Followers

Thursday, January 6, 2011

தியாகி முத்துவிநாயகம்

தியாகி முத்துவிநாயகம்

தியாகி முத்துவிநாயகம் 1914இல் தூத்துக்குடியில் பிறந்தார். மகாத்மா காந்தியடிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினார். காங்கிரசில் சேர்ந்த நாள் முதலாக இறுதி வரை இவர் கதர் உடைகளைத்தான் அணிந்திருந்தார். 1930இல் காங்கிரசில் சேர்ந்த இவர் 1931, 32இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்,                    
        
அன்னிய துணி எதிர்ப்பு இயக்கத்திலும் ஈடுபட்டார். அப்போது இவர் சிறுவனாக இருந்த காரணத்தால் இவர் தண்டிக்கப்படவில்லை.

1943இல் ஸ்ரீ வைகுண்டத்தில் ஒரு காங்கிரஸ் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீஸ்காரர்களின் மிரட்டல் காரணமாக அந்த கூட்டம் நடைபெற முடியாமல் போனது. இதனைக் கேள்விப் பட்ட முத்துவிநாயகம் தானே ஒரு தமுக்கை எடுத்துக் கொண்டு போய் அடித்துத் தெருத் தெருவாக பொதுக்கூட்டம் நடக்கும் விவரத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டத்துக்கு அழைத்தார். அந்தக் கூட்டத்தில் இவரே இரண்டு மணி நேரம் பேசினார். மறுநாள் இவர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார்.

1935இல் தூத்துக்குடி ஹார்வி மில் தொழிலாளர்களுக்காகத் தொழிலாளர் சங்கம் அமைத்தார். 1935இல் கோவில்பட்டி கடைத்தெருவில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார். அதனை போலீஸ் தடை செய்தது. தடையை மீறி அந்தக் கூட்டத்தில் பேசினார் முத்துவிநாயகம். அப்படி இவர் தடை செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய குற்றத்திற்காக 2 மாதம் 15 நாட்கள் சப் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தார்.

1935இல் இவருக்குத் திருமணம். இவரது மனைவியும் காங்கிரஸ்காரர். கதர்தான் அணிவார். ரஞ்சிதம் என்று பெயர். கணவன் மனைவி இருவரும் தேச சேவையில் ஒற்றுமையாக ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தில் பிரச்சினைகள் இல்லை. 1937இல் இளைஞர்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்து அதில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்து அதில் ஷாகீத் பகத் சிங்கின் படத்தை எடுத்துச் சென்றார். போலீசார் தடை விதித்திருந்தும் தடையை மீறி இவர் அந்த ஊர்வலத்தை நடத்தினார். ஊர்வலம் பாதி தூரம் போயிருந்த போது போலீஸ் அதனை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தியது. அதில் இவர் மண்டை உடைந்து படு காயம் அடைந்தார்.

1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கோர்ட்டுக்கு முன்பு மறியல் நடத்தினார். அன்றே அவர் கைது செய்யப்பட்டு கொக்கிரகுளம், வேலூர், சென்னை ஆகிய ஊர் சிறைகளில் அடைபட்டுக் கிடந்து 2 வருடம் 9 மாதம் கழித்து விடுதலையானார். வாழ்க தியாகி முத்துவிநாயகம் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here