Followers

Thursday, February 10, 2011

கம்பன் அடிப்பொடி சா.கணேசன்


கம்பன் அடிப்பொடி சா.கணேசன்

காந்தியடிகள் 1927இல் காரைக்குடிக்கு வந்தபோது அவரைத் தமது "கற்பக நிலையத்துக்கு" அழைத்து பணியாற்றும் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் சா.கணேசன். அந்த நாள் முதல் அரசியலில் ஆர்வம் காட்டிய சா.கணேசன் 1936க்குப் பிறகு தேசியத்தில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

உலகத்தையே அதிசயத்தில் ஆழ்த்திய காந்தியடிகளின் தனிநபர் சத்தியாக்கிரக அறப்போர் மதுக்கடை மறியலாக கண்காட்சி என்ற பெயரில் நடந்த சூதாட்டக் கள மறியலாக ஆங்காங்கே பரிணமித்தபோது சா.கணேசன் 1941இல் காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் அந்த மறியல்களை நாடறிய நடத்தி காரைக்குடியிலிருந்து தன்னந்தனியராய்ப் பாதயாத்திரையாகச் சென்னைக்குச் சென்றார். வழியில் ஏற்பட்ட துன்ப அனுபவங்கள் அவரின் சுதந்திர தாகத்தை மேலும் தூண்டின. அவரது உடலின் ஒவ்வொரு ரத்த நாளமும் ராணுவ வீரனைப் போன்ற யுத்த எதிர்ப்பைக் காட்டிக் கொடுத்ததால் அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதன் பயனாய் நான்கு மாதம் உத்தரப் பிரதேசம் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கச் சூறாவளி எங்கும் பரவியது. அதனால் அந்நிய ஆதிக்கத்தின் அடக்குமுறை சூடேறிக் கனன்று கொண்டிருந்த உச்சமான காலம் அது. ஆகஸ்ட் போராட்டம் எனப் பிரகடனப் படுத்தப்பட்ட அந்தச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மறைந்திருந்தே வாலி மீது அம்பு தொடுத்த ராமனைப் போல தலைமறைவாயிருந்தே சா.கணேசன் போராட்டத்தை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.

கணேசனாரை எங்கு கண்டாலும் சுடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது பிரிட்டிஷ் அரசு. மாறு வேஷம் தரித்துக் கொண்ட நிலையில் பதுங்கிய்ப் பாய்ந்து கொண்டிருந்த சா.கணேசனின் இல்லம் அந்நிய அரசின் அநியாய ஜப்தியால் சின்னா பின்னப்பட்டது. அன்றைய மதிப்பில் மூன்று லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால் ஜப்தி இரகசியத்தை முன்பே தெரிந்து கொண்ட சா.கணேசன் நாம் அரிதாக முயன்று சேகரித்து வைத்திருந்த 5000 புத்தகங்களைக் கொண்ட நூல் நிலையத்தை மட்டும் காமதகனத்தில் தீக்கிரையாகாத கிளியைப் போல உறவினர்கள் நண்பர்கள் மூலமாகக் காப்பாற்றிக் கொண்ட திறன், அவர் கம்பன் அடிப்பொடியாக இலக்கிய உலகில் நிலைத்த புகழ் பெருமை பாராட்டு முதலியவையெல்லாம் பெறுவதற்குரிய அச்சாரத்தைத் தந்தது என்றால் அதில் மிகையில்லை.

