Followers

Thursday, January 6, 2011

ஏ.பி.சி.வீரபாகு

விடுதலைப் போராட்ட வீரர் ஏ.பி.சி.வீரபாகு

தென் தமிழ்நாடு சுதந்திர வேள்விக்காகப் பல தொண்டர்களை, வீரர்களைக் கொடுத்திருக்கிறது. அத்தகைய வீரப் பெருமக்களில் ஏ.பி.சி.வீரபாகுவும் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பிறந்தவர். இவரது தந்தையார் வேலாயுதம் பிள்ளை என்பார். இவர் அப்போதைய பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தன்னுடைய இருபதாவது வயதில் மியன்மாரிலுள்ள (பர்மா) யெங்கூன் (ரங்கூன்) சென்று அங்கு அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அப்போதெல்லாம் பர்மா இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்து வந்தது, அதனால்தான் இந்திய எல்லைக்குள் அவர் வேலைக்குப் போகமுடிந்தது.

அவர் ரங்கூனில் இருந்த காலகட்டத்தில் நாட்டின் சுதந்திரப் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. மகாத்மா காந்தியடிகளின் தலைமையை ஏற்று இவரும் சுதந்திரப் போரில் ஈடுபட முடிவு செய்தார். மகாத்மா 1930இல் தண்டியை நோக்கி உப்பு எடுக்கும் சத்தியாக்கிரகப் போரினைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மகாத்மாவுடன் அந்தப் போரில் ஈடுபட்டுச் சிறை செல்லத் தயாராகினர்.

அன்பர் ஏ.பி.சி.வீரபாகுவும் தனது அரசாங்க வேலையை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து வேலையை ராஜிநாமா செய்தார். திருநெல்வேலிக்குத் திரும்பிய வீரபாகு 1931இல் காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினராகி கடுமையாக உழைக்கத் தொடங்கினார். இவரது அயராத உழைப்பு, நேர்மை, வீரம் இவற்றால் இவர் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் முக்கியமான உறுப்பினராகச் செயல்படத் தொடங்கினார்.

1932இல் சாத்தான்குளத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் சர்தார் வேதரத்தினம், கோவை ஐயாமுத்து, ஏ.பி.சி.வீரபாகு ஆகியோர் பேசினர். அந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு 1930 ஏப்ரலில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது அல்லவா? அப்போது அங்கு வேதரத்தினம் பிள்ளைக்கு மிகவும் வேண்டியவரான நாவிதர் இளைஞர் ஒருவர் போலீஸ்காரர்களுக்கு சவரம் செய்ய மறுத்து வந்தார். ஒரு நாள் ஒரு போலீஸ்காரர், அவர் வெளியூர்க்காரர் வேலையை முன்னிட்டு அங்கு வந்திருந்தவர், இந்த இளைஞரிடம் முகச்சவரம் செய்து கொள்ள வந்து அமர்ந்தார். அவர் ஒரு போலீஸ்காரர் என்பது அந்த இளைஞர்க்குத் தெரியாது. அதனால் அவர் முகத்தில் சோப்பு நுரை போட்டு சவரம் செய்யத் தொடங்கினார். பாதி சவரம் ஆகியிருக்கலாம், அப்போது யாரோ ஒருவர் சவரம் செய்து கொண்டிருந்தவர் போலீஸ்காரர் என்று தெரிந்து கொண்டு, என்னப்பா போலீஸ்காரர்களுக்கு செய்யமாட்டேன் என்று சபதம் செய்தாய், இப்போது செய்து கொண்டிருக்கிறாயே என்று கேட்டு விட்டார். அவ்வளவுதான் அந்த இளைஞர் தனது சவரப் பெட்டியை மூடிவிட்டு நான் தொடர்ந்து சவரம் செய்ய முடியாது, எழுந்து போய்விடுங்கள் என்றார்.

