எந்த வழியில் போராடப் போகிறோம் என்று அறியாத நிலையில் அப்போதைய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசருக்கு வாழ்த்துப்பா பாடி மகா நாடுகள் நடத்தி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்த மிதவாத காங்கிரஸார் வாழ்ந்த காலம். இதை மனத்தில் வைத்துக் கொண்டால் நிலைமை நன்கு புரிந்து கொள்ளலாம்.

1908இல் இவர் காங்கிரசில் உறுப்பினர் ஆனார். இது 1922 வரை தொடர்ந்தது. பின்னர் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது இவர் காங்கிரசிலிருந்து விலகிவிட்டார். இந்தியன் லிபரல் கட்சி என்றோரு கட்சியை இவரோடு கருத்து ஒற்றுமை உடையவர்களோடு சேர்ந்து தொடங்கினார். பின்னாளில் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.

சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் இவர் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் எனும் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் இவர் பணியாற்றினார்.
முதல் உலக யுத்தத்துக்குப் பிறகு உருவான சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் இது இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில் இவர் இந்தியப் பிரதி நிதியாக இருந்தார். இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவின் பிரதி நிதியாகவும் இருந்திருக்கிறார்.

இப்போதெல்லாம் மிகப் பெரிய நகரங்களில் வாழ்வோர் மட்டுமே ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக பேசுகிறார்கள் என்கிற எண்ணம் உண்டு. அப்போது கும்பகோணத்தில் அரசு கல்லூரியில் படித்த ஸ்ரீனிவாச சாஸ்திரியின் ஆங்கிலம், ஆங்கிலேயர்களே கேட்டு வியக்கும் வண்ணம் இருந்ததாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார். இதனையொட்டியே வெள்ளி நாக்கு படைத்தவர் எனப் பெயர் பெற்றார். மகாத்மா காந்தியோடும், கோபாலகிருஷ்ண கோகலே யுடனும் இவருக்கு நல்ல பழக்கமும் தொடர்பும் இருந்தது. மகாத்மா இவரைத் தன் அண்ணன் என்று அழைப்பது வழக்கம். பிரிட்டிஷ் நகரங்கள் பல இவருக்குப் பல விருதுகளைக் கொடுத்து கெளரவித்திருக்கின்றன.

சென்னை ஆசிரியர்கள் கில்டு எனும் அமைப்பை இவர் தோற்றுவித்தார். தமிழ் நாட்டின் கூட்டுறவு இயக்கம் உருவாகக் காரணகர்த்தர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். திருவல்லிக்கேணி அர்பன் கோ ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் டியுசிஎஸ் 1904 உருவானது இவரது முன்முயற்சியால்தான்.
1906இல் இவர் கோபாலகிருஷ்ண கோகலேயைச் சந்தித்தார். அவர் தொடங்கிய சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியில் இவர் உறுப்பினர் ஆனார். 1915இல் இவர் அதன் தலைவராகவும் ஆனார். 1908 முதல் 1911 வரை இவர் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். 1913இல் இவர் சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் உறுப்பினர் ஆனார். பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தை இவர் தீவிரமாக எதிர்த்தார். இந்தச் சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றி சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்படும் உரைகளில் ஒன்று.

1930-31இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மகா நாட்டில் இவரும் மகாத்மா காந்தியுடன் கலந்து கொண்டார். மகா நாடு தோல்வியில் முடிந்தாலும் 1935இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்தார். இவர் 1946 ஏப்ரல் 17ஆம் தேதி தனது 76ஆம் வயதில் சென்னை மைலாப்பூரில் தனது இல்லத்தில் காலமானார். வாழ்க ஸ்ரீனிவாச சாஸ்திரி புகழ்!

பி.எஸ்.சிவசாமி ஐயர்

                                 பி.எஸ்.சிவசாமி ஐயர் (7-2-1864 முதல் 5-11-1946)

சர் பழமானேரி சுந்தரம் சிவசாமி ஐயர் பொதுவாழ்விலும், மிதவாத காங்கிரஸ் இயக்கத்திலும், சட்டத்துறையிலும், கல்வித் துறையிலும் பெரும் புகழ் பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமானேரி கிராமத்தில் 1864 பிப்ரவரி 7ஆம் தேதி பிறந்தவர். தான் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் இவர் தன் அறிவுத் திறமையால் ஒரு ஸ்டேட்ஸ்மென் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். சட்டத் துறையில் இவரது உச்ச கட்டம் 1907 முதல் 1911இல் இவர் சென்னை மாகாண அட்வகேட் ஜெனரலாக பணியாற்றிய காலமாகும்.

