Followers

Friday, November 5, 2010

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி மாநகரம் பல நூறு தியாகிகளை இந்திய சுதந்திரத்துக்கு அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட பல தியாகிகளில் வக்கீல் ரா.நாராயண ஐயங்கார் என்பவர் முதன்மையானவர். அவர்களுடைய காலம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதால், சுதந்திரப் போர் முக்கியமான கட்டத்தை நெருங்கிய சமயத்தில் இவர்கள் எல்லாம் களத்தில் இல்லை. அதனால் பெரும்பாலும் இவர்களது வரலாறு வெளியே வராமலேயே போய்விட்டது. என்றாலும் இவர்களது பங்களிப்பு மறக்கக்கூடியவைகள் அல்ல.

1919இல் பஞ்சாபில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையை அடுத்து நாட்டில் பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்பு அதிகமாகியது. மகாத்மா காந்தி ஒத்துழையாம இயக்கத்தைத் தொடங்கினார். 1919இல் தமிழகத்தில் திருநெல்வேலியில் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து தீரர் சத்தியமூர்த்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவரது தீர்மானத்தை மிதவாத காங்கிரசைச் சேர்ந்த சர் சி.பி.ராமசாமி ஐயரும், சீனிவாச சாஸ்திரியாரும் எதிர்த்துப் பேசினர். அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டு சட்டசபைகளுக்குப் போகவேண்டுமென்பது அவர்களது வாதம். இவர்களது எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக இவ்விருவரும் காங்கிரசிலிருந்து வெளியேறிவிட்டனர். இவ்விதம் அந்தக் காலத்தில் தீவிர வாதிகள், மித வாதிகள் என்ற ரீதியில் காங்கிரசார் பிரிந்திருந்தனர். இதில் ரா.நாராயண ஐயங்கார் தீவிரவாத கோஷ்டியில் அங்கம் வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் நாராயண ஐயங்கார் சட்டக்கல்வி படித்து வக்கீலாகத் தொழில் தொடங்கினார். காங்கிரஸ் இயக்கத்திலும் இவர் தீவிரமாக பங்குபெறத் தொடங்கினார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் அலுவலகம் சின்னக்கடைத்தெருவின் அருகில் இரட்டை மால் வீதியில் இருந்தது. அப்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் சுவாமிநாத சாஸ்திரி, சையத் முர்டூசா சாஹேப் ஆகியோர் முக்கிய பதவிகளில் இருந்தனர். 1920 வாக்கில் வ.வெ.சு.ஐயரும் மாவட்ட காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.

அப்போது திருச்சி தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆசிரியர் கல்கி அவர்கள் தனது படிப்பை நிறுத்திவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இப்படி இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக ஊர் ஊராகச் சென்று பஞ்சாப் ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றியும், நாட்டுக்கு சுயராஜ்யம் தேவை என்பதைப் பற்றியும் பேசினார்கள். ரா.கிருஷ்ணமூர்த்திக்கு (கல்கி) நல்ல குரல் வளம். மென்மையான கீச்சுக்குரல். அவர் மகாகவி பாரதியாரின் பாடல்களை அருமையாகப் பாடுவார்.

1921இல் கதர் மற்றும் இந்தி பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த வடநாட்டுக் காரரான பிரதாப்நாராயண வாஜ்பாய் என்பவர் திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் பேசிய பேச்சுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஓராண்டு சிறையும், இவரது உரையை தமிழில் மொழிபெயர்த்த பாலகிருஷ்ண சாஸ்திரிக்கு ஓராண்டு சிறையும் கொடுக்கப்பட்டது. பின்னர் இவர் சிறையிலிருந்து வெளிவந்த பின் உடல்நலம் கெட்டு காலமானார். அவரது ஈமக் கிரியைகளை பாலகிருஷ்ண சாஸ்திரியே செய்தார்.

1925இல் அகில இந்திய கதர் நூல் நூற்போர் சங்கத்தின் தலைவராக க.சந்தானம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் செயலாளராக ரா.நாராயண ஐயங்கார் பணி புரிந்தார். திருச்சி தியாகி சங்கிலியாப் பிள்ளை கதர் வஸ்திராலய ஊழியராகப் பணிபுரிந்தார். இந்தக் கதர் கடை திருச்சி பெரிய கடைத்தெருவில் பீமா லஞ்ச் ஹோம் எதிரில் இருந்தது.

