Followers

Thursday, November 29, 2012

பி.எஸ்.குமாரசாமி ராஜா

                                                        பி.எஸ்.குமாரசாமி ராஜா

சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் பிரிவதற்கு முன்பு சென்னை மாகாணம் மிகப் பெரிய மாகாணமாக இருந்தது. அந்த பெருமைக்குரிய சென்னை மாகாணத்தின் சுதந்திரத்துக்குப் பின் முதல் பிரதமர் (அதாவது முதலமைச்சரை அப்படித்தான் சொல்வார்கள்) பதவி வகித்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த திரு பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள். 1949 ஏப்ரல் 6 முதல் 1952 ஏப்ரல் 10ஆம் தேதி வரை இவர் அந்தப் பதவியில் இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். 1952இல் புதிய அரசியல் சட்டத்தின்படி தேர்தல்கள் நடந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவி வகித்தார். இவருடைய வரலாற்றைச் சிறிது பார்ப்போம்.

பூஜாபதி சஞ்சீவி ராஜா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் இந்த குமாரசாமி ராஜா. இவரது ஊர் முன்பே சொன்னது போல ராஜபாளையம். பிறந்த ஒரு சில நாட்களிலேயே அன்னையை இழந்த துர்ப்பாக்கியசாலி இவர். மூன்று வயது ஆனபோது தந்தையும் இறந்தார். கூடப் பிறந்தவர்கள் எவரும் இல்லாத நிலையில் தனிமையில் அவருடைய பாட்டியால் வளர்க்கப்பட்டார். ராஜபாளையம் பகுதிகளில் ஆந்திரப் பகுதிகளிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டில் வந்து குடியேறிய படைவீரர்கள் பரம்பரையினரை ராஜா என்று அழைப்பர். அந்தக் குடியில் வந்த இந்த குமாரசாமி ராஜா பள்ளிக் கல்வியை முடித்தவுடன் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்றார். உள்ளாட்சி முறை மூலம் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும் என்பதால், இவர் உள்ளாட்சி விவகாரங்களில் ஆர்வம் காட்டினார்.

அன்னி பெசண்டின் ஹோம்ரூல் இயக்கத்தில் ஆர்வம் காட்டினார். தீரர் சத்தியமூர்த்தியின் வீர முழக்கங்கள் இவரது சுதந்திர நாட்டத்தை அதிகரித்தன. காங்கிரஸ் இயக்கத்தையும், மகாத்மா காந்தியையும் இவர் உயிருக்குயிராக நேசித்தார். முதன் முறையாக மகாத்மா காந்தியை இவர் சந்தித்த பிறகு இவர் தனது வாழ்க்கை முறையையே எளிமையாக மாற்றிக் கொண்டார். காந்திய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் நற்காரியங்களில் இவர் ஈடுபடலானார்.
1932இல் சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் முதன் முறையாக சிறை சென்றார். விடுதலையான பிறகு 1934இல் திரு நெல்வேலி, மதுரை, இராம நாதபுரம் ஆகிய மாவட்டங்கள் சார்பாக சென்னை சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெறும் காலகட்டத்தில் ஆந்திர கேசரி டி.பிரகாசம், ராஜாஜி ஆகியோருக்கிடையே சென்னை மாகாணத்திற்கு யார் பிரதமராக வருவது என்ற பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி குமாரசாமி ராஜாவின் பெயரைத் தேர்ந்தெடுத்தது. 1949 தொடங்கி 1952 வரையிலான காலகட்டத்தில் இவர் சென்னை மாகாண முதலமைச்சராக (பிரதமர்) பதவி வகித்தார்.

 இவருடைய காலத்தில்தான் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் தலைமறைவாயினர். 1952இல் முதல் தேர்தல் நடந்த போது, காங்கிரஸ் கட்சி வலுவிழந்து போன நிலையில் நேருவின் ஆலோசனைப்படி, காமராஜ் அவர்களின் சம்மதத்துடன் ராஜாஜி முதல்வராக பதவி ஏற்க அழைக்கப்பட்டார். இதன் பிறகு குமாரசாமி ராஜா ஒரிசா மானிலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இவருடைய ஆட்சி காலம் சென்னை மாகாணத்தில் பல குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைக் கண்டது. அவை மதுவிலக்கு அமலாகியது. கதர் கைத்தறி ஆடைகளுக்கு புத்துயிர் கிடைத்தது; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப் பிரவேசம் சட்ட பூர்வமாக ஆக்கப்பட்டது; கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது போன்ற பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

ராஜபாளையத்தில் பலரும் மிகப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தனர். செல்வ செழிப்பு மிக்க சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தனது பிரம்மாண்டமான வீட்டை காந்தி கலை மன்றம் எனும் அமைப்புக்குத் தானமாக அளித்தார். இவர் சென்னை ராஜதானியில் பதவி வகித்த காலத்தில் பவ நகர் மகாராஜா கவர்னராக பதவி வகித்தார்.