அந்த போலீஸ்காரர் கேட்க மறுத்தார். இப்போது நீ சவரம் முழுவதையும் செய்து முடிக்கிறாயா அல்லது கோர்ட்டுக்குக் கொண்டு சென்று தண்டனை வாங்கித் தரட்டுமா என்றார். அப்போதும் அந்த இளைஞர் சளைக்கவில்லை. அவரைப் பிடித்துக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினார். அங்கிருந்த அதிகாரி, போடா, போய் அவருடைய சவரத்தை முடித்துவிட்டுப் போ என்றபோதும் அவர் மறுத்து விட்டார். உடனே அவரைக் கொண்டு போய் ஒரு மாஜிஸ்டிரேட் முன்பாக நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர். அந்த மாஜிஸ்டிரேட் இளைஞரிடம் என்னப்பா ஏன் இப்படி செய்கிறாய். முரண்டு பிடித்தால் தண்டிக்கப்படுவாய். போய் ஒழுங்காக அவரது சவரத்தைப் பூர்த்தி செய்துவிட்டு வீட்டுக்குப் போ என்றார். அந்த இளைஞர் சாவதானமாக தன்னுடைய சவரப் பெட்டியைக் கொண்டு போய் மேஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போய் வைத்துவிட்டு, ஐயா, அதுமட்டும் நம்மால முடியாதுங்க. நான் சபதம் எடுத்தது எடுத்ததுதாங்க. வேணும்னா நீங்க செஞ்சுவிட்டுடுங்க என்று சொன்னார். கோர்ட் கொல்லென்று சிரித்தது. முடிவு கேட்க வேண்டுமா, இளைஞருக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை.

கதை அதோடு முடிந்ததா? இல்லை இதுகுறித்து பொதுக்கூட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை இந்த நிகழ்ச்சியை வர்ணித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நீதிபதி அங்கு வந்தார் தன்னுடைய காரில். கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அவர் காரை சூழ்ந்துகொண்டு கேலி செய்து அவரை விரட்டிவிட்டனர். உடனே அவர் வேதரத்தினம் பிள்ளை மீது ஒரு வழக்குப் போட்டு அவருக்கு ஆறுமாத தண்டனை வாங்கிக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை சாத்தான்குளத்திலும் போய் இவர்கள் பேச அங்கும் இவர்களுக்கு தண்டனை கிடைத்தது. அதில் சிறைக்குப் போனார் ஏ.பி.சி.வீரபாகு. இவருக்குக் கிடைத்தது இரண்டரை ஆண்டு கடுங்காவல்.

வெள்ளைக்காரர்கள் அரசாங்கத்தில் போலீசும், சிறைக்கூடமும் சித்திரவதைக் கூடமாக விளங்கி வந்தது. வீரபாகு அப்போது பெல்லாரி சிறையில் இருந்தார். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்து இரண்டு சுதந்திரப் போர் வீரர்கள் மகாவீர் சிங், தத்தா ஆகியோர் மீது போலீசுக்கு அடக்க முடியாத வெறி. அவர்களைத் தினந்தோறும் காலையில் வரிசையில் நிற்கும்படி கூறி, காவல் கைதிகளாக வந்த அவர்களைக் கிரிமினல்கள் போல நடத்தினர். இதைக் கண்டு அவர்கள் கொதித்து எதிர்த்தனர். அதனால் ஆத்திரமடைந்த இன்ஸ் எனும் சிறை அதிகாரி அவர்கள் இருவருக்கும் இரண்டு டஜன் கசையடி கொடுக்க ஆணையிட்டான். அப்படி அவர்கள் அடிபடுவதை மற்ற கைதிகள் பார்க்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டான்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஏ.பி.சி.வீரபாகு அந்தச் சிறை அதிகாரியிடம் பாய்ந்து சென்று ஆட்சேபம் தெரிவித்தார். அந்த அதிகாரி இன்சிடம் இவர் போய், நீ அடிப்பது போதாதென்று எங்களையும் பார்க்கச் சொல்லுகிறாயா? என்று உறுமினார். அவன் வீரபாகுவை மிருகத் தனமாக தடிகொண்டு அடித்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்தான். அத்தகைய உரமும், நேர்மையும் உடைய தேசபக்தர் வீரபாகு. வாழ்க ஏ.பி.சி.வீரபாகுவின் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here