1926-27இல் மகாத்மா காந்தி தென்னிந்திய சுற்றுப்பயணம் வந்தார். அப்போது அவர் திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்தில் தங்கினார். அவருடன் ராஜாஜி, மகாதேவ தேசாய், கஸ்தூரிபாய், மீராபென் ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த வீட்டில் காவல் வேலையைச் செய்தது தொண்டர் ரா.நாராயண ஐயங்கார்.

மகாத்மா காந்தி அப்போது திருச்சியில் இருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயரின் மனைவி வந்து அவரைச் சந்தித்து சேரன்மாதேவி குருகுல உரிமைகள் அனைத்தையும் மகாத்மாவிடம் ஒப்படைத்தார். 1930இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இயக்கத்தின் பொறுப்பை போகும் வழியிலுள்ள ஊர்களில் கவனித்துக் கொள்ள ரா.நாராயண ஐயங்கார் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் கல்லணையில் தொண்டர்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யக்கூடாது, உணவு அளிக்கக்கூடாது என்று தஞ்சை கலெக்டர் தார்ன் போட்டிருந்த உத்தரவுக்கு எதிராக மக்கள் ரகசியமாக மரத்தில் சோற்று மூட்டைகளைக் கட்டி வைத்து தொண்டர்களை எடுத்துச் சாப்பிடும்படி ரகசிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

உப்பு சத்தியாக்கிரகத்துக்கு உதவுவதற்காக திருச்சியில் ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த முகாம் நடத்த கிலேதார் தெருவில் இருந்த நீலாம்பாள் எனும் அம்மையார் தனது வீட்டைக் கொடுத்திருந்தார். அவரை போலீசாரும், அரசாங்க அதிகாரிகளும் எவ்வளவோ மிரட்டியும் அவர் படிந்து வரவில்லை. முகாம் அங்குதான் நடந்தது. ஒவ்வொரு நாளும் அந்த முகாமிலிருந்து ஐம்பது தொண்டர்கள் வேதாரண்யம் பயணமாயினர்.

அப்போது நாராயண ஐயங்காருக்கு விருதுநகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் கல்யாண கோஷ்டியொன்று விருதுநகரிலிருந்து வருகிறது. அவர்களை ரயில் நிலையத்துக்கு வந்து சந்திக்கவும் என்று இருந்தது. இவருக்கு ஒன்றும் புரியவில்லை. யாருக்குக் கல்யாணம். அந்த கல்யாண கோஷ்டியில் வருபவர்கள் யார்? ஒன்றும் தெரியவில்லை. விலாசமும் சரியாகத்தான் இருந்தது. சரி எதற்கும் போய் பார்க்கலாம் என்று இவரும் போய் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். ரயில் நின்றது. அதிலிருந்து ஒரு கோஷ்டி. அதில் ஒருவருக்கு மஞ்சள் வேட்டியணிந்து மாலையுடன் இருந்தார். அவருடன் அவர் தோழர் ஒருவர். இவர்களுக்குப் பாதுகாப்பாக போலீசார். பார்த்தால் ஒருவர் காமராஜ், மஞ்சள் வேட்டிக்காரர் அவரது தோழர் முத்துச்சாமி. அவரது திருமண வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு திருச்சி அழைத்து வரப்பட்டிருந்தார் முத்துச்சாமி. உடன் காமராஜ். அந்த கோஷ்டியை டாக்டர் ராஜன் இல்லம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.