கடுமையான சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்திலும், பிரிட்டிஷ் அடக்குமுறை தாண்டவமாடிய காலகட்டத்திலும் இந்தியா பிளவு பட்டு பாகிஸ்தான் உருவான போதும், சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் நல்வாழ்வுக்காக பாடுபடவேன்டியிருந்த காலகட்டத்திலும், சிக்கலான நேரத்தில் இவர் முதல்வர் பதவி வகித்த காரணத்தால், பல சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம், இவர் திறமையோடு கையாண்டார் என்பது கவனிக்கத்தக்கது. அமைதியும், பொறுமையும், நடு நிலைமையும் இவரது ஆயுதமாகப் பயன்பட்டது. சிறப்பான இடத்தைத் தனக்கென அமைத்துக் கொண்ட தியாகி குமாரசாமி ராஜா புகழ் வாழ்க!

எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்

                                                        எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்

செருகுடி அனந்தராம சுவாமி நாத ஐயர் எனவும் தஞ்சாவூர் சாமி நாத ஐயர் எனவும் எஸ்.ஏ.எஸ். என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் ஒரு வழக்கறிஞ்சர். அது தவிர பிரம்மஞான சபையில் உறுப்பினர், நல்ல நிர்வாகி இவையெல்லாவற்றையும் காட்டிலும் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்.

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தைச் சேர்ந்தவரான இவர் தனது இளமைக் கல்வியை அதே ஊரில் இருந்த ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் படித்தார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து எஃப்.ஏ. எனப்படும் இன்டர்மீடியட் படித்தார். தொடர்ந்து சென்னைக்குச் சென்று 1874இல் பட்டப் படிப்பை முடித்த பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.

வழக்கறிஞராக இவர் திறமையோடு பணியாற்றியதைத் தொடர்ந்து இவர் நாகப்பட்டினத்தில் அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டார். நாகப்பட்டினம் நகரசபை உறுப்பினராகவும் இவர் இருந்தார். அப்போது சென்னை சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் போட்டியிட்ட தொகுதி ஊராட்சி நகர் மன்றங்கள் தொகுதியாகும்.

அப்போதெல்லாம் இப்போது போல தொகுதிகள் கிடையாது. ஆசிரியர்கள், ஊராட்சி மன்றங்கள் போன்ற தனித்தனி தொகுதிகள் இருந்தன. இவரைத் தோற்கடித்தவர் திருச்சினாப்பள்ளியைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் ஐயர் ஆவார். 1883க்கும் 1885க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் தஞ்சாவூரில் பப்ளிக் பிராசிகியூட்டராக நியமனம் பெற்றார்.

அந்த பதவியை இவர் வகித்த காலத்தில் 1892இல் தஞ்சாவூர் மாவட்ட மிரசுதார்கள் அரசு அப்போது விதித்த நிலவரி அதிகரிப்பை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் சாமி நாத ஐயர்.

மிதவாத காங்கிரசார் மட்டுமே அப்போதைய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். பால கங்காதர திலகர் காலத்துக்குப் பிறகுதான் தீவிர காங்கிரசாரும், சுதந்திரம் எனது பிறப்புரிமை எனும் கோஷமும் எழுந்தது. சுவாமி நாத ஐயர் காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு பெட்டிஷன் போட்டு சலுகைகளைக் கேட்கும் மிதவாதம் மட்டுமே இருந்தது. அப்படிப்பட்ட மிதவாத காங்கிரஸ்காரராக திரு சுவாமி நாத ஐயர் விளங்கினார்.

காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாட்டோடு பிரம்மஞான சபையின் பால் ஈர்க்கப்பட்டார் இவர். இந்து மதத்தின் தேவையற்ற கசடுகளை நீக்கி உண்மையான பிரம்ம ஞானத்தைப் பரப்பும் நோக்கத்தோடு உருவான தியாசபிகல் சொசைட்டி எனப்படும் இந்த சபையில் அவர் ஆர்வம் கொள்ளத் தொடங்கி 1880 முதல் அதில் உறுப்பினராக ஆனார். இந்த சபையை உருவாக்கியவர் மேடம் பிளாவ்ட்ஸ்கி என்பவரும் கர்னல் ஹெச்.எஸ்.ஆல்காட் ஆகியோராவர். 1883யில் இவர் நாகப்பட்டினம் பிரம்ம ஞான சபையின் செயலாளராக ஆனார். தொடர்ந்து இவர் தஞ்சாவூர் வந்த பின்னர் தஞ்சை கிளையின் தலைவராக 1892இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னையில் இருந்த மஹாஜன சபையின் உறுப்பினர்கள் சேர்ந்து காங்கிரஸ் அமைப்பை உருவாக்க முடிவெடுத்து அதற்கான கூட்டத்தை பம்பாய் நகரத்தில் 1885இல்நடத்தினார்கள். அப்போதுதான் முதன் முதலாக காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. முதலில் அது ஒரு வெள்ளையரின் தலைமையில் தொடங்கப்பட்ட போதும், அந்த கூட்டத்துக்குச் சென்று கட்சி தொடங்கியவர்களில் சுவாமி நாத ஐயரும் ஒருவர். காங்கிரஸ் இயக்கம் அப்போது மக்கள் சங்கம் எனும் பெயரில் ஏற்பட்டபோது தஞ்சை மக்கள் சங்கத்தில் இவர் தலைவராக இருந்து செயல்பட்டார். பம்பாயில் நடந்த முதல் கூட்டத்தில் மொத்தமாக 72 பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேர் சென்னை ராஜதானியிலிருந்து சென்றனர். பம்பாயில் தேஜ்பால் சம்ஸ்கிருத கல்லூரியில் நடந்தது இந்தக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் சுவாமி நாத ஐயர் உப்புக்கு வரி போடும் வழக்கத்தை எதிர்த்து சிறப்பானதோர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1930இல் மகாத்மா காந்தி உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடத்தியதை நாம் அறிவோம். அதற்கு முன்பாகவே இந்தப் பிரச்சினை முதல் காங்கிரசிலேயே விவாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. உப்பு வரி தவிர சுவாமி நாத ஐயர் காங்கிரசில் குரல் கொடுத்த மற்ற பிரச்சினைகளில் கடுமையான சுங்க வரி மற்றும் பர்மாவை இணைத்துக் கொண்டது ஆகிய பிரச்சினைகளும் அடங்கும்.

                                            Delegates in the first Congress Session in 1885

இந்து கோயில்களின் நிர்வாகம் குறித்தும் இவர் ஆர்வம் காட்டினார். கும்பகோணம் தேவஸ்தான தேர்தலில் இவருக்கும் பூண்டி வீரையா வாண்டையார் அவர்களுக்குமிடையே போட்டி இருந்திருக்கிறது. 1888-89 ஆண்டுகளில் இவ்விருவர் கட்சிகளும் சமமான பலத்துடன் இருந்ததால் இவ்விருவர் கட்சியிலிருந்தும் மூன்று நபர்கள் தேவஸ்தானம் போர்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சுவாமி நாத ஐயர் கர்னாடக சங்கீதத்தில் ஆர்வமுடையவர். இவர் காலத்தில் தஞ்சையில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். சங்கீத ஆய்வில் முன்னணியில் இருந்த எஸ்.ஏ.கே.துர்கா இவருடைய பெயர்த்தி ஆவார்.
பிற்காலத்திய காங்கிரஸ் தலைவர்களோடு ஒப்பிடமுடியாவிட்டாலும் காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்த மிதவாத காங்கிரஸ்காரர் என்ற முறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் முதல் காங்கிரஸ் காரர் என்கிற முறையிலும் அவருடைய புகழ் வாழ்க!