இப்படி அஞ்ஞாதவாசம் போல் ஓராண்டு தலைமறைவாக இருந்தவர் மாறு வேடத்தில் மறைந்தே ரேக்ளா வண்டியில் சென்னை வந்தார். தம் பால் பரிவும் பாசமும் மிக்க நண்பர்களான மெ.நா.சித.சிதம்பரம் செட்டியார், எம்.என்.எம்.மெய்யப்பன், கி.நாராயணன் செட்டியார் போன்றவர்கள் காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவதைக் கேட்டறிந்து கண்ணீர் மல்கி கசிந்துருகினார். தம் அரசியல் குருவான ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் வேடம் கலைந்து வெளியே வந்து சென்னையில் காவல் துறையினரிடம் சரணடைந்து இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றார். சிறையிலிருந்த செல்வராக வெளியேறிய வீரத் தழும்பின் அரசியல் அடையாளம் தான் அவரைச் சட்டை அணியாத சா.கணேசனாகக் கண்டு கொண்டது உலகம்.
= தெ. முருகசாமி. நன்றி: தினமணி சுதந்திர பொன்விழா மலர்.

Wednesday, February 9, 2011

ராம்நாத் கோயங்கா



ராம்நாத் கோயங்கா

(தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய பத்திரிகைகளின் அதிபர். இந்திய சுதந்திரப் போரில் பல அதிசயிக்கத்தக்க காரியங்களைச் செய்து புகழ் பெற்றவர். இந்திரா காந்திக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் நடத்திய இரண்டாவது சுதந்திரப் போர் எனப்பட்ட புரட்சியின் ஆணி வேராக இருந்து செயல்பட்டவர். பத்திரிகைகளுக்கு எதிரான பிரிட்டிஷ் மற்றும் இந்திரா காலத்து அடக்குமுறைகளை எதிர்த்து நின்றவர். இவரைப் பற்றி இவரிடம் பணிபுரிந்த திரு ரா.அ.பத்மநாபன் தினமணி சுதந்திர தின பொன்விழா மலரில் ஒரு கட்டுரை எழுதினார். அதனை இப்போது மறுபடி படியுங்கள். நன்றி: திரு ரா.அ.பத்மநாபன் & 'தினமணி")

அக்கிரமத்தை அம்பலப்படுத்திய கோயங்கா

"தினமணி", "இந்தியன் எக்ஸ்பிரஸ்" அதிபர் ஸ்ரீ ராம்நாத் கோயங்கா சிறந்த தேசபக்தர். தேச பக்தரிலும், நிகரற்ற துணிச்சல் கொண்டவர். ஒவ்வொரு சமயம், வேறு யாருக்குமே தோன்றாத ஒரு செயலைத் தைரியமாகத் தன்னந்தனியே செய்து முடித்து நாட்டின் மதிப்பை உயர்த்தும் திறன் படைத்தவரும்கூட.

1942-ஆம் ஆண்டு நமது நாட்டின் அரசியல் சரித்திரத்தில் நெருக்கடியான ஆண்டு. அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்தது. சர்வாதிகாரிகளான ஹிட்லரும், முசோலினியும் அவர்களது கிழக்குக் கோடிக் கூட்டாளியுமான ஜப்பான் பிரதமர் டோஜோவும் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தார்கள். பிரிட்டனும், பிரான்சும் பல தோல்விகளைத் தழுவி வந்தன. மக்கள் சுதந்திரத்துக்காகப் போரிடுவதாக பிரிட்டன் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான இந்தியர்களைப் படை திரட்டி போரில் ஈடுபடுத்தி இந்திய சிப்பாய்களின் ரத்தத்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காக்க முயன்று வந்தது.

இந்தியப் படை வீரர்களின் தீரத்துக்கும் போர்த்திறனுக்கும் நிறையப் பாராட்டுக் கிடைத்தது. ஆனால், பிரிட்டனோ, "சண்டை முடிந்த பின் பொறுப்பாட்சி தருவதைப் பற்றிப் பார்க்கலாம்" என்று மழுப்பி வந்தது.

இந்த நிலையில் பொறுமையின் பூஷணமான மகாத்மா காந்தியும் பொறுமை இழந்தார். "இனி பொறுக்க முடியாது. வெள்ளையனே வெளியேறு. இந்திய மக்களே, சாவு நேர்ந்தாலும் சரி, விடாமல் போரிடுங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.

