Followers

Saturday, May 29, 2010

திருமண விருந்துகளில் தேவையா இந்த ஆடம்பரம்?

தமிழ்நாட்டு திருமண விருந்துகளில் தேவையா இந்த ஆடம்பரம்?

சமீபத்தில் ஓர் ஆங்கில நாளிதழில் தமிழ்நாட்டில் திருமண விருந்துகள் பற்றிய கட்டுரையொன்றைப் படித்தேன். பழைய காலத்தில் தலைவாழை இலைபோட்டு நமது பாரம்பரிய உணவு வகைகளைப் பரிமாறி விருந்து படைக்கும் முறையிலிருந்து நவீன பாணியில் நட்சத்திர ஓட்டல் போன்றவற்றில் நடக்கும் விருந்துகள் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார் கட்டுரையாளர். முற்றிலும் நமது பாரம்பரிய உணவு வகைகளுக்கு மாறாகக் கையில் தட்டை ஏந்தி, பெயர் தெரியாத பல உணவு வகைகளை, ஒவ்வொரு வகை உணவையும் தானே எடுத்துப் போட்டுக்கொண்டு நின்று கொண்டு ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, தட்டைக் கொண்டு போய் ஒரு கூடையில் போட்டுவிட்டு கைகழுவும் புதிய பாணி பந்தி பரிமாறல் பற்றிய கட்டுரை அது. இந்த வகை சாப்பாட்டுக்காக இவர்கள் செய்கின்ற செலவு திருமண செலவில் பாதியை விழுங்கி விடுகிறது. மீதி பாதியைத் திருமண மண்டபங்களுக்காகச் செலவு செய்யப்படுகிறது. இந்த ஆடம்பரங்கள் நீக்கப்பட்டு உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்தினால் எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதைச் சற்று சிந்தித்தால் என்ன?

இன்று தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விக்கின்ற அனைவருமே மைலாப்பூர், அடையாறு, ஆழ்வார்பேட்டை அல்லது அண்ணா நகரில் வசிக்கும் செல்வந்தர்கள் அல்ல. ஏழை எளியவர்களும், மாத வருவாயில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து பிள்ளைகளின் திருமணத்துக்கென்று சேமித்து செலவு செய்பவர்கள்தான் இருக்கிறார்கள். திருமணம் ஆன தினத்திலிருந்தே குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்குக் கல்விச் செலவு, திருமணச் செலவு இவற்றுக்காக தங்களது ஒரு வேளை சாப்பாட்டைக் கூட தியாகம் செய்து சேமிக்கும் தம்பதியர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் நமது கலாச்சாரப்படியும், சாஸ்த்திர முறைப்படியும் திருமணங்களைச் செய்யத்தான் விரும்புகிறார்கள். ஆனால் இன்றைய நாகரீகச் சூழலில் வெளியில் நடைபெறும் இதுபோன்ற ஆடம்பரத் திருமணங்களைப் பார்த்த பின் குறிப்பாக பெண்கள், நமது மகளுக்கும் இதுபோல பெரிய திருமண மண்டபத்தில் இதுபோலவே புதுமையான விருந்தைப் படைக்க வேண்டும் என்று ஆசைப்படத் துவங்குகிறார்கள். அப்படி ஆழம் தெரியாமல் இந்த ஆடம்பரங்களுக்குப் பலியாகி போண்டியானவர்களும் உண்டு.

ஆனால் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் செய்தி என்ன தெரியுமா? இன்னமும் சென்னைக்கு வெளியே பெரும்பாலான ஊர்களில் நமது பாரம்பரிய முறை திருமணங்களும் விருந்துகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஓருசில இடங்களில் சென்னையைப் போன்ற ஆடம்பர, நாகரிகமான, ஐந்து நட்சத்திர ஓட்டல் அல்லது திருமண கூடங்களில் நவீன முறை விருந்துகளும் நடைபெறத் தொடங்கிவிட்டன என்பது வருத்தத்துக்குரிய செய்திதான்.