உப்பு சத்தியாக்கிரகம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் நாராயண ஐயங்காருக்கு வேதாரண்யத்திலிருந்து ஒரு கடிதம். கு.லட்சுமணசாமி முதலியார் என்பவர் எழுதியிருந்தார். அதில் "இங்கு கிரெளன் பிராண்ட் சரக்கு ரொம்பவும் மும்முரமாக எடுபடுவதால், அதனுடன் போட்டிபோடக்கூடிய நல்ல சரக்குகளை அனுப்பவும்" என்றிருந்தது. இது என்ன? ஒன்றும் புரியவில்லையே என்று இவருக்குக் குழப்பம். அதன் பொருள் பின்னர் இவருக்குப் புரிந்தது. அது "அங்கு போலீசின் அடக்குமுறை அதிகமாக இருக்கிறது. ஆகையால் அதனை எதிர்த்து நிற்கக்கூடிய தொண்டர்களை அனுப்பவும் என்று இருந்தது.

இவர்கள் முகாம் நடத்த இடம் கொடுத்த நீலாம்பாள் பற்றி சொன்னோமல்லவா? போலீஸ் அவரை மிரட்டியபோது, வீடு தன்னுடையது அதனை இவர்களுக்கு வாடகைக்குத் தந்திருக்கிறேன் என்று பதில் சொல்லும்படியும் அவருடைய வக்கீல் சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் சாட்சிக் கூண்டில் ஏறி, தான் விரும்பிதான் இந்தப் பணிக்காக தனது வீட்டைக் கொடுத்ததாகக் கூறி சிறை புகுந்தார்.

ரா.நாராயண ஐயங்கார் தண்டிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவருக்குக் கல் உடைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. வக்கீலாக இருந்தவர் அங்கு போய் கல் உடைத்தார். வக்கீலான இவரை சிறையில் 'சி' வகுப்பில் வைத்திருந்ததனால் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் கிளர்ச்சி செய்து இவருக்கு 'பி' வகுப்பு கிடைக்க வகை செய்தது. விடுதலையாகி இவர் திருச்சி வந்தபோது இவருக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. "சங்கு" கணேசனுடன் சேர்ந்து "காங்கிரஸ்மேன்" எனும் வாரம் மும்முறை பத்திரிகை நடத்தினார். திருச்சி தியாகி எஸ்.வெங்கட்டராமன் தொடங்கி நடத்திய "ஜெயபாரதி" எனும் பத்திரிகையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். "இந்துஸ்தான்" எனும் வார இதழில் 11 ஆண்டுகள் பணி. 'தினமணி', 'சுதேசமித்திரன்' ஆகியவற்றில் சுதந்திர எழுத்தாளராக அடிக்கடி எழுதிவந்தார். தனது எண்பதாவது வயதைத் தாண்டி வாழ்ந்த இவர் திருச்சியில் காலமானார். திருச்சி மாவட்டம் அளித்த சிறந்த தியாகிகளில் ரா.நாராயண ஐயங்காரும் ஒருவர். வாழ்க அவரது புகழ்!

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை தந்த பல தேசபக்தர்களில் பழனிக்குமாரு பிள்ளையும் ஒருவர். இவர் 24-9-1898இல் பிறந்தார். 1908இல் தேச விடுதலைக்காக நடைபெற்ற போராட்டம் இவரை இழுத்துக் கொண்டது. அப்போது சுயராஜ்ய வேட்கை உள்ளவர்கள் பலர் இந்தியாவில் புதிது புதிதாகத் தோன்றிய பல ஆன்மிக, அரசியல் இயக்கங்களில் சேரந்தனர். அதன்படி இவர் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினர் ஆனார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு சுயராஜ்யக் கட்சி என்று தனியாக காங்கிரசிலிருந்து பிரிந்து போய் ஒரு கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக பழனிக்குமாரு பிள்ளை பதவி வகித்தார்.

சுதந்திரப் போராட்டம் நேரடியாக இந்திய சுதந்திரம் எனும் கோரிக்கையை வைத்துப் போராடுவதற்கு முன்பாக மகாத்மா காந்தியின் ஆணைக்கிணங்க பல சமூக, அடித்தட்டு மக்களைக் காப்பாற்றும் பல இயக்கங்களை அறிவித்தார். அதில் ஒன்றுதான் ஏழை உழைப்பாளிகளை குடியின் கேட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற கள்ளுக்கடை மறியல் போராட்டம். 1922இல் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஒரு வாரம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கூட்டங்களில் பேசும்போது எதிர்கட்சியாக இருந்த ஜஸ்டிஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி இவர் பல முறை அவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். 1930இல் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரையிலான உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை மேற்கொண்டார். அதில் இவர் தொண்டராகக் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், உப்பு சத்தியாக்கிரகத்தை ஆதரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அதன் காரணமாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு சிவகாசி சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இவர் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