இவருடைய இளம் வயதுக் கல்வி பழமானேரி கிராமத்திலும், பட்டப் படிப்பு சென்னை ராஜதானிக் கல்லூரி (மானிலக் கல்லூரி) யிலும் நடந்தது. வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு மிகத் திறமையுள்ளவராகத் திகழ்ந்ததால் இவர் மா நிலத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப் பட்டு திறம்பட செயல்பட்டார்.

அவருடைய காலத்தில் இப்போது போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுஜன ஜன நாயக அமைப்புகள், சட்டசபைகள் கிடையாது. மா நில கவர்னருக்கு ஆலோசனை சொல்வதற்கான ஒரு சபை மட்டும் இருந்தது. அந்த சபைக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப் படுவார்கள். மக்கள் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இல்லை. அப்படி கவர்னரின் ஆலோசனை சபையில் இவர் அங்கம் வகித்தார். இவர் தனது 82ஆம் வயதில் 1946 நவம்பர் 5ஆம் தேதி காலமானார்.

அப்போது உருவெடுத்து இந்தியர்களின் கவனத்தை ஈர்த்து வந்த காங்கிரஸ் இயக்கம் உருவாக்கிய சுதந்திர எழுச்சி இவரிடமும் உருவான காரணத்தால் இவரும் இந்திய சுதந்திர தாகத்தோடு செயல்பட்டார். இப்போது உள்ள ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் ஏற்பட்டது. அதற்கு முன்பு லீக் ஆஃப் நேஷன்ஸ் எனும் பன்னாட்டு அமைப்பு செயல்பட்டு வந்தது. அந்த அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சென்ற சிவசாமி ஐயர் இந்தியா சுதந்திரம் அடைய வேன்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மக்கள் கல்வி அறிவு பெற நூல்களைப் படிக்கும் அவசியத்தை உணர்ந்து, நூலகங்கள் உருவாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நடவடிக்கைகள் எடுத்தார்.

பழமானேரி என்பது திருக்காட்டுப் பள்ளி அருகே, கல்லணை செல்லும் பாதையில் உள்ள சிறு கிராமம். இவ்வூரில் வாழ்ந்தவர் சுந்தரம் ஐயர் என்பவர். இங்கு வாழ்ந்த பிராமணர்களில் பெரும்பாலோர் பிரகசர்ணம் எனும் பிரிவைச் சேர்ந்தவர்கள். சுந்தரம் ஐயரும் அப்படியே. இவர்களுக்கு பிரகசர்ணம் எனும் பெயர் வரக் காரணமொன்று சொல்கிறார்கள். அதாவது மாமன்னன் இராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு பல நாடுகளை வெற்றி கொண்ட மன்னனாக ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன் விளங்கினார். அவருடைய படைத் தளபதியாக விளங்கியவர் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர் என்பவர். இவருடைய வாரிசுகள் பிரகசர்ணம் எனும் பிரிவினராகக் கருதப் படுகின்றனர்.
சர் சிவசாமி ஐயர் தன்னுடைய கல்லூரி படிப்பை 1882இல் முடித்தார், அதாவது மகாகவி பாரதியார் பிறந்த ஆண்டு அது. இவர் கல்லூரியில் எடுத்துக் கொண்ட பிரிவு வரலாறு. சம்ஸ்கிருதத்திலும் நல்ல புலமை உடையவர் இவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்து முடித்த இவர் வக்கீலாகப் பதிவு செய்து கொண்ட ஆண்டு 1885, காங்கிரஸ் இயக்கம் முதன்முதலாக உருவான ஆண்டு.
புகழ்பெற்ற வக்கீலாக பிராக்டீஸ் செய்து வந்த இவரை கவர்னரின் ஆலோசனை சபைக்கு நியமனம் செய்தது 1904 மே மாதம் 12ஆம் தேதி. கவர்னர் ஆலோசனை சபையில் அட்வகேட் ஜெனரலாக நியமனம் ஆன நாளான 1907அக்டோபர் 25ஆம் தேதி வரை பணியாற்றினார்.

