Followers

Friday, November 30, 2012

டி.எல்.சசிவர்ணத் தேவர்

டி.எல்.சசிவர்ணத் தேவர்
(6-8-1912 டொ 7-11-1973)

தென் தமிழகத்தில் தலை சிறந்த தலைவராகவும், முக்குலத்தோர் போற்றும் மாமனிதராகவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வழியில் வாழ்ந்தவருமான முத்துராமலிங்கத் தேவரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் இந்த சசிவர்ணத் தேவர். முத்துராமலிங்க தேவருடன் இவரும் பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர்.

ராமனாதபுரம் மாவட்டத்தில் டி.லாடசாமி குருவம்மாள் தம்பதியினருக்கு 1912இல் பிறந்தவர் சசிவர்ணம். 1934இல் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியினர் தங்கள் சமூகத்தை குற்றப் பரம்பரையினர் என்று முத்திரை குத்தியிருந்த கொடுமையை எதிர்த்துப் போராடினார். இவர்களுடைய போராட்டத்தின் காரணமாகத்தான் அந்தக் குற்றப் பரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார்.

1939இல் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 'பார்வார்டு பிளாக்' கட்சியில் சேர்ந்த போது, சசிவர்ணமும் அவருடன் பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போசை ஆதரிக்கும் கட்சி. புதிய அரசியல் அமைப்பின்படி நடத்தப்பட்ட முதல் தேர்தலில் இவர் இந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சென்னை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957 தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து பார்வார்டு கட்சி வேட்பாளராக நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தேவர் பெரும் வெற்றி பெற்றார். முதுகுளத்தூர் சட்டமன்றத்துக்கும் உறுப்பினராக இருந்த தேவர் அசெம்பிளி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்திற்கு சசிவர்ணத் தேவர் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

தொடர்ந்து முதுகுளத்தூர் பகுதியில் 1957இல் கலவரங்கள் நடந்தன. கலவரங்களை நிறுத்துவதற்காக சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அரசு முயற்சியில் இந்தப் பகுதியில் எல்லா ஜாதியினரும் அமைதியோடு வாழ வழிவகை காண்பதற்கு சமாதானக் கூட்டம் நடந்தது. அதில் சசிவர்ணம் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தேவர் சமுதாயத்தினர், நாடார் சமுதாயத்தினர், தேவேந்திர குலத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேவர் குலத் தலைவரும், மக்களின் அன்புக்குப் பாத்திரமானவருமான உ.முத்துராமலிங்கத் தேவர் 1963 அக்டோபர் 30இல் உடல் நலம் குன்றி காலமானார். அதனைத் தொடர்ந்து பார்வார்டு பிளாக் கட்சியின் தலைமைக்குப் போட்டி ஏற்பட்டது. சசிவர்ணத் தேவருக்கும் மூக்கையா தேவருக்கும் போட்டி. இதில் மூக்கையா தேவர் வெற்றி பெற்றதையடுத்து இந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சசிவர்ணத் தேவர் பிரிந்து போய் சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் எனும் கட்சியைத் தொடங்கினார்.

கட்சி அரசியலில் இவர்கள் பிரிந்திருந்தாலும், இவர்கள் அனைவருமே தேசபக்த சிங்கங்கள் என்பதில் ஐயமில்லை. நாடு சுதந்திரம் பெற்றதற்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் இவர்களுடைய பங்களிப்பு அளப்பற்கரியது. வாழ்க தேசபக்த சிங்கம் சசிவர்ணத் தேவர் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here