அவ்வளவுதான், நாடெங்கும் பிரிட்டனுக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்தார்கள். பிரிட்டிஷ் யுத்த முயற்சிக்கெதிராக குக்கிராமங்கள் முதல் தலைநகரம் வரை ஒரே எதிர்ப்பு. லட்சோபநட்சம் மக்களைச் சிறையில் தள்ளினார்கள்.

பேச்சுச் சுதந்திரமோ, எழுத்துச் சுதந்திரமோ, பத்திரிகை சுதந்திரமோ ஏதும் இல்லை. பாரதமே ஒரு பெரிய சிறைச் சாலையாக விளங்கியது.

இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் கூடி என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார்கள். பிரிட்டிஷ் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாக நாட்டிலுள்ள எல்லாப் பத்திரிகைகளும் கால வரையின்றி மூடிவிட வேண்டும் என்றார் காந்தியடிகள். தமது "ஹரிஜன்" முதலிய பத்திரிகைகளையும் அவ்வாறே மூடிவிட்டார். மற்ற பத்திரிகைகளோ ஒரு நாள் அடையாள நிறுத்தம் செய்தால் போதுமென தீர்மாந்திதன.

ராம்நாத் கோயங்காவோ காந்தியடிகளின் விருப்பப்படி நடப்பதே சிறந்ததென தமது பத்திரிகைகள் எல்லாவற்றையும் காலவரையின்றி நிறுத்திவிட்டார்.

ஆனாலும், நாடெங்கும் நடக்கும் அராஜக பிரிட்டிஷ் கெடுபிடிகள் உலகறியச் செய்ய வேண்டும் என்று கோயங்கா துடித்தார். அநியாயம் நடக்கும்போது சும்மா இருப்பதாவது. தமது பத்திரிகைகளை நிறுத்தி விட்டதால் தூங்கிக் கொண்டிருந்த பெரிய அச்சகத்திற்கு ரகசியமாக ஒரு வேலை கொடுத்தார். நாட்டில் எங்கு பார்த்தாலும் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தார். அவைகளை எல்லாம் திரட்டிக் கணிசமான ஒரு நூலாக உருவாக்கினார். காதோடு காதாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சான அந்த ஆங்கில நூலுக்கு "இந்தியாவில் படுகொலை" (India Ravaged) என்று தலைப்புத் தந்தார்.

நூலின் பிரதிகளை, பரம ரகசியமாக பிரிட்டிஷ் பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் அனுப்பி வைத்தார். பிரிட்டிஷ் மந்திரிகளுக்கும்தான் அது மட்டுமல்ல. அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா முதலிய வேறு பல நாடுகளின் முக்கியத் தலைவர்களுக்கும் நூலை அனுப்பினார். இதை பிரிட்டிஷார் அறியா வண்ணம் அவர் அனுப்பி வைத்தது சாதனையிலும் சாதனை எனலாம்.

அவ்வளவுதான், பிரிட்டிஷ் பார்லிமெண்டில் கேள்விகள் மேல் கேள்வி எழுந்தது. பிரிட்டிஷ் அரசு பதில் சொல்ல முடியாமல் திகைத்தது. சுதந்திரத்துக்காகப் போரிடுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவில் லட்சக்கணக்கான ஜனங்களை சிறையில் தள்ளி கெடுபடி ஆட்சி நடத்தி வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் போலி வேஷம் உலகறியத் தெரியலாயிற்று. உலக அரங்கில் பிரிட்டனின் புகழுக்குப் பெரிய அடி கிடைத்தது. தீரர் ராம்நாத் கோயங்காவின் அதிசயச் சாதனையால் உண்மையை உலகம் உணர்ந்தது. பிற்காலத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரலாம் என பிரிட்டிஷ் தொழிற் கட்சி அரசு முடிவு செய்ய இந்த அபிப்பிராய மாற்றம் உதவியது என்று சொல்லலாம்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.