Followers

Monday, July 11, 2011

பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ஆர்.

P.R.'s Centenary Photo

பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி

(இவர் பிறந்த நூற்றாண்டு விழா 2008இல் நடைபெற்றது. அது சமயம் பி.ராமமூர்த்தி குறித்து சி.ஐ.டி.யு. தலைவராக இருந்த பாண்டே என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் "பீப்பிள்ஸ் டெமாக்ரசி" எனும் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. தமிழகத் தியாகிகள் வரிசையில் இதற்கு முன்பு பி.ஆர். பற்றி ஓர் கட்டுரை வெளியாகியிருக்கிறது. இது முழுக்க முழுக்க அவர்கள் கட்சியின் பார்வையில், அதன் தலைவர்களில் ஒருவரால் எழுதப்பட்டது)

பி.ஆர். என்று கட்சிக்காரர்களாலும், தோழர் பி.ராமமூர்த்தி என்று அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது. 1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.
Communist symbol

1920இல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார். அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926இல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.
P.R. Addressing Public Meeting

1927இல் இங்கிலாந்திலிருந்து சைமன் என்பவர் இந்தியாவில் சுதேசித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தம் காண இந்தியா வந்தார். அவர் வரவை காங்கிரசார் எதிர்த்தனர். நாடு முழுவதும் "சைமன் திரும்பிப் போ" என ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அந்த சைமன் எதிர்ப்புப் போர் சுதேசிகளுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. பஞ்சாபில் லாலா லஜபதி ராய் போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்து பின்னர் இறந்து போனார். அலகாபாத்தில் நேரு உட்பட பல தலைவர்கள் போலீசார் தடியடியில் காயமடைந்தனர். தமிழ்நாட்டிலும் பல தலைவர்கள் கலந்து கொண்டு சிறைப்பட்டனர். பம்பாயில் சைமன் வந்து இறங்கியதும் ஒரு மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், போலீஸ் தடியடியும் நடந்தது. லாலா லஜபதி ராயைத் தடியால் அடித்த சார்ஜெண்ட் சாண்டர்ஸ் லாஹூரில் கொலை செய்யப்பட்டார். அதில் சம்பந்தப்பட்ட பகத் சிங் தொடங்கிய பாரதி நவ ஜவான் சபா எனும் அமைப்பில் ராமமூர்த்தி ஓர் உறுப்பினர் ஆனார்.
Ajoy Gosh

1929இல் லாஹூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். அப்போதெல்லாம் காங்கிரஸ் ஜனவரி 26ஐ சுதந்திர தினம் என்று கொண்டாடி வந்தனர். அந்த விழாவிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார். பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். அங்கு விடுதலை ஆன பிறகு சென்னைக்கு வந்து இங்கு அரசியல் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார். 1933இல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மகாநாட்டை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. தடையை மீறி மகாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. குதிரை மீதமர்ந்து போலீஸ் நடத்திய தடியடியில் ராமமூர்த்தி தாக்கப்பட்டார். அங்கு இருந்த காலகட்டத்தில் கம்யூனிச இயக்க நூல்களையும் காரல் மார்க்ஸ் நூல்களையும் படிக்க நேர்ந்தது. பி.சுந்தரையா எனும் கம்யூனிஸ்ட் தோழரின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. அவரோடு சேர்ந்து கொண்டு ஒரு சதி வழக்கிலும் இவர் பங்கு பெற்றார்.
EMS Namboodripad

அதன் பின் பாட்னாவில் நடந்த அகில இந்திய காங்கிரசிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார். காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரி சோஷலிச சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு கூட்டம் நடத்தினார். அதில் இராமமூர்த்தி கலந்து கொண்டார். அங்கு இவருக்கு மலையாளத்தைச் சேர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுடன் தொடர்பு ஏற்பட்டது. சென்னை திரும்பிய ராமமூர்த்தி ஏ.எஸ்.கே.ஐயங்காருடன் சேர்ந்து சென்னை மாகாண புரட்சிகர மாணவர் இயக்கத்தைத் தொடங்கினார். அதில் பி.சுந்தரையா கலந்துகொண்டு பேசினார். 1936இல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 1934இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர். சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

சென்னை தவிர, மதுரை, கோவை ஆகிய இடங்களிலும் இவரது தொழிற்சங்க பணி சிறப்பாக வளர்ந்து வந்தது. 1937இல் இந்திய மாகாண சர்க்காருக்கு ஆங்காங்கே தேர்தல் நடந்தது. சென்னை மாகாண தேர்தலையொட்டி ஜவஹர்லால் நேரு சென்னை வந்தார். அவருடைய தேர்தல் கூட்டச் சொற்பொழிவை ராமமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்தார். அதற்காக அவர் கூட்டம் முடிந்த பின் கைது செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி பெரு வெற்றி பெற்றது. இங்கு ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், ராஜாஜி பிரதமர் (அந்தக் காலத்தில் மாகாண முதல் மந்திரியை பிரதமர் என்றுதான் சொல்வார்கள்) பதவி வகித்த காலத்தில் இவர் பல தொழிலாளர் போராட்டங்களைத் தலைமை வகித்து நடத்தினார்.

1937இல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1939இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார். அவரும் வெற்றி பெற்றார். காந்தி பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்று ஒப்புக் கொண்டார். 1939இல் ஜெர்மனி போர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஹிட்லரின் இந்த யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் என்று முதலில் கம்யூனிஸ்டுகள் வர்ணித்தனர். யுத்த எதிர்ப்புக் கொள்கைக்கால பல கம்யூனிஸ்டுகள் கைதானார்கள்.