தமிழ்நாட்டு மக்களில் எத்தனை பேர் அருசுவை அரசு நடராஜனைக் கொண்டோ, அல்லது சென்னையிலுள்ள திருமண ஒப்பந்தக்காரர்களான மீனாம்பிகா, ஞானாம்பிகா, மூகாம்பிகா, சரஸ்வதி போன்ற திருமண ஏஜன்சிக்கள் மூலமாகவோ தங்கள் வீட்டுத் திருமணங்களை ஏற்பாடு செய்யும் வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். மேட்டுக்குடி
மக்களின் நாகரிகம் சாதாரண ஏழை எளிய சாமானிய மக்களையும் மெல்ல மெல்ல தழுவத் தொடங்கிவிட்டது நமது கெட்ட காலம்.

முன்பெல்லாம் கிராமங்களில் திருமணம் செய்வதற்கு மண்டபங்களை நாடுவதில்லை. வீடுகளும் பெரிய பெரிய வீடுகளாக இருக்கும் ஒரு வீட்டில் திருமணம் என்றால் அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் எல்லாம் தத்தமது வீடுகளையும் திருமணத்துக்காக உபயோகித்துக் கொள்ள அனுமதி தருவார்கள். விருந்தினர்கள் இப்படிப் பல வீடுகளிலும் தங்கிக் கொள்வார்கள். தெரு நிறைந்த பந்தல் போடப்பட்டு அது நிறைய விருந்தினர்கள் அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு அவ்வப்போது கொண்டு வந்து தரப்படும் காபி டீ, அல்லது குளிர் பானங்களை அருந்திக்கொண்டு நான்கு நாட்கள் திருமண நிகழ்ச்சியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். இப்போது நான்கு நாள் திருமணமும் வேண்டாம், வீட்டுக்குள்ளேயே திருமணமும் வேண்டாம். வாடகை குறைவான மண்டபத்தில், எளிமையாக நமது பாரம்பரியமுறைப்படி நடத்தினால் என்ன?

முன்பெல்லாம் அந்தந்தப் பகுதிகளில் திருமண சமையலுக்கென்று பிரபலமான சமையற்காரர்கள் இருந்தார்கள். குறிப்பாக மாயவரம் என்றால் காவேரிப்பட்டினம் வைத்தா, திருவெண்காடு அகோரம் ஐயர், நாராயண ஐயர், கும்பகோணம் சாட்டை வெங்கட்டராமன் இப்படி எத்தனை பெயர்கள் அன்று பிரபலமாக இருந்தன. உணவுக்கான அத்தனை சாமான்களுக்கும் அவர்கள் ஒரு பட்டியல் போட்டு கொடுத்து விடுவார்கள். இலை, காய்கறி முதல் அத்தனை சாமான்களையும் வாங்கி வந்து உக்கிராண அறையில் நிரப்பி அதற்கு ஒரு நிர்வாகியும் நியமிக்கப்படுவார். மாப்பிள்ளை அழைப்புக்கு முந்தின நாள் மாலை சமையற்காரர்கள் வந்து இறங்கி விடுவார்கள். முதலில் அடுப்புக்கு பூஜை போட்டுவிட்டு வேலையை ஆரம்பிப்பார்கள். சீர் வரிசைக்கும், விருந்தில் பரிமாறவும் தேவையான இனிப்பு வகைகள் அங்கே செய்யப்படும். ஒரு புறம் சிலர் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருப்பார்கள். ஊறப்போட்ட தானியங்களை கல்லுரலில் சிலர் அரைத்துக் கொண்டிருப்பார்கள். இப்படி கோலாகலமாக சாப்பாட்டு வேலை தொடங்கி திருமணத்துக்கு மறுநாள் காலையில் கட்டுச்சாதக் கூடை கட்டி அதில் பலவிதமான கதம்ப சாதங்களை எல்லாம் தயார் செய்து சம்பந்திகளுக்குக் கொடுத்து அனுப்பும் வரை சமையற்காரர்களின் பணி இடைவிடாது நடைபெறும். பரிமாறுவதற்கு மட்டும் அதிகப்படியான நபர்களை வரவழைத்து முஹூர்த்தம் முடிந்த பிறகு அவர்கள் அனுப்பப்பட்டுவிடுவார்கள். இப்படி கல்யாண சமையல் என்பது பார்த்தும், அருந்தியும் ரசிக்க வேண்டிய செயல்களாக இருந்தன.

