Followers

Monday, May 17, 2010

அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
67. அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

1942 ஆகஸ்ட் போராட்டத்தின் போது கோவை சூலூர் விமான நிலையம் தீக்கிரையான வரலாறு அனைவருக்கும் தெரிந்த செய்தி. இந்த கலவரத்தின்போது முன்னணியில் இருந்தவர் கோவை பி.வேலுசாமி. இவர் தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டு தொழிற்சங்க இயக்கத்திலும், சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர். 1920ஆம் வருஷம் பழனிசாமி நாயுடுவுக்கு மகனாகப் பிறந்தார். இவரது நேர்மையும், தொழிலாளர்களுக்காக உண்மையாகப் பாடுபடும் உணர்வையும் மதித்து அவர்கள் மத்தியில் இவர் ஒரு கெளரவமான தலைவராக ஏற்கப் பட்டவர். கோவை தொழிலாளர் இயக்கம் மிக பயங்கரமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. என்.ஜி.ராமசாமி எனும் உண்மைத் தொண்டன் பலமுறை அடித்து குற்றுயிரும் குலையுயிருமாகப் போடப்பட்டு தனது இளம் வயதிலேயே மரணமடைந்து விட்டவர். அவர் வழியில் வந்த வேலுசாமி மட்டும் அடி உதைகளுக்குத் தப்பிவிடமுடியுமா. இவருக்கும் அவை தாராளமாகக் கிடைத்தன. அந்த விழுப்புண்களோடுதான் இவர் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

கூட்டத்தில் பேசுவதோ, கூட்டத்துக்குத் தலைவர்களை அழைத்து வருவதோகூட இவருக்கு முக்கியமில்லை. அப்படி நடக்கும் கூட்டங்களில் யாரும் புகுந்து கலாட்டா செய்யாமல் பார்த்துக் கொள்வதில் இவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். மகாத்மாவின் ஒத்துழையாமை போன்ற போராட்டங்களில் இவர் ஈடுபாடு கொண்டாலும், தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு இவர் தொழிலாளர் இயக்கத்தில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் 1942 ஆகஸ்ட் மாதம் பம்பாய் காங்கிரசில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி "செய் அல்லது செத்து மடி" எனும் அறைகூவலை மக்களுக்கு விடுத்தார். தலைவர்கள் கைது செய்யப்பட்டதும், வழிகாட்டுதல் இல்லாத மக்கள் கூட்டம் தன்னிச்சையாக போராட்டத்தைத் தொடங்கி விட்டனர்.

ஆகஸ்ட் போராட்டத் தொண்டர்கள் கோவையில் ரகசியமாகக் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இன்னார் இன்ன வேலைகளைச் செய்வது என்று முடிவாகியது. அதன்படி வேலுசாமி பைக்காரா மின் நிலையத்தைத் தகர்ப்பது என்று முடிவாகியது. அதற்காக இவரும் வேறு பல தொண்டர்களும் எவ்வளவு முயன்றும், அங்கிருந்த பலத்த காவல் காரணமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கோவையில் இருந்த இம்பீரியல் வங்கி (தற்போது ஸ்டேட் வங்கி) யைத் தாக்க முயன்று அதிலும் தோல்வி கண்டனர்.

அடுத்ததாக சூலூர் விமான நிலையத்துக்குத் தீ வைப்பது என்ற முடிவில் இவர்கள் பலர் ஒன்றுகூடி ரகசியமாகச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் பல குழுக்களாகப் பிரிந்து நாலா திசைகளிலும் தீ வைத்துவிட தீ நன்கு பற்றி எரியத் தொடங்கியது. இவர்கள் ஓடி தலைமறைவாகி விட்டனர். போலீஸ் இவர்களைப் பிடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் இவர்களோ மாறுவேடமணிந்து கொண்டு போலீசின் கையில் அகப்படாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார்கள். அப்படிப் போகின்ற இவர்களுக்கு ஆங்காங்கே அடைக்கலம் கொடுத்து காப்பாற்ற ஏராளமான தேசபக்தர்கள் இருந்தார்கள். இவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் மாட்டிக்கொண்டு சிறை செல்ல நேருமென்பதெல்லாம் இவர்களுக்குத் தெரிந்திருந்தும் தைரியமாக இதனைச் செய்தார்கள். அடடா! தேசபக்திக்குத்தான் எவ்வளவு சக்தி.

