Followers

Monday, August 2, 2010

தியாகசீலர் ந.சோமையாஜுலு

தியாகசீலர் ந.சோமையாஜுலு
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தான் முதன்முதலாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்முழக்கத்தை எழுப்பியது. இங்கு ஏராளமான தேசத் தொண்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். முதன்முதலாக ஆங்கிலப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்து மரண தண்டனைக்கு உள்ளான கட்டபொம்மு நாயக்கர், சுதேசிக் கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, இந்தியரைப் புல்லிலும் கேவலமாகக் கருதிய கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீரவாஞ்சி, இவர்கள் வாழ்ந்த பூமி இது. இங்குதான் தியாகசீலர் ந.சோமையாஜுலு பிறந்தார்.

திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் எனுமிடத்தில் 1902 டிசம்பர் 28ஆம் தேதி சோமசுந்தர ஐயர் சீதையம்மாள் தம்பதியருக்குப் பிறந்த குழந்தைதான் நரசிம்ம சோமையாஜுலு. இவரது இளமைக்காலக் கல்வி தூத்துக்குடியில்தான் நடந்தது. இளம் வயதில் விளையாட்டுகளிலும், உடற்பயிற்சியிலும் ஆர்வம் நிறைந்தவராக இருந்தார். அவர் மாணவராக இருந்த காலத்தில் வ.உ.சியின் தேசிய இயக்கப் போராட்டங்கள் இவர் மனதில் கிளர்ச்சியையும், உறுதியையும் ஏற்படுத்தின. அந்தக் காலத்தில் காவல்துறையினர் செய்த அத்து மீறல்கள், அக்கிரமங்கள் இவர் மனதில் புயலை எழுப்பின. ஓரளவு விவரம் புரிந்த வயதில் இவர் வ.உ.சியையும், சாது கணபதி என்ற வழக்கறிஞரையும் சந்தித்திருக்கிறார். இவரது கல்லூரி பருவத்தில் இவரது தேசியப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாகியது. வ.உ.சி.யே இவரது ஆதர்ச தலைவராக விளங்கினார். அவரது துணிச்சலும், நேர்மையும், கொண்ட காரியத்தில் விடாமுயற்சியும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்.

மகாகவியின் இறப்புக்கு முன்பு சோமையாஜுலு அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறார். அவர் பாடல்களைப் பாடும் போது கேட்டிருக்கிறார். இவையனைத்தும் திருநெல்வேலிக்கு பாரதி வந்த போது நடந்தது. இவர் முதன்முதலாக கலந்து கொண்ட தேசியப் போராட்டம் 1920இல் நடத்திய ஒத்துழையாமை இயக்கம். அது முதல் இவர் பல காங்கிரஸ் மாநாடுகளுக்குச் சென்று வரலானார். பல பெரிய தலைவர்களின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. அதோடு இவர் ஆசிரியர் பணியிலும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

1924இல் திருவண்ணாமலையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குப் பல தொண்டர்களைத் திரட்டி அனைவரும் மதுரையிலிருந்து நடந்தே திருவண்ணாமலை சென்றடைந்தனர். வழிநடையின் போது அவர்களுக்குச் சிரமம் தெரியாமல் இருப்பதற்கு பாரதியின் பாடல்கள் பயன்பட்டன. இப்போது கேரளத்தில் இருக்கும் வைக்கம் நகரில் நிலவிய தீண்டாமையை எதிர்த்து மதுரக் ஜார்ஜ் ஜோசப் தலைமையில் பலரும் சென்று கலந்து கொண்டனர். அப்போது சங்கரன்கோயிலில் இருந்த சோமையாஜுலுவும் தொண்டர்கள் புடைசூழ வைக்கம் செல்லப் புறப்பட்டபோது, போராட்டம் முடிவடைந்துவிட்டது என்று செய்தி வரவே பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

வ.உ.சியின் வலது கரம் போல செயல்பட்ட சுப்பிரமணிய சிவா, வ.உ.சியுடன் சிறை சென்றவர். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்கப் பாடுபட்டவர். அவரோடு சோமையாஜுலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிவாவைத் தனது குருவாக பாவித்தார் சோமையாஜுலு. அப்போது நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் ஒரு ஆசிரமம் நிறுவினார். அதுமுதல் சோமையாஜுலுவுக்கு வ.வெ.சு.ஐயரின் நட்பும் கிடைத்தது.