1940இல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். சென்னை சதி வழக்கு ((II): சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932இல் நடைபெற்றது. அது குறித்த ஒரு கட்டுரை இதே வலைப்பூவில் வெளியாகியிருக்கிறது. இது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார். சென்னையில் இவர்கல் ஒரு முகாம் அமைத்து, அங்கிருந்து அரசுக்கு எதிரான வெளியீடுகளை சுற்றுக்கு விட்டும், பிரச்சாரங்களில் ஈடுபட்டும் கட்சிப் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்காணித்த போலீஸ் இவர்களைக் கூண்டோடு கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். ஏ.எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் பாதிக்கப்பட்டவர்கள்.

1941இல் இவர்கள் எல்லோரும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெல்லாரி சிறை கொடுமையான சிறையாக இருந்த போதிலும் அங்கு ராமமூர்த்தி மற்ற கைதிகளை உட்காரவைத்து மார்க்சிசம் பற்றிய வகுப்புகள் எடுத்து வந்தார். 1941இல் ஜெர்மனியின் நாசி ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். ரஷ்யா மீது ஜெர்மனி படையெடுத்தது என்றவுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஹிட்லர் தங்கள் மீது படையெடுத்ததைப் போல உணர்ந்தனர். அது வரை ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட யுத்தம் இப்போது மக்கள் யுத்தம் என்று பிரகடனப் படுத்தப் பட்டது. இதையொட்டி இங்கிலாந்து நாடு ஜெர்மனிக்கு எதிராக நடத்தும் போருக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்தனர்.

முந்தைய நிலையில் பிரிட்டிஷ் அரசுக்கு போர் முயற்சிகளில் ஒத்துழைப்பு கிடையாது என்று இருந்த நிலையை ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் மாற்றிக் கொண்டு பிரிட்டிஷுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கலாயினர். அதனால் இவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர். ராமமூர்த்தியும் சிறையிலிருந்து வெளி வந்து சுதந்திர மனிதரானார். 1942 ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மகாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதில்தான் "வெள்ளையனே வெளியேறு" தீர்மானம் நிறைவேறியது. மகாத்மா காந்தி பேசும்போது இந்தப் போரில் ஒன்று செய்து முடிப்போம் இல்லையேல் செத்து மடிவோம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி "செய் அல்லது செத்து மடி" என்ற அறைகூவல் விடுத்தார். நேரு பேசும்போது, பிரிட்டிஷ் அரசு சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தானாக பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுப் போய்விடுவதுதான் புத்திசாலித்தனம். மக்களால் பிடரியைப் பிடித்துத் தள்ளும் நிலைமை வராமல் அவர்களாகவே போய்விட இது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு என்று பேசினார். பம்பாய் தீர்மானத்துக்கு கம்யூனிஸ்டுகள் பல வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வந்தனர். அவை தோற்கடிக்கப் பட்டன.

அன்று இரவே எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்டுகள் கைதாகவில்லை. அவர்கள் வெளியில் இருந்துகொண்டு காங்கிரஸ்காரர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்தினர். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் எனும் இடத்தில் நடந்த ஒரு ஆங்கில போலீஸ் அதிகாரியின் கொலையில் ராஜகோபாலன், காசிராஜன் எனும் இருவர் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். அதை எதிர்த்து வழக்காட ராஜாஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அதில் ராமமூர்த்தி செயலாளராக இருந்தார். முடிவில் அந்த வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப் பட்டு ஆயுள் தண்டனையாக ஆகியது. அதிலிருந்து அந்த ராஜகோபாலன் தூக்குமேடை ராஜகோபாலன் என்று அழைக்கப்பட்டார். ராமமூர்த்தி தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் சென்று பேசினார்.

1946இல் கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்ற காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. 1946இல் ராமமூர்த்தி மதுரையில் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்து போராடினார். அப்போது ராமமூர்த்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் தொழிலாளர்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர். எனினும் மதுரை சதி வழக்கு என்று ஒன்றை இவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தது. அதிலும் இவர் விடுதலையாகி விட்டார். சுதந்திரம் வரும் நேரம் இவரும் சுதந்திரமாக வெளிவந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

 1952இல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் அமைத்து, சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அரசு செய்யலானார். பி.ராமமூர்த்திதான் எதிர் கட்சித் தலைவர். மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் போல இனி இருக்க முடியுமா? சந்தேகம்தான்.

 1952இல் இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னி, வைகை என்று இரண்டு பெண்கள். 1953இல் பி.ராமமூர்த்தி மதுரையில் நடந்த கட்சி காங்கிரசில் போலிட் பீரோ உறுப்பினராக ஆனார். கட்சியின் பத்திரிகையான "நியு ஏஜ்" இதழின் ஆசிரியராகவும் ஆனார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் பெரும் தலைவராகவும் இவர் விளங்கினார். பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு தொழிற்சங்கம் அமைந்தது. சி.ஐ.டி.யு. என்பது அது. அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.

முதிர்ந்த வயதின் காரணமாக இவர் 1987, டிசம்பர் 15 அன்று காலமானார். தமிழகம் தந்த சிறந்த கம்யூனிஸ்ட் தலைவராக பி.ராமமூர்த்தி விளங்கினார். வாழ்க பி.ஆர். புகழ்!