Followers

Monday, July 25, 2011

வேலூர் சிப்பாய்கள் புரட்சி


வேலூர் சிப்பாய்கள் புரட்சி

1857இல் வட இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வேலை செய்த இந்திய சிப்பாய்களின் கலவரம் மிகப் பிரபலமானது. அதை வீர சவார்க்கர் முதல் பல சரித்திர ஆசிரியர்களும் முதல் சுந்ததிரப் போர் என்கின்றனர். அதற்கும் முன்னதாக தமிழ் நாட்டில் வேலூரில் சிப்பாய்கள் செய்த கலவரம் ஒன்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

தென் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியார் சிறுகச் சிறுகத் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டு வந்த நிலையில், தெற்கே பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மு நாயக்கரும், சிவங்கைச் சிங்கங்களான பெரிய மருது சென்ன மருது ஆகியோர் தூக்கில் போடப்பட்டு இறந்த பிறகு கிழக்கிந்திய கம்பெனி தென்னகத்தில் காலூன்றிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தது. சிவகங்கைப் போர் முடிந்தது. பெரிய மருதும் சின்ன மருதும் கொல்லப்பட்டு கொடுமையாக அவர்களது தலை துண்டிக்கப்பட்டு மக்கள் பார்வையில் படும்படி நட்டு வைக்கப்பட்டது. தென்னகம் முழுவதும் கம்பெனியின் அதிகாரத்திற்குட்பட்டு இருந்தது.

இந்த சூழ்நிலையில் இருட்டில் திடீரென்று தோன்றிய பளிச்சிடும் மின்னல் போல வேலூரில் ஒரு புரட்சி தொடங்கியது. 1806ஆம் வருஷம் வேலூரில் நடந்த நிகழ்ச்சி குறித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூறும் வரலாற்றை இப்போது பார்ப்போம்.
                                                    Vellore Fort - Another view
கோட்டையில் இளவரசர்கள்.

"வேலூர் நகரத்தில் சுற்றிலும் அகழிகளைக் கொண்ட மிகப்பெரிய கோட்டை ஒன்று இன்றும் இருந்துவரக் காண்கிறோம். ஆற்காட்டு நவாபின் ஆட்சியில் இருந்த இந்த கோட்டையானது கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கைகளுக்கு மாறியது. இதன் விளைவாக மைசூர் போரில் கம்பெனியாரிடம் தோல்வியுற்று மாண்டுபோன மாவீரன் திப்பு சுல்தானின் மக்கள் பிரிட்டிஷ் படைகளால் கைது செய்யப்பட்டு இந்த வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஏதோ ஒருவர் அல்லது இருவர் அல்ல. பதெனெட்டு பேர். ஆம்! ஆண் மக்கள் பன்னிருவர், பெண் மக்கள் அறுவர். இவர்களில் ஆண் மக்களில் இருவர்க்குத் திருமணம் ஆகியிருந்தது. இவர்களையும் சேர்த்து திப்புவின் குடும்பம் முழுவதையும் வேலூர் கோட்டையிலே குடியமர்த்தியது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. அவர்களுக்குத் தேவைப்படும் பணியாட்களையும் அமர்த்திக் கொடுத்து, நெருங்கிய சுற்றத்தாரையும் அவர்களுக்குத் துணை சேர்த்துக் கொடுத்தது. மாற்றான் மக்களாயினும் அவர்களுடைய சுதந்திரத்தைப் பறித்துக் கைது செய்திருப்பினும் அவர்களை மரியாதையாக நடத்தினர் கம்பெனியார்.

வெள்ளையர்களும், இந்தியர்களுமான ராணுவத்தினர் வேலூர் கோட்டையில் காவலுக்கு நிறுத்தப் பட்டனர். இந்திய ராணுவத்தினரிலே தமிழரும் இருந்தனர். அவர்கள் எண்ணிக்கையிலே மிகுதி என்று சொல்லப்படுகிறது.
                                                                     William Bentick
மதத்தில் தலையீடு.