சென்னை பல்கலைக் கழகம் மிகப் புகழ்பெற்றது. அதன் செனட் உறுப்பினராக இவர் 1898இல் நியமனமானார். சென்னை பல்கலைக் கழக துணை வேந்தராக இவர் 1916 முதல் 1918 வரையிலும் இருந்தார். அதன் பின்னர் காசி இந்து சர்வகலாசாலையின் துணை வேந்தராக நியமனமாகி காசிக்குச் சென்றார்.
இவருடைய அரசியல் வாழ்க்கை 1912இல்தான் தொடங்கியது. அப்போது செய்து கொள்ளப்பட்ட மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் விளைவாக இவர் கவர்னர் நிர்வாக கவுன்சில் உறுப்பினரானார். இந்தப் பதவியில் இவர் 1912 முதல் 1917 வரை நீடித்தார். 1914இல் முதல் உலக யுத்தம் ஐரோப்பாவில் ஆரம்பமானது. அப்போது இந்திய தொண்டர்கள் யுத்த சேவக்குத் தேவைப் பட்டனர். அவர்களைத் தயாரித்து அனுப்பும் பணியிலும் சிவசாமி ஐயர் ஈடுபட்டார்.

இவர் ஒரு மிதவாதி என்பதை முன்பே பார்த்தோம். இவர் ஆங்கில அரசோடு ஒத்துப் போவதையும், அன்னிபெசண்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் முடிவை கவர்னர் கவுன்சில் எடுத்தபோது இவர் எதிர்க்காததோடு ஆதரவாக நடந்து கொண்டதும், தேசிய வாதிகள் மத்தியில் கசப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தியது. இதற்கு அந்த காலகட்டத்தில் இருந்த மிதவாத காங்கிரசார் ஆங்கில அதிகாரிகள் நிர்வாகம் இவற்றுக்கு எதிரான கருத்து சொல்லவோ, நடவடிக்கை எடுக்கவோ தயங்கிய காலம். இருந்தாலும் 1919இல் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாகில் மக்கள் கொடுமையாகச் சுட்டுக் கொல்லப்பட்ட பொது இவர் வெகுண்டெழுந்தார். ஜெனரல் டையரின் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.
1922இல் லீக் ஆஃப் நேஷன்ஸில் தென்னாப்பிரிக்க சர்வாதிகாரியாக இருந்த ஜெனரல் ஸ்மட்ஸின் நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராக இவர் அவரைக் கண்டித்து உரையாற்றினார். பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு எந்தவித சலுகைகளைக் கொடுக்கலாம் என்பதைக் கண்டறிய ஜான் சைமன் தலைமையில் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பிய போது அதனை இந்திய தேசிய வாதிகள் கடுமையாக எதிர்த்தனர். பல இடங்களில் போலீஸ் தடியடி அராஜகம் நடந்தேறியது. பஞ்சாபில் லாலா லஜபதி ராய் தடியடியில் உயிரிழந்தார். அலகாபாத்தில் ஜவஹர்லால் நேரு உட்பட கோவிந்த் வல்லப் பந்த் போன்றோர் தடியடியில் காயமடைந்தனர். அந்த சைமன் கமிஷன் இந்தியாவுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சிவசாமி ஐயர்.
1931இல் இந்திய ராணுவ கல்லூரிகளுக்கான குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். அவருடைய மூத்த வயதில் இந்தியா மத அடிப்படையில் பிளவுபட இருப்பதறிந்து வேதனையுற்று இந்தியாவைத் துண்டாடுவதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். கல்வித் துறையில் ஆர்வம் காரணமாக சென்னை திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் உயர் நிலைப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். அவை இன்று வரை சிறப்பான கல்விக் கூடங்களாக விளங்குகின்றன.

சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியடிகளின் வரவுக்குப் பிறகு உத்வேகம் பெற்று பற்பல தியாகிகளை உருவாக்கியது. ஆனால் காந்தி, திலகர் காலத்துக்கு முன்னர் மிதவாத காங்கிரஸ் வாதியாகவும், அதே நேரம் நல்ல தேசிய வாதியாகவும் திகழ்ந்தவர் சர் டி.சிவசாமி ஐயர். வாழ்க அவர் புகழ்!