ஏ.என்.சிவராமன்

ஏ.என்.சிவராமன்

ஆம்பூர் நாணு ஐயர் சிவராமன் எனும் இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் "தினமணி" பத்திரிகையும், அதன் தலையங்கங்களும், கட்டுரைகளும்தான் நமக்கு நினைவுக்கு வரும். அந்த அளவு மக்கள் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டவர் ஆசிரியர் ஏ.என்.சிவராமன். 97 வயது வரை வாழ்ந்து மறைந்த இந்த மாமனிதர் பத்திரிகை உலகுக்கு ஓர் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர், சுதந்திரப் போர் தியாகி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயமானாலும், மிக எளிமையாகக் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றவர் என்பதெல்லாம் நம் நினைவுக்கு வரும்.

இவருக்கு 17 மொழிகள் தெரியும், அதில் பிரெஞ், சம்ஸ்கிருதம், உருது இவைகளும் அடங்கும்.1988இல் இவருக்கு பி.டி.கோயங்கா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருது பத்திரிகைத் துறையில் சிறப்பான பணிக்காக அளிக்கப்படும் கெளரவம் ஆகும்.

பல்முனைச் சிறப்புக்களுக்கு உரியவரான ஏ.என்.சிவராமன் 1904 மார்ச் 1ஆம் தேதி கொச்சியில் பிறந்தவர். நெல்லை மாவட்டத்துக் காரரான இவரது இளம் வயதுக் கல்வி திரு நெல்வேலி மாவட்டத்திலுள்ள அவர்கள் கிராமத்தில்தான் தொடங்கியது. நெல்லை மாவட்டம் பல தேசபக்தர்களை உருவாக்கிய இடம். அந்த வரிசையில் ஏ.என்.சிவராமனும் சேர்ந்து கொண்டார்.

பள்ளிப் பருவத்திலேயே ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசண்ட் அம்மையார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இவர் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1921இல் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய போது தனது 17ஆம் வயதில் கல்லூரியில் இன்டர் படித்துக் கொண்டிருந்த இவர் அதில் பங்கு கொண்டார். அடுத்த ஆண்டிலேயே இவரது முதல் சிறை தண்டனையைப் பெற்றார். இதனால் இவர் கல்லூரி படிப்பு முடிவுக்கு வந்தது.

சில காலம் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்த இவருக்குப் பல நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் இந்த நாட்டின் பாரம்பரியம், வரலாறு, நாம் அடிமைப் பட்ட விவரங்கள், சுதந்திர உணர்வு ஆகியவைகளைக் கற்றுக் கொண்டார். இந்த ஞானமெல்லாம் அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் வெளிப்பட்டு கட்டுரைகளாக வெளிவந்தன. ஒவ்வொரு நாளும் இவர் படிப்புக்காக ஒதுக்கும் நேரம் மிக அதிகம்; இந்தப் பழக்கத்தைத் தன் இறுதி நாட்கள் வரை கடைப்பிடித்து வந்தார்.

அந்தக் காலத்தில் டி.எஸ்.சொக்கலிங்கம் என்பவர் பிரபலமான பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அவர் அப்போது "காந்தி" என்றொரு பத்திரிகையை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையில் சிவராமன் முதலில் பத்திரிகைத் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்துக்காகத் திருச்சியிலிருந்து நடைப்பயணமாக வேதாரண்யம் சென்று உப்பு எடுக்கும் சத்தியாக்கிரகப் போரில் இவரும் நூறு பேரில் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டார். அந்தப் போராட்டம் காரணமாக இவருக்கு 20 மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அந்த தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் இவர் பத்திரிகைத் தொழிலுக்குத் திரும்பினார்.

முதன்முதலாக இவரைப் பத்திரிகைத் தொழிலுக்குக் கொண்டு வந்த டி.எஸ்.சொக்கலிங்க்கம் 1934இல் தொடங்கப்பட்ட "தினமணி" இதழில் ஆசிரியர் ஆனார். அப்போது ஏ.என்.சிவராமன் அவரிடம் துணை ஆசிரியராகப் பதவி ஏற்றார். 1944 வரை அதன் ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் பதவி விலகியபின்னர் ஏ.என்.சிவராமன் "தினமணி"யின் ஆசிரியர் ஆனார். அப்போது தொடங்க்கி 1987 வரை அந்த தேசியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு இவரது தலையங்கங்கள் மூலமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சீர்காழியில் உப்பனாறு பாலத்தில் சில இளைஞ்சர்கள் வெடிவைத்த வழக்கில் இவரும், தினமணி இராமரத்தினம் போன்றவர்களும் கைதாகி குற்றவாளிகளாக ஆக்கப் பட்டனர்.
"தினமணி"யில் இவர் ஆசிரியராக இருந்த அந்த காலம் தான் இந்திய வரலாற்றின் சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டமாக இருந்தது. இயற்கையிலேயே தேசபக்தி மிக்க இவரிடம் சக்தி மிகுந்த பத்திரிகைத் துறை கிடைத்த போது இவருடைய பங்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும். தினமணி சுதந்திர எழுச்சிக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது. "தினமணி" என்றால் தேசியம் என்று மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். 1947இல் இந்தியா சுதந்திரம் அடையும் நேரம் நெருங்கி வந்து கொண்டிருந்த காலத்தில் அதுவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் நாட்டம் காட்டிக் கொண்டிருந்த தினமணி இப்போது சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றம், கல்வி, தொழில் வளர்ச்சி குறித்தெல்லாம் அக்கறை காட்டத் தொடங்கியது.