1924இல் பம்பாய் மாகாணம் பெல்காம் நகரில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்காக மதுரையிலிருந்து பெல்காம் வரையிலான 1100 கி.மீ தூரத்தை பல தொண்டர்களைக் கூட்டிக் கொண்டு சோமையாஜுலு கால்நடையாகவே புறப்பட்டுப் பாதயாத்திரை சென்றார். மாநாடு முடிந்து திரும்பும் போதும் நடந்தேதான் திரும்பி வந்தனர். 1927இல் நாகபுரி வேளேந்தும் போராட்டத்தையொட்டி மதுரையில் சோமையாஜுலு பல காங்கிரஸ் தொண்டர்களுடன் வாள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். அடுத்து கர்னல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்திலும் இவர் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போரின்போது இந்தியச் சிப்பாய்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சி செய்து பல மாதங்கள் வடமாநிலங்களைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அடக்கும் விதமாக கர்னல் நீல் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் கல்கத்தா சென்று ஆங்கிலப் படையுடன் சென்று வழிநெடுக அப்பாவி மக்களைப் பெண்கள், குழந்தைகள் உடபட பலரைக் கொன்று இந்தியச் சிப்பாய்களை அடக்கிக் கொடுமை புரிந்தவன். அவனுக்குச் சென்னையில் சிலை வைத்திருந்தார்கள். அந்தச் சிலையை அகற்ற ஓர் போராட்டம் நடந்தது. எனினும் 1937இல் ராஜாஜி அமைச்சரவை அமைந்ததும் முதல் வேலையாக அந்த நீலன் சிலை அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டது. எதிர்த்த ஆங்கில ஆதரவாளர்களுக்கு ராஜாஜி சொன்ன பதில், அதி எங்கள் சிலை, அதனை எங்கு வேண்டுமானாலும் வைப்போம் என்பதுதான்.

1930இல் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை அடுத்து சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் முதல் 15 நாட்கள் யாத்திரை செய்து உப்பு அள்ளிய நிகழ்ச்சி நடந்தது. இந்தப் போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் தொண்டர்களைச் சேர்க்கும் பணியும் மதுரையில் நடந்தது. அதில் ந.சோமையாஜுலுவின் முயற்சியால் முப்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களை மதுரை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பொதுஜன தொடர்பு வேலையை சோமையாஜுலு ஏற்றுக் கொண்டார்.

இவர் கோவில்பட்டியில் பேசிய ஒரு பொதுக்கூட்டச் சொற்பொழிவிற்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு ஆறுமாத கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்த வழக்கு நடந்த காலத்திலேயே இவர் மீது மேலும் பல வழக்குகள் போடப்பட்டன. ஆறுமாத தண்டனை முடிந்து வெளியே வரும்போது மறுபடி கைதுசெய்யப்பட்டு மறுபடி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது இவருக்கு.

மதுரையில் சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது போலீசின் கடுமையான தடியடிக்கு ஆளானார் இவர். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் இவருக்கு. கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு இவர் மீண்டும் தடியடிக்கு ஆளானார். 1932இல் இவருக்கு பத்து மாதம் சிறை தண்டனை கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி எண்ணங்கொண்ட தலைவர்கள் கூடி 1937இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி எனும் அமைப்பை ஏற்படுத்தினர். அதில் இவர் இணைந்தார். 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது இவர் யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் கைது செய்யப்பட்டார். 1940இல் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் காங்கிரஸ் நடத்திய உச்ச கட்டப் போராட்டம். வெள்ளையனே வெளியேறு போராட்டம். இதிலும் இவர் கைது செய்யப்பட்டார், ஆனால் இவரது உடல்நிலை காரணமாக இடையில் விடுதலையானார். கல்கி அவர்கள் எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்டத் தொடங்கியபோது அந்தக் குழுவில் செயலாளராக இருந்து உழைத்தவர் சோமையாஜுலு. இந்திய சுதந்திரத்துக்குப் பின் 1952இல் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து பெரும் வெற்றி பெற்றார். இவரைப் பற்றி மிக உயர்வாக எழுதியுள்ள பெரியோர்கள் இவரைச் "சொற்சோர்விலாத சோமையாஜுலு" என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தியாகிகள் வரலாற்றைத் தொகுக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. அப்படி திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதி தியாகிகள் வரலாற்றினைத் தொகுத்து வெளியிட்டார் நா.சோமையாஜுலு அவர்கள். 1972இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தினைத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதையும் இந்த நாட்டுக்காகச் செலவிட்ட தியாகி நா.சோமையாஜுலு அவர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீங்கி அமரரானார். வாழ்க நா.சோமையாஜுலு புகழ்!