என்னதான் இவர்களு ஊர்விட்டு ஊர் ஓடிக்கொண்டிருந்தாலும் போலீஸை கடைசிவரை ஏமாற்ற முடியவில்லை. வேலுச்சாமியும் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கிடைக்கும் மரியாதைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? நிர்வாணமாக்கப்பட்டு கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்கப்பட்டார் வேலுச்சாமி. சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். உன் தேசத்தின் மீது பக்தியா, அதற்காக விமான நிலையத்துக்குத் தீ மூட்டுவாயா என்று சொல்லிச் சொல்லி அடித்தனர். மயங்கி கீழே விழுந்தவரை இருவர் தாங்கிப் பிடித்துக் கொள்ள மற்றவர்கள் அடித்தனர். அட என்ன கொடுமை!

போலீஸ்காரர்கள் அடித்த அடியில் இவரது முதுகு தண்டுவடத்தில் நல்ல காயம். மூளையில் நரம்பு ஒன்று துண்டிக்கப்பட்டதாம். இப்படிப் பலநாட்கள் செய்த சித்திரவதைக்குப் பின் இவர் அடி தாங்கமுடியாமல் மயங்கி கீழே விழ, வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி கொட்டத் தொடங்கியது. குற்றுயிரும் குலை உயிருமாக இவர் விசாரணை கைதி என்ற பெயரில் சிறையில் வாடினார். இவற்றிற்கு முத்தாய்ப்பாக இவர் அலிப்புரம் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ மனையில் இவருக்குச் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் கூட பட்ட அடியின் பயனாக இவர் அடிக்கடி நினைவாற்றலை இழக்கத் தொடங்கினார். கை நடுக்கம் ஏற்பட்டு எதனையும் பிடிக்கவோ, சாப்பிடவோ, எழுதவோ முடியாமல் போயிற்று.

இவர் சிறைவாசம் முடிந்து வெளியேறிய பின்னரும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தில் பங்கு கொண்டார். 11000 தொழிலாளர்கள் வேலை இழந்ததை எதிர்த்துப் போராடிய இவருக்கு 15 மாதங்கள் விசாரணைக் கைதி என்ற பெயரில் சிறைவாசம். அது முடிந்து வெளியே வந்து 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். போராட்ட காலத்தில் இவர் மீது வழக்குத் தொடர்ந்து இவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை கிடைத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் இவரது தொழிலாளர் போராட்டம் நின்றபாடில்லை. 1952ல் கம்போடியா மில்லில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த மோதலின் காரணமாக இவர் இரண்டு மாதம் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தார்.

தொழிலாளர் கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்த போது இவர் மீது கல்வீசப்பட்டது. கல்வீச்சில் இவரது இடது கண்ணின் கீழ் எலும்பு முறிந்து கோவை தலைமை மருத்துவ மனையிலும், பின்னர் சென்னை அதாலமிக் கண் மருத்துவ மனையிலும் ஆறு மாதங்கள் சிகிச்சை செய்து கொண்டும் பலனின்றி ஒரு கண்ணின் கண்பார்வை இழந்தார். 1967ல் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து இவர் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தி.மு.க. அரசில் விவசாய மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி ஒன்றரை மாதம் சிறையில் இருந்தார். ஒரு ESI மருத்துவ மனைக்கு அண்ணாவின் பெயர் வைக்கப்பட்டதை எதிர்த்து தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமியின் பெயரை வைக்க வற்புறுத்தி போராடி சிறை சென்றார். பிறகு 1972 வரை வாழ்ந்த இவர் தனது போராட்ட வாழ்வை முடித்துக் கொண்டு இறைவனடி சேர்ந்தார். வாழ்க பி.வேலுச்சாமி புகழ்!

தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
66. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமன் தீர்த்தம் எனும் கிராமம். இங்கு குமாரசாமி எனும் தியாகி வசித்து வந்தார். இவர் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றார். இவர் புனே, பம்பாய், சென்னை, பெல்லாரி, சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் இருந்திருக்கிறார். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தனது அறுபது வயதைக் கடந்த பிறகு ஒரு நாள் இவர் சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த இளங்கோவன் என்பவரைச் சந்தித்துத் தனக்கு அளிக்கப்படும் தியாகி பென்ஷனும் தாமிரப் பட்டயமும் இனி வேண்டாம் என்று திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னார். அந்த நேர்முக உதவியாளர் இரண்டு மணி நேரம் குமாரசாமியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரைச் சமாதானப் படுத்த முடியாத நிலையில், கலெக்டர் கருப்பண்ணனைச் சந்திக்கும்படி அனுப்பி வைத்தார். குமாரசாமியும் கலெக்டரைச் சந்தித்து தனக்கு பென்ஷன் வேண்டாம், இந்தத் தாமிரப் பட்டயமும் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தார். கலெக்டர் அதிர்ச்சியில் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு குமாரசாமி சொன்னார்:-