அந்த காலத்தில் "தி ஹிந்து" எனும் ஆங்கில நாளிதழுக்கு ஒரு நற்சான்று உண்டு. அந்தப் பத்திரிகையில் செய்தி என்றால் அது முழு உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதே நம்பகத் தன்மையையும், தேசபக்தி உணர்வையும், முன்னேற்றத்துக்குப் பாடுபட வேன்டிய அவசியத்தையும் தினமணி மக்கள் மனங்களில் விதைத்தது. 'தேசியம்' எனும் சொல்லுக்கு எடுத்துக் காட்டு 'தினமணி' என்பதை எல்லா வகையிலும் நிரூபித்து வந்தது.

சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகள் கழிந்த பின்னரும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் பயன்பாடுகள் சாதாரண மக்களிடம் சென்றடையவில்லை என்பதை கவனித்த ஏ.என்.சிவராமன் அரசின் நடைமுறைகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டத் தொடங்கியது. அப்போது ராஜாஜி தலைமையில் உருவான சுதந்திராக் கட்சி, சுயராஜ்யா பத்திரிகை போன்றவற்றின் கருத்துக்களையொட்டி 'தினமணி'யின் எண்ணங்களும் சார்புடையனவாக அமைந்தன. 1967 தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பதவி இழந்து தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தி.மு.க.வின் வெற்றி சாத்தியமாகியது. இந்த மாற்றத்தில் ஏ.என்.சிவராமனின் எழுத்துக்களும் காங்கிரசுக்கு எதிராக அமைந்தன என்பது பலரது எண்ணம்.

1975இல் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சியில் நாட்டில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. பத்திரிகை தணிக்கை முறை அறிமுகமானது. அரசியல் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சிவராமன் பலத்த குரல் எழுப்பினார். அரசின் இந்தப் போக்கை எதிர்க்கும் வகையில் இவர் பத்திரிகையில் தலையங்கம் எழுதப்படும் இடம் காலியாக விடப்பட்டு பத்திரிகை வெளிவந்தது.

ஸ்தாபன காங்கிரசில் இருந்த காமராஜ் இந்தப் போக்கைக் கண்டு மனம் வெதும்பி திடீரென்று காலமாகி விட்டார். நெருக்கடி நிலையின் முதல் களபலி காமராஜரின் மரணம் என்று ஏ.என்.சிவராமன் தன் பத்திரிகையில் எழுதினார். காமராஜரின் மரணத்தோடு தன்னுடைய பேனாவும் எழுதும் வேகத்தை இழந்து போனது என்றார். நெருக்கடி நிலை அகற்றப்பட்ட பிறகு சிவராமன் சொன்னார், இந்த நிலைமைக்காக காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று.

1980களில் போஃபார்ஸ் பீரங்கி ஊழல் நாட்டையே குலுக்கியது. ஜனாதிபதி ஜெயில் சிங்குக்கும் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து பேதங்கள் சிவராமனை வருத்தியது. 'தினமணி'யில் அவருடைய கையெழுத்திட்டு வெளியான ஒரு தலையங்கத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லையென்றால் அது இந்த நாட்டின் ஜனனாயக முறைக்குக் கேடு விளைவிக்கும் என்று எழுதினார். 1987இல் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தன் வாழ் நாள் இறுதி வரை படித்தும், எழுதியும் வந்தார். வாழ்க ஏ.என்.சிவராமன் புகழ்!