Followers

Thursday, November 29, 2012

எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்

                                                        எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்

செருகுடி அனந்தராம சுவாமி நாத ஐயர் எனவும் தஞ்சாவூர் சாமி நாத ஐயர் எனவும் எஸ்.ஏ.எஸ். என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் ஒரு வழக்கறிஞ்சர். அது தவிர பிரம்மஞான சபையில் உறுப்பினர், நல்ல நிர்வாகி இவையெல்லாவற்றையும் காட்டிலும் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்.

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தைச் சேர்ந்தவரான இவர் தனது இளமைக் கல்வியை அதே ஊரில் இருந்த ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் படித்தார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து எஃப்.ஏ. எனப்படும் இன்டர்மீடியட் படித்தார். தொடர்ந்து சென்னைக்குச் சென்று 1874இல் பட்டப் படிப்பை முடித்த பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.

வழக்கறிஞராக இவர் திறமையோடு பணியாற்றியதைத் தொடர்ந்து இவர் நாகப்பட்டினத்தில் அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டார். நாகப்பட்டினம் நகரசபை உறுப்பினராகவும் இவர் இருந்தார். அப்போது சென்னை சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் போட்டியிட்ட தொகுதி ஊராட்சி நகர் மன்றங்கள் தொகுதியாகும்.

அப்போதெல்லாம் இப்போது போல தொகுதிகள் கிடையாது. ஆசிரியர்கள், ஊராட்சி மன்றங்கள் போன்ற தனித்தனி தொகுதிகள் இருந்தன. இவரைத் தோற்கடித்தவர் திருச்சினாப்பள்ளியைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் ஐயர் ஆவார். 1883க்கும் 1885க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் தஞ்சாவூரில் பப்ளிக் பிராசிகியூட்டராக நியமனம் பெற்றார்.

அந்த பதவியை இவர் வகித்த காலத்தில் 1892இல் தஞ்சாவூர் மாவட்ட மிரசுதார்கள் அரசு அப்போது விதித்த நிலவரி அதிகரிப்பை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் சாமி நாத ஐயர்.

மிதவாத காங்கிரசார் மட்டுமே அப்போதைய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். பால கங்காதர திலகர் காலத்துக்குப் பிறகுதான் தீவிர காங்கிரசாரும், சுதந்திரம் எனது பிறப்புரிமை எனும் கோஷமும் எழுந்தது. சுவாமி நாத ஐயர் காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு பெட்டிஷன் போட்டு சலுகைகளைக் கேட்கும் மிதவாதம் மட்டுமே இருந்தது. அப்படிப்பட்ட மிதவாத காங்கிரஸ்காரராக திரு சுவாமி நாத ஐயர் விளங்கினார்.

காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாட்டோடு பிரம்மஞான சபையின் பால் ஈர்க்கப்பட்டார் இவர். இந்து மதத்தின் தேவையற்ற கசடுகளை நீக்கி உண்மையான பிரம்ம ஞானத்தைப் பரப்பும் நோக்கத்தோடு உருவான தியாசபிகல் சொசைட்டி எனப்படும் இந்த சபையில் அவர் ஆர்வம் கொள்ளத் தொடங்கி 1880 முதல் அதில் உறுப்பினராக ஆனார். இந்த சபையை உருவாக்கியவர் மேடம் பிளாவ்ட்ஸ்கி என்பவரும் கர்னல் ஹெச்.எஸ்.ஆல்காட் ஆகியோராவர். 1883யில் இவர் நாகப்பட்டினம் பிரம்ம ஞான சபையின் செயலாளராக ஆனார். தொடர்ந்து இவர் தஞ்சாவூர் வந்த பின்னர் தஞ்சை கிளையின் தலைவராக 1892இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னையில் இருந்த மஹாஜன சபையின் உறுப்பினர்கள் சேர்ந்து காங்கிரஸ் அமைப்பை உருவாக்க முடிவெடுத்து அதற்கான கூட்டத்தை பம்பாய் நகரத்தில் 1885இல்நடத்தினார்கள். அப்போதுதான் முதன் முதலாக காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. முதலில் அது ஒரு வெள்ளையரின் தலைமையில் தொடங்கப்பட்ட போதும், அந்த கூட்டத்துக்குச் சென்று கட்சி தொடங்கியவர்களில் சுவாமி நாத ஐயரும் ஒருவர். காங்கிரஸ் இயக்கம் அப்போது மக்கள் சங்கம் எனும் பெயரில் ஏற்பட்டபோது தஞ்சை மக்கள் சங்கத்தில் இவர் தலைவராக இருந்து செயல்பட்டார். பம்பாயில் நடந்த முதல் கூட்டத்தில் மொத்தமாக 72 பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேர் சென்னை ராஜதானியிலிருந்து சென்றனர். பம்பாயில் தேஜ்பால் சம்ஸ்கிருத கல்லூரியில் நடந்தது இந்தக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் சுவாமி நாத ஐயர் உப்புக்கு வரி போடும் வழக்கத்தை எதிர்த்து சிறப்பானதோர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1930இல் மகாத்மா காந்தி உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடத்தியதை நாம் அறிவோம். அதற்கு முன்பாகவே இந்தப் பிரச்சினை முதல் காங்கிரசிலேயே விவாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. உப்பு வரி தவிர சுவாமி நாத ஐயர் காங்கிரசில் குரல் கொடுத்த மற்ற பிரச்சினைகளில் கடுமையான சுங்க வரி மற்றும் பர்மாவை இணைத்துக் கொண்டது ஆகிய பிரச்சினைகளும் அடங்கும்.

                                            Delegates in the first Congress Session in 1885

இந்து கோயில்களின் நிர்வாகம் குறித்தும் இவர் ஆர்வம் காட்டினார். கும்பகோணம் தேவஸ்தான தேர்தலில் இவருக்கும் பூண்டி வீரையா வாண்டையார் அவர்களுக்குமிடையே போட்டி இருந்திருக்கிறது. 1888-89 ஆண்டுகளில் இவ்விருவர் கட்சிகளும் சமமான பலத்துடன் இருந்ததால் இவ்விருவர் கட்சியிலிருந்தும் மூன்று நபர்கள் தேவஸ்தானம் போர்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சுவாமி நாத ஐயர் கர்னாடக சங்கீதத்தில் ஆர்வமுடையவர். இவர் காலத்தில் தஞ்சையில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். சங்கீத ஆய்வில் முன்னணியில் இருந்த எஸ்.ஏ.கே.துர்கா இவருடைய பெயர்த்தி ஆவார்.
பிற்காலத்திய காங்கிரஸ் தலைவர்களோடு ஒப்பிடமுடியாவிட்டாலும் காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்த மிதவாத காங்கிரஸ்காரர் என்ற முறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் முதல் காங்கிரஸ் காரர் என்கிற முறையிலும் அவருடைய புகழ் வாழ்க!

No comments:

Post a Comment

Please give your comments here