இந்திய சிப்பாய்களிடம் மத ரீதியான மாறுதலை ஏற்படுத்த கம்பெனி முயன்றது. காதில் கடுக்கன் அணிவது தமிழர் வழக்கம். வேலூர் கோட்டையிலிருந்த சிப்பாய்களிலும் பலர் கடுக்கன் அணிந்திருந்தனர். அவர்கள் தங்கள் காதணிகளைக் கழற்றிவிட வேண்டுமென்று வெள்ளை ராணுவ அதிகாரிகள் ஆணை பிறப்பித்தனர். வழக்கமாகத் தலையில் அணிந்திருந்த குல்லாயிலும் மாறுதல் செய்யப்பட்டது. தோலால் ஆன காலணியும் வழங்கப்பட்டது. இந்த மாறுதல்களெல்லாம் தமிழினத்தைச் சார்ந்த சிப்பாய்களுக்குப் பிடிக்கவில்லை. அரை நூற்றாண்டுக்குப் பின், மத உணர்ச்சியைத் தாக்கக்கூடிய வகையில் இந்து சிப்பாய்களிடம் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட கம்பெனி ஆட்சி மாறுதல்களைத் திணித்ததால்தான் வடபுலத்தில் சிப்பாய்ப் புரட்சி தோன்றியது. அதற்கு முன்மாதிரியாக இருந்தன வேலூர் சிப்பாய்களிடம் வெள்ளை ராணுவ அதிகாரிகள் திணித்த மாறுதல்கள். இந்த மாறுதல்களை எதிர்த்த சிப்பாய்களில் பலரைக் கைது செய்து, அவர்களைச் சென்னைக்கு அனுப்பி அங்கே அவர்களுக்குக் கசையடித் தண்டனை வழங்கப்பட்டது.

நள்ளிரவில் பூத்த புரட்சி!

இந்தக் கொடுமை வேலூரிலே தங்கியிருந்த சிப்பாய்களிடையே பழிவாங்கும் உணர்ச்சியை உண்டாக்கியது. வேலூர்க் கோட்டையில் காவலில் வைக்கப்பட்ட மைசூர் இளவரசர்களும் சிப்பாய்களிடையே புரட்சியைத் தூண்டியிருக்க வேண்டும். கோட்டைக்கு வெளியே வேலூர் நகரில் வாழ்ந்த சுதந்திர உணர்வுடைய தமிழ் மக்களோடும் கோட்டையிலிருந்த புரட்சி மனம் படைத்த சிப்பாய்களும் இரகசியத் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.

1806ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதியன்று இரவு பிரிட்டிஷ் ராணுவத்தைச் சார்ந்த தளபதிகள் சிலர் கோட்டைக்குள்ளேயே இந்திய சிப்பாய்கள் மத்தியில் தங்கி உறங்கினர். காவலுக்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிப்பாய்களும் இரவு நேரத்தைக் கழிக்கக் கோட்டைக்குள்ளே தங்கினர். அன்று நடுநிசி கழிந்த பின்னிரவு நேரத்தில் சரியாக மூன்று மணிக்குப் புரட்சி வெடித்தது. போர்த்தளவாடங்கள் நிரப்பப்பட்டிருந்த அறையை இந்தியச் சிப்பாய்கள் கைப்பற்றினர். லெஃப்டினென்ட் கர்னல்கள் எண்மர் தங்கியிருந்த இல்லத்தையும் சிப்பாய்கள் முற்றுகையிட்டனர். தளபதிகளும் ஆங்கில ராணுவத்தினருமாக வெள்ளை நிறத்தவர் பலர் புரட்சி வீரர்களால் கொல்லப்பட்டனர். பல மணி நேரம் வேலூர்க் கோட்டைக்குள்ளே துப்பாக்கி வெடிச்சத்தம் ஓயவில்லை. பொழுது விடிந்து காலைக் கதிரவன் அடிவானத்தில் தோன்றிய பின்னரும் புரட்சி நீடித்தது. லெஃப்டினென்ட் கர்னல்களில் சிலர் எப்படியோ கோட்டையைவிட்டு வெளியேறித் தலைமறைவாயினர். கோட்டைக்குள்ளே பீரங்கிகளும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
                                                                     War Memorial
8 மணி நேரப் புரட்சி

கோட்டைக்குள்ளிருந்த சுமார் நானூறு வெள்ளை வீரர்களில் சுமார் இருநூறு பேர் வரை கொல்லப்பட்டு விட்டனர். கேப்டன் மாக்லாசலன் என்ற வெள்ளைத் தளபதி உள்ளிட்ட பலர் படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். இதற்குள் வெளியிலிருந்து வெள்ளைப் படைகள் தருவிக்கப்பட்டன. அப்படையினர் கோட்டையின் தலைவாயிலைக் கைப்பற்றி, கோட்டைக்குள்ளிருந்த படை வீரர்களை முற்றுகையிட்டனர்.