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

ஓமந்தூர், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் திண்டிவனத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள சின்னஞ்சிறு கிராமம். இந்த கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முத்துராம ரெட்டி ரங்கநாயகி தம்பதியருக்கு ஓர் தவப்புதல்வன் பிறந்தான். அந்தக் குழந்தைதான் பின்னாளில் சென்னை மாகாண அரசியலில் பெருமைக்குரியவராக விளங்கிய ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆவார். அரசியலில் நாணயம், ஒழுக்கம், எளிமை, பொறுப்புணர்ச்சி, கடமை தவறாமை இப்படிப்பட்ட தவக்குணங்கள் பெற்று விளங்கியவர்கள் மிகச் சிலரே. அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராகவும், பின்னாளில் காமராஜ் அவ்வளவு குணங்களையும் தன்னகத்தே எற்றுக் கொண்டவராக விளங்க அவருக்கு வழிகாட்டியாக விளங்கியவரும் இந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தான்.

இளம் வயதில் தந்தையை இழந்த ஓ.பி.ஆர் தன் கல்வியை மட்டும் விடாமல் தொடர்ந்தார். கற்பதில் ஆர்வமும், கற்றதை நடத்தையில் காட்ட ஊக்கமும் உடையவராக விளங்கினார் இவர். இலக்கணம் கற்றார், சமய, ஆன்மிக, நீதி நூல்களைக் கற்றார், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளையும் கசடறக் கற்றார். அவரது அறிவும் ஞானமும் விசாலமடைய அடைய அவர் சிந்தனையும் பரந்து விரிந்ததாக, 'சர்வோ ஜனஹ ஸுகினோ பவந்து' இவ்வுலக மாந்தரெல்லாம் நலமோங்கி வாழ்க எனும் மந்திரத்தைத் தனது வாழ்க்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு விளங்கினார். ஊருக்குள் இவருக்கு நல்ல பெயர், போதாதற்கு இவர்தான் அவ்வூரின் மணியகாரர். மக்கள் இவருக்கு அளிக்கும் மரியாதைக்குக் கேட்க வேண்டுமா? உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்போர் நேர்மை, இரக்கம், தூய்மை இவற்றின் இருப்பிடமாக இருந்தால் கேட்க வேண்டுமா? இவரிடம் மக்கள் அன்பு மட்டுமல்ல, பக்தியே செலுத்தி வந்தார்கள்.

இவர் அடிப்படையில் ஒரு விவசாயி. தானே களத்தில் இறங்கி விவசாயம் பார்த்து, அதில் தேவையான முன்னேற்றங்களைச் செய்து அனுபவ விவசாயியாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷியிடம் இவருக்கு ஈடுபாடு, பக்தி. தியாகி வெங்கம்பூர் சாஸ்த்திரி என்றொருவர். அவர்தான் ரெட்டியார் மனதில் தேசிய விதையை ஊன்றி, அதை நன்கு வளர்த்து விட்ட அரசியல் குரு. இவரது அயராத காங்கிரஸ் பணி, தன்னலமற்ற தொண்டு இவரை 1930ஆம் ஆண்டில் தென் ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆக்கியது. இவர் தென் ஆற்காடு மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்து நாட்டின் அரசியல் நிலமையை மக்களுக்கு விளக்கி, கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

காந்தி ஆசிரமம் ஒன்றை சிறுவந்தாடு எனும் கிராமத்தில் தொடங்கி நடத்தினார். தென் ஆற்காடு மாவட்டத்தில் 1927 தொடங்கி 1934 வரையிலான காலகட்டத்தில் பல காங்கிரஸ் மகாநாடுகளைக் கூட்டி மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு காலத்தில் தென் ஆற்காடு மாவட்டம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் தலமை அகமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனி கவர்னராக இருந்த இடம் கடலூர்தான். இங்குள்ள ஒரு மைதானத்தில் எந்தவொரு நிகழ்ச்சியையும் பொதுமக்கள் நடத்தத் தடை இருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஓமந்தூரார் அங்கு ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதிகார வர்க்கம் செய்வதறியாது விழித்தது. ஓமந்தூரரின் புகழ் பெருகியது. கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அம்மாவட்டத்தின் காங்கிரஸ் இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.