அதுமட்டுமல்ல, நமது பாரம்பரிய உணவு வகைகள் நாட்டின் அந்தந்தப் பகுதிகளின் வெப்ப தட்ப நிலைக்கேற்ப அமைந்திருக்கும். குளிர் அதிகமான வடதேசங்களில் அதற்கேற்ற கோதுமை உணவு வகைகளும், தென்னாட்டுக்கு ஏற்ற அரிசி உணவு வகைகளும் நமது சாப்பாட்டில் பயன்படுத்தப் படுகின்றன. நமது சீதோஷ்ணத்துக்கு மாறான உணவுகூட நமக்குப் பலவித நோய்களைத் தரக்கூடியதாக அமைந்துவிடுகிறது என்பதையும் இந்த இடத்தில் நாம் யோசிக்க வேண்டும்.

திருமண விருந்து என்றால் விருந்தாளிகள் அனைவருக்கும் நுனிவாழை இலை போட்டு தண்ணீர் வைக்கப்படும். விருந்தினர் அமர்ந்து இலையில் நீர் தெளித்து சுத்தம் செய்து
கொண்டபின் பரிமாறத் தொடங்குவார்கள். முதலில் பாயசம் அல்லது ஓர் இனிப்புடன் தொடர்ந்து நாலைந்து வகை காய்கள், கூட்டுகள், தயிர்பச்சடி, இனிப்பு பச்சடி, கோசிமலி, அவியல், உசிலி இவற்றோடு வடை, அப்பளம் பாயசம் என்று ஒவ்வொன்றும் வரிசையாக பரிமாறப்படும். இதற்கிடையே திருமண வீட்டுக்காரர் நடுவில் நின்று கொண்டு "சாருக்கு இன்னொரு கரண்டி பாயசம் ஊற்றப்பா" என்பார். "வேண்டியதைக் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்" என்பார். இதுதான் பந்தி உபசாரம் என்பது. நிறைவாக தயிர் அல்லது மோர் சாதம் முடிந்து பந்தியில் அருகில் இருப்பவர் எழுந்திருக்கும் வரை காத்திருந்து மரியாதை கொடுத்து அனைவரும் எழுந்திருப்பர். பிறகு ஆங்காங்கே தட்டுகளில் தாம்பூலம் வைக்கப்படும். இது நமது பாரம்பரிய முறை விருந்து பரிமாறும் முறை.

செட்டிநாட்டில் நடக்கும் புதுமை, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் நடக்கும் பந்தி உபசாரத்தை அனைவரும் கண்டிப்பாகக் கண்டு அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் பரிமாற ஒரு நபர் இருப்பார். அவர் யாருடைய இலையில் அந்த பதார்த்தம் இல்லையோ அங்கு ஓடிப்போய் அதை பரிமாற வேண்டும். விருந்தளிப்பவர் அல்லது அவரது உறவினர்கள் அங்கு நின்று கொண்டு ஒவ்வொருவரையும் அவரவர் தேவைகளை விசாரித்து உபசரித்து உணவளிக்கும் பண்பாடு இன்றும் அவர்களிடம் இருக்கிறது.