1932ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். ராமநாதபுரம், மதுரை ஆகிய ஜில்லாக்களில் காங்கிரஸ் கமிட்டியில் போராட்டக் குழுவில் தலைமை வகித்து இவர் வழிநடத்திச் சென்றதால் இவர் மீது வழக்கு வந்தது. மறியல் நடத்தியக் குற்றத்துக்காக இவருக்கு 2 வருட தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் தண்டனைகளை அலிப்பூர், திருச்சி சிறைகளில் கழித்து விடுதலையானார்.

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் (தீச்சட்டி கோவிந்தன்) மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில் இவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவருக்கெதிராக வலுவான சாடிசிகள் எதுவும் இல்லாமல் போகவே இவர் விடுவிக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவரது தீவிரமான ஈடுபாட்டைக் கவனித்த போலீஸ் இவரை போலீஸ் காவலில் வைத்துக் கொண்டு, சில நாட்களுக்குப் பின் வெளியே விட்டனர்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, ந.சோமையாஜுலு, காமராஜ் ஆகிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் பழனிக்குமாரு பிள்ளை. பெருந்தலைவர் காமராஜருடன் ஒன்றாக இவரும் அவரும் ஒரே சிறையில் இருந்திருக்கின்றனர். இவருக்கு காமராஜருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது விருதுநகரில். அப்போது இவர் அவ்வூரில் ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார். இவர் பொது நலனுக்காக அயராது பாடுபட்டு எப்போதும் பிறருக்கு உதவுவதிலேயே காலத்தைச் செலவிட்டார். இவர் 14-7-1977இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க பழனிக்குமாரு பிள்ளையின் தியாகம்!

ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரை ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரையைச் சேர்ந்த இந்த இஸ்லாமியப் பெரியவர் தன்னுடைய சுதந்திரப் போராட்ட வாழ்க்கையை 1910இல் அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தோடு தொடங்கினார். இவர் பல மொழிகளில் வல்லுனர். இவர் மேடையேறி பேசினால் அனைவரும் ஆழ்ந்து கவனிப்பர். இவருடைய பேச்சுக்கள் எப்போதும் வீண் பேச்சாக இருந்ததில்லை. பல மொழி நூல்களிலிருந்தும், பல்நாட்டு அறிஞர் பெருமக்களின் உரைகளிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசுவார். அவர் பேசுகிறார் என்றால் மதுரையிலும் சுற்று வட்டாரங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வர். அன்றைய ஆங்கில ஆளும் வர்க்கத்தை இவர் தனது பேச்சினால் கலங்க அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போதைய மதுரை மாவட்டம் மிகப் பெரிய அளவுடையது. அங்கெல்லாம் இவர் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊக்கினார். கம்பீரமான இவரது தோற்றமும், பேச்சும் அவற்றில் பொதிந்து கிடக்கும் சுதந்திர வீராவேசமும் மக்களிடையே ஒரு எழுச்சியை ஊட்டுவதாக அமைந்திருந்தது. 1921இல் இவர் நிலக்கோட்டை தாலுகாவில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடைகளுக்குத் தொண்டர்களோடு போய் அங்கு குடிக்க வரும் மக்களை பணிவோடு வேண்டிக் கொள்வார். குடிக்காதீர்கள். குடித்தால் நீங்களும், உங்கள் குடும்பமும் அழிந்து போகும். மனத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போதையில் மனிதர்களை இருக்க வைத்து வெள்ளைக்காரன் இந்த நாட்டில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறான். பெற்ற பொன்னாட்டையும், பிறந்த ஊரையும் அன்னியனுக்கு அடிமையாக்கப் போகிறீர்களா? குடித்துவிட்டு போதை மயக்கத்தில் சாக்கடையில் விழுந்து கிடக்கப் போகிறீர்களா? சுதந்திரப் பொன்னாட்டைப் பார்க்கப் போகிறீர்களா. அப்படியானால் குடியை இன்றோடு நிறுத்தி விடுங்கள் என்பார்.