ஜூலை 9ஆம் தேதி பின்னிரவு நேரத்தில் தொடங்கிய புரட்சி 10ஆம் தேதி முற்பகல் வரை சரியாக எட்டு மணி நேரம் நடைபெற்றது. இதற்குள் காப்டன் யங், லெஃப். வுட்ஹவுஸ், கர்னல் கென்னடி ஆகிய ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆற்காட்டிலிருந்த தளபதி வெள்ளைப் படையைத் திரட்டிக் கொண்டு வேலூர் நகருக்கு விரைந்தான். ஆற்காட்டுப் படை இந்தியப் புரட்சி வீரர்களை வெற்றி கண்டு கோட்டையைக் கைப்பற்றியது. இந்தப் புரட்சியில் வேலூர் நகர மக்களிலே ஆண்களும் பெண்களுமாகப் பலர் பங்கு கொண்டனர் என்று "ஆற்காட்டு ரூபாயின் அருஞ்செயல்கள்" எனும் நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

புரட்சியில் தோற்ற இந்தியச் சிப்பாய்கள் வெள்ளையர்களால் பழிவாங்கப்பட்டனர். அவர்களில் சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கோட்டையிலும் வேலூரின் சுற்றுப் புறங்களிலும் வேட்டையாடி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியச் சிப்பாய்களை வெள்ளையர்கள் கைது செய்தனர்.

வெள்ளையனுக்கு வெற்றி

வேலூரில் நடந்த சிப்பய் புரட்சியானது எட்டு மணி நேரத்திற்குள் ஓய்ந்துவிட்டது. அதிலே இந்துக்களும், இஸ்லாமியர்களும் பங்கு கொண்டனர். இந்திய சிப்பாய்களிலேயே சிலர் துரோகிகளாக மாறி, ஆங்கில தளபதிகளிடம் புரட்சி வீரர்களின் அந்தரங்கத் திட்டத்தை முன்கூட்டி அறிவித்திருந்ததனால் வெள்ளையருக்கு வெற்றி கிடைத்தது. முஸ்தபா எனும் துரோகிக்கு இரண்டாயிரம் பகோடாக்களைப் பரிசாக அளித்து கெளரவித்தது வெள்ளை அரசு. துரோகச் செயலுக்குக் கிடைத்த வெகுமதி அது.

புரட்சிக்குப் பின்னர் அதிலே முன்னணியிலிருந்தவர்களுக்கு மரண தண்டனையும், ஆண்டுக் கணக்கில் சிறைத் தண்டனையும் கம்பெனி அதிகாரிகளால் விதிக்கப்பட்டன. வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த மைசூர் திப்பு சுல்தானின் மக்கள் கைதிகளாக இருந்த நிலையிலேயே, *கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டு அங்கே காவலில் வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் நிகழ்ந்தத்டாலும், தமிழரும் பங்கு கொண்டதாலும் மைசூர் சுல்தானின் மக்கள் சிறை வைக்கப்பட்டதன் காரணமாக எழுந்த வேலூர் புரட்சியானது சுதந்திரப் போரில் தமிழகம் ஆற்றியுள்ள பங்கிலே சிறப்பிடம் பெறுகிறதெனலாம்."

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கல்கத்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட மைசூர் புலி திப்புவின் மக்களின் கதி என்ன என்று பத்திரிகையாளர்கள் விசார்த்து அறிந்த வகையில், அவர்களின் வாரிசுகள் அங்கு குடியேறி, காலணிகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

1857 இந்திய சிப்பாய் கலகம் என்று வர்ணிக்கப்பட்ட 'முதல் சுதந்திரப் போருக்கு' முன்னதாக நடந்தது நமது வேலூர் சிப்பாய் புரட்சி. பெயர் தெரியாத அந்த வீரத் தியாகிகளுக்கு நமது வீரவணக்கங்களை அளித்திடுவோம். வாழ்க வேலூர் புரட்சி வீரர்கள் புகழ்!

2 comments:

  1. Hard earning freedom. Salute to the freedom fighter "the real heros"

    ReplyDelete
  2. வாழ்க புரட்சி வீரர்கள் புகழ்

    ReplyDelete

Please give your comments here