இன்று! ஓர் நட்சத்திர ஓட்டலில் இருளடைந்த மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் குசலம் விசாரிக்கும் வகையில் இடி இடிப்பது போன்ற குரலில் சிரித்தும் மகிழ்ந்தும் ஆலிங்கனம் செய்து கொண்டும், ஆண் பெண் எல்லோரும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கைகொடுத்தோ, அல்லது தழுவிக்கொண்டோ மேல்நாட்டாரைப் போல ஏதோவொரு வகையில் நிகழ்ச்சிகள் நடக்கும். ஆண்களும் பெண்களும் கைகுலுக்கிக் கொள்வது என்ன தவறா? இது என்ன பழைய பஞ்சாங்கம் என்று நினைக்காதீர்கள். அன்று வரை அதுபோன்ற கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர்கள் கூட இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தங்கள் கட்டுக்களை அறுத்தெறிந்துவிட்டு விடுதலையான சிறைப்பறவை போன்று 'சோஷலாக' நடக்கத் தொடங்குகிறார்கள் என்பதுதான் கருத்து. நிச்சயதார்த்தமோ, திருமணமோ அதுபாட்டுக்கு ஒரு மேடையில் ஒரு பிராமணர் மந்திரங்கள் சொல்ல அக்கினி மூட்டி ஹோமம் வளர்த்து நெய்யை அதில் ஊற்றிக்கொண்டே, வருகிற விருந்தினருக்கு ஹாய் சொல்லி வரவேற்றபடி மாப்பிள்ளை எப்போதடா இந்த இக்கட்டிலிருந்து விடுபடுவோம் என்று ஒருவழியாக தாலிகட்டி முடித்து எல்லோருக்கும் கைகுகுலுக்கி அரட்டை அடிக்கப் போவார். விருந்து என்ற பெயரில் அவரவர் ஒரு தட்டை கையில் ஏந்திக் கொண்டு, மங்கிய வெளிச்சத்தில் மேஜைமேல் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களில் எதற்கு என்ன பெயர், என்ன வகை என்பதுகூட தெரியாதபடி தேவையோ தேவை இல்லையோ ஒரு கரண்டி எடுத்து பத்து அங்குல விட்டமுள்ள தட்டில் வழிய வழிய போட்டுக்கொண்டு இதை எப்படி சாப்பிட வேண்டுமென்று அருகிலுள்ளவர்களைப் பார்த்து அதுபோல சாப்பிடுவது. சாப்பிடும் உணவு எந்த வகையைச் சார்ந்தது சைவமா அல்லது அசைவமா என்பதுகூட அறிந்துகொள்ள முடியாத வகையில் அதன் தோற்றம். நம்மை நாமே உபசரித்துக் கொள்ளும் நவீன பந்தி உபசரணை இது! இது என்ன கலாச்சாரம்? இதற்கெல்லாம் காரணம் ஆடம்பரமா? பணமிருக்கும் பெருமையா? தெரியவில்லை.

நாட்டில் அவசியத்திற்கேற்ப பழைமையை ஒழித்துப் புதுமையைப் புகுத்துவது என்பது தேவைதான். அதற்காக அடிப்படையான நமது பண்பாடு கலாச்சாரம் அனைத்தையுமே குழிதோண்டி புதைத்துவிட வேண்டுமா? நாகரிகம் என்ற பெயரில் கலாச்சாரக் கொலை செய்துவிட்டு, வயிறு நிரம்பாமல் எது என்ன வகை உணவு என்பது அறியாமல் சாப்பிட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு பறக்கும் அனாச்சாரம் நமக்குத் தேவையா? இப்போதே இதனைப் பற்றி சிந்தித்து நல்ல முடிவு எடுக்காமல் போனால் பிறகு நாமும் காலாச்சார சீரழிவில் காணாமல் போய்விடுவோம்.

இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!! திருமணங்கள் மிக எளிமையாக நடத்தப்பட வேண்டும். வேண்டிய வசதியும் பணமும் இருந்தாலும் மற்றவர்களுக்காக ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். வாணவேடிக்கைகளும், வீண்செலவுகளும் குறைக்கப்பட வேண்டும். விரும்பினால் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி தவிக்கும் ஏழைபாழைகளுக்கு ஒரு கவளம் வயிறார உணவு படைக்க முயற்சி செய்யலாம், அல்லது ஆதரவற்றோர் இல்லங்களில் நல்ல உணவுக்காக ஏங்கும் மக்களுக்கு ஒரு வேளை வயிறார உணவு படைக்கலாம். ஆடம்பரங்களைத் தவிர்ப்போம். மனிதாபிமானத்தோடு நமது வீட்டு விழாக்களைக் கொண்டாடுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நாகரிகமும், பண்பாடும் நமது கிராமப் புறங்களிலிருந்துதான் புறப்படுகின்றன. நகரங்கள் அவற்றைச் சீரழிக்காமல் இருந்தால் சரி!