அதற்கு பதில் என்ன தெரியுமா? குடிகாரர்கள் ஏசுவார்கள். சிலர் அடிப்பார்கள். எச்சிலை உமிழ்வார்கள். கள்ளுக்கடைக் காரர்கள் அடியாட்களைக் கொண்டு தொண்டர்களை அடித்து விரட்டுவார்கள். இத்தனையும் எந்த முணுமுணுப்புமின்றி காந்திய வழியில் அகிம்சை முறையில் இவர் எதிர் கொள்வார். எத்தனை பெரிய மனிதர். இப்படி குடிகாரர்களிடமும், கள்ளுக்கடை அடியாட்களிடமும் அடிவாங்குகிறாரே என்று மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம், ஆதரவு பெருகி வரத் தொடங்கிற்று. தூய வெண்ணிற ஆடை, இஸ்லாமியருக்கு உரிய தாடி, தலையில் குல்லாய், கரங்களில் மூவண்ணக் கொடி, கண்களில் சுதந்திர வெறி இவற்றோடு இந்தத் தூயவரைப் பார்த்த மக்கள் இவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர்.

இவரை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத ஆளும் வர்க்கமும் அவர்களது அடிவருடிகளும் இவரை ஒரு கொள்ளை வழக்கில் சம்பந்தப் படுத்தி வழக்குத் தொடுத்தனர். வழக்கு நடந்து செஷன்ஸ் கோர்ட்டுக்குச் சென்றது. அங்கு இவருக்கு எதிரான எந்தப் புகாரும் போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை என்று இவர் விடுதலையானார். பொய் வழக்குப் போட்டுவிடுவது எளிது. ஆனால் அந்தப் பொய்யிலிருந்து விடுபட்டு உண்மையை வெளிக் கொணர்ந்து வெற்றிகரமாக வெளிவருவது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. ஹாஜி முகமது மெளலான சாகிப் இதில் வழக்காடி வெளியே வந்தார்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அங்கு இவரது பேச்சு மதுரை மாவட்டத்தை விட்டு வெளியே வந்து சென்னை மாகாண பிரதிநிதிகளின் மத்தியில் வெளிப்பட்டது. இவரது பேச்சில் இருந்த வேகம் ஆட்சியாளர்களை மிரளவைத்தது. செடிஷன், அதாவது ராஜத்துரோகம், கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு இவர் மீது போடப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932ஆம் வருடம் மதுரை நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

தேசத்தை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அந்த அளவுக்கு இவர் தனது மதத்தையும் மதித்தார். தேசபக்தி, மதபக்தி இரண்டும் இவரது இரண்டு கண்கள். இப்படிப்பட்ட தேசிய முஸ்லிம்கள் அன்று நாட்டு சுதந்திரத்துக்குப் பாடுபட்டதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இவரது பெயர் சுதந்திரப் போராளிகள் வரிசையில் மதுரையில் சிறப்பாகப் பேசப்பட்டது. மதுரை முனிசிபல் உதவி சேர்மனாகவும், பின்னர் சேர்மனாகவும் இருந்து மதுரை நகரத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். சிறப்பாக தென் மாவட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை மிகச் சிறப்பாகப் பேணிக் காப்பாற்றப்பட்டது.

எந்த ஊருக்குப் போனாலும் சரி, எந்த அவசர வேலைகளுக்கிடையிலும் அந்தந்த வேளைகளில் தொழுகைக்குப் போவதை நிறுத்தியதே கிடையாது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறையிலிருந்த முஸ்லீம்கள் தொழுகை நடத்தத் தனி இடம் ஒதுக்கித் தரப் போராடி வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல, இருண்டு கிடந்த சிறைச்சாலைகளில் விளக்குகளும், குடிதண்ணீர் வசதிகளும் இவர் வாங்கித் தந்தார். இவர் 1886இல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. வாழ்க ஹாஜி முகம்மது மெளலான சாகிப் புகழ்!