1920இல் நாகபுரியில் சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குச் சென்று வந்த ஓ.பி.ஆர். தென் ஆற்காடு மாவட்ட அரசியல் மாநாட்டைக் கூட்டினார். இதில் பண்டித அசலாம்பிகை அம்மையார், 'தி ஹிந்து' ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கிருஷ்ணசாமி சர்மா வ.உ.சி. தண்டிக்கப்பட்டபோது கரூரில் அந்த தண்டனை தீர்ப்பை எதிர்த்து பேசிய பேச்சுக்காக சிறை தண்டனை பெற்றவர்.

1933இல் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து மாவட்ட மாநாட்டை நடத்தினார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தொண்டர்களை அனுப்பிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதுதான் அவரது முதல் சிறை வாசம்.

அதற்கு அடுத்த ஆண்டே, மகாத்மா காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டாம் முறையாக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு இவர் ஊரின் ஓரத்தில் ஒரு ஓலைக் குடிசை அமைத்து அதில் வசிக்கலானார். அரசியலும் ஆன்மீகமும் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் பலரும் இவரைத் தேடி அங்கு வரலாயினர். அந்தக் காலத்தில் தென் ஆற்காடும், செங்கல்பட்டும் இணைந்தது ஒரு பாராளுமன்றத் தொகுதி. இங்கு எம். பக்தவத்சலத்தின் மாமனாரும் பிரபல காங்கிரஸ் தலைவருமான முத்துரங்க முதலியார் காங்கிரஸ் சார்பிலும், கேசவன் எனும் ஜஸ்டிஸ் கட்சிக்காரரும் இங்கு போட்டியிட்டனர். இதில் முத்துரங்க முதலியார் வென்றார்.

1936 தேர்தலில் இம்மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான போட்டி காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும். இதில் ஓ.பி.ஆர். முனைந்து ஈடுபட்டு காங்கிரஸ் சார்பில் ந.சோமையாஜுலு, பசும்பொன் தேவர், ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி ஆகியோரை அழைத்து கூட்டங்கள் நடத்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் பயனாக அகில இந்தியாவும் ஓ.பி.ஆரை. கவனிக்கத் தொடங்கியது. யார் இந்த சாதனையாளர் என்று. ஓ.பி.ஆரின் பெயர் தமிழகமெங்கும் பரவியது.

1938இல் இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார். இவரது புரட்சிகரமான போக்கும், முற்போக்குச் சிந்தனைகளும் இவருக்கு கட்சியிலும் சரி, உறவிலும் சரி எதிர்ப்புகள் அதிகம் ஏற்பட்டன. எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாத, ஊழலற்ற, நேர்மையான இவரைப் போன்ற அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜம்தான். என்ன செய்வது? புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்பதற்காகவும் இவர் பாடுபடலானார். இவரை ஆதரித்துப் பல தலைவர்கள் அன்று அந்த போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர்.

1942 ஆகஸ்ட் 8, பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போரில் ஒன்று செய், அல்லது செத்து மடி எனும் வேத வாக்கியத்தை மகாத்மா தொண்டர்களுக்கு வழங்கினார். அன்று இரவே அங்கு வந்திருந்த அத்தனை தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஓமந்தூராரும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு 18 மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இது இவரது நான்காவது சிறை வாசம்.

இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றும் உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது. சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச்பால்டு நை முதலானோர் இந்த வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தென் ஆற்காடு மாவட்ட கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றது அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும், அதன் பின்னால் இந்திய குடியரசு ஆனபிற்பாடு 1952இல் ராஜாஜியும் 1954இல் காமராஜ் அவர்களும் அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும், ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது. வாழ்க ஓமந்தூரார் புகழ்!