எனக்கு 15 வயது ஆகும்போதே சுதந்திரப் போராட்டத்தில் குதித்து விட்டேன். எனக்கு பி. ராமமூர்த்திதான் தலைவர். அவர் தலைமையில் போராடி பல சிறைகளில் இருந்திருக்கிறேன். எனக்கு தியாகி பென்ஷனும் இந்தப் பட்டயமும் கொடுத்தார்கள். இவற்றால் எனக்குப் பெருமை என்று நினைத்து வாங்கிக் கொண்டேன். ஆனால் நாங்கள் சிறை சென்று தியாகம் செய்து வாங்கிய இவை இப்போது எனக்கு தேவையில்லை. காரணம் வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் சுதந்திர இந்தியாவில் லஞ்சமும், ஊழலும் கரைகடந்து பெருகிவிட்டன. காவல்துறையின் அராஜகமும் அடக்குமுறையும் வெள்ளையர் காலத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களும், அதிகாரிகளும் சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து நேர்மையாகவும், மக்களுக்கு நாணயமாகவும் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நாளுக்கு நாள் இந்த லஞ்சப் பேய் அதிகரிக்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் வெள்ளைக்காரர்களை விட தங்களை மேலானவர்களாகக் கருதிக் கொண்டு சொந்த நாட்டானையே சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். இதற்காகவா இத்தனைப் பாடுபட்டு சுதந்திரம் வாங்கினோம்? என்றார்.

நீங்கள் இந்த மாவட்டக் கலெக்டர். உங்களிடம் இப்போது நான் வந்து பேசுகிறேன். இந்த வாய்ப்புகூட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எனக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் ஒரு முறை குமாரபாளையத்திலிருந்து பவானிக்கு ஒன்பது படி அரிசி கொண்டு போனேன். குமாரபாளையம் செக்போஸ்ட்டில் அரிசி கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். அதனால் நான் கொண்டு சென்ற அரிசியை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். என் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்ப அதே வழியில் வரும்போது அந்த செக்போஸ்ட் வழியாகப் பலர் அரிசி கொண்டு சென்றார்கள். ஒருவரும் தடுக்கப்படவில்லை. போலீஸ் அதிகாரிகளும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஒன்றும் கேட்கவுமில்லை, விசாரிக்கவுமில்லை.

உடனே நான் அங்கிருந்த போலீசாரிடமும், செக்போஸ்ட் அதிகாரிகளிடமும் அவர்கள் மட்டும் அரிசி கொண்டு போகிறார்களே, என்னிடம் கூடாது என்று பிடுங்கி வைத்துக் கொண்டீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நீ அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவது தானே!" என்று கிண்டலடித்தார்கள். உடனே நான் 'சுதந்திரம் வாங்கினாலும் வாங்கினோம், இந்தப் போலீஸ்காரர்களிடமும், பியூன்களிடமும் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்' என்று மனம் வெதும்பிக் கூறினேன். அப்போது அங்கிருந்த ஒரு அதிகாரி 'இவன் மீது ஒரு செக்ஷன் போட்டு கேஸ் புக் பண்ணு' என்றார்.

பிறகு நான் அப்போது பஞ்சாயத்து போர்டு அதிகாரியாக இருந்த என் அண்ணன் மகன் வஜ்ரவேலுவின் பெயரைச் சொன்னதும், போலீஸ்காரர்கள் என்னை அனுப்பி விட்டார்கள். சுதந்திரம் என்பது என்ன என்று நாங்கள் நினைத்தோமோ அந்த சுதந்திரம் இன்று நாட்டில் இல்லை. அதிகார வர்க்கம் தலைக்கொழுத்து ஆடத் துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் பெருகிவிட்டதனால், அரசியல் குறுக்கீடுகளும், அதிகார துஷ்பிரயோகங்களும், நியாம் செத்துக் கொண்டிருக்கிறது என்றேன் என்றார் குமாரசாமி.

வறுமையில் பிடியில் சிக்கிய தியாகி குமாரசாமிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகள் பவானியில் ஆசிரியையாக இருந்தார். மகன் ராமலிங்கம் துணி வியாபாரம். நாட்டுக்கு உழைத்த இதுபோன்ற தியாக சீலர்கள் மனம் நொந்து, வெந்து மடிந்து போவதும், சம்பந்தமில்லாதவர்கள் ஊழலிலும் லஞ்சத்திலும் வாழ்வதிலும்தான் நமது சுதந்திரம் இருக்கிறதா என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுவது இயற்கைதானே? வாழ்க குமாரசாமி போன்ற தியாகிகளின் உணர்வுகள்!

தருமபுரி தீர்த்தகிரி முதலியார்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
65. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், குறிப்பாக 'வெள்ளையனே வெளியேறு' எனும் ஆகஸ்ட் புரட்சியின் போது தர்மபுரி பகுதிகளில் ஆங்கில ஏகாதிபத்திய சர்க்காருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தீர்த்தகிரி முதலியார். இவர் அன்னசாகரம் எனும் ஊரில் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் 1882இல் பிறந்தார். தேசபக்தி காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது இவருக்கு தியாகச்சுடர் சுப்பிரமணிய சிவா, வ.வெ.சு.ஐயர், மகாகவி பாரதி, அரவிந்தர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி, திரு வி.க. ஆகிய தலைவர்களுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது. நல்லா ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவர் தேசப்பணி என்றால் ஆவேசம் கொண்டு செயலாற்றுவார். இவரை சுப்பிரமணிய சிவா "எம்டன்" என்று அழைப்பாராம்.

1942இல் ஆகஸ்ட் புரட்சியின் போது இவரை கைது செய்து கொண்டு போய் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தனர். வழக்கு இழுத்துக் கொண்டே போயிற்று. வாய்தா வாய்தா என்று வழக்கு முடிவு பெறுவதாக இல்லை. தீர்த்தகிரி முதலியார் பொறுமை இழந்தார். அன்றைக்கு வாய்தா கொடுத்துவிட்ட நீதிபதியைப் பார்த்துச் சொன்னார்: "ஐயா கனம் நீதிபதி அவர்களே! ஒன்று எனக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதை இப்போதே கொடுத்து விடுங்கள். அல்லது என்னை விடுவித்து விடுங்கள். இப்படி இரண்டும் கெட்டானாக என்ன இன்று, நாளை என்று இழுத்துக் கொண்டே போனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது" என்றார். நீதிமன்றத்தில் இப்படிப் பேசினால் சும்மா விட்டுவிடுவார்களா ஆங்கில நிர்வாகத்தினர். இருபத்தி நான்கு மாத கடுங்காவல் தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினார்கள்.

இவர் சிறையில் இருந்த காலத்தில் உடனிருக்கும் கைதிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பார், ஏனென்றால் இவர் ஒரு ஆயுர்வேத வைத்தியர். அதோடு சித்தா, யுனானி ஆகிய வைத்திய முறைகளும் இவருக்குத் தெரியும். 1942இல் நடந்த போராட்டத்தில் இரண்டாண்டுகள் தண்டனை பெற்ற இவரை பெல்லாரி சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இவர் உடல் பருமனைக் கருதி இவருக்கு உடை தைக்க இரண்டாளுக்கு வேண்டிய துணி செலவு செய்ய வேண்டியிருந்தது. அலிப்புரம் ஜெயிலில் ஈரோட்டைச் சேர்ந்த எம்.ஏ.ஈஸ்வரன் அவர்கள் தான் சமையல் பிரிவைக் கவனித்துக் கொண்டிருந்தவர். அவர் விடுதலையான பின் தீர்த்தகிரி முதலியார் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு செய்தார். அந்தக் காலத்தில் கோவையைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் சுதந்திரப் போர் கைதிகளாக இருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் முதலியார்தான் தலைவராகச் செயல்பட்டார். இவர் இட்ட பணியை மற்ற சக கைதிகள் செய்து முடிப்பார்கள். சிறையில் இவர் ஒரு முடிசூடா மன்னராகத்தான் விளங்கி வந்தார்.

ஒரு முறை நோயாளிகளுக்கு வைத்தியம் செய்யக் கையில் பணமில்லாமல் போய்விட்டது. அவரது மனைவு தன் கை வளையல்களைக் கழற்றிக் கொடுத்து மருந்து தயாரித்துக் கொடுக்கச் செய்தார். கூட்டத்தில் பேசும்போது முதலியாருக்குக் கோபமும் வரும் அதனூடே நகைச்சுவையும் வரும். ஒரு முறை இர்வின் பிரபு பதினோரு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தாராம். இதைப் பற்றி குறைகூறி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த முதலியாருக்கு நகைச்சுவை உணர்வு வந்து விட்டது. இவர் சொன்னார், நல்ல காலம் இர்வினுக்கு ஒரு கைதான். இரண்டு கைகளாலும் போட்டிருந்தால் இருபத்திரண்டு சட்டங்கள் அல்லவா போட்டிருப்பான் என்றாராம்.

இவர் ஆயுர்வேத வைத்தியர் என்று குறிப்பிட்டோமல்லவா? சுப்பிரமணிய சிவாவின் ஒத்துழைப்போடு இவர் இந்த வைத்திய முறையில் கைதேர்ந்தவராக விளங்கினார். இவரது சிறை வாசத்தின் போது உடன் சிறைப்பட்டிருந்த சக கைதிகளுக்கு வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் வரும் போது இவர் தனது ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தியிருக்கிறார். சிறை அதிகாரிகளே இவரிடம் வந்து இன்ன கைதிக்கு உடல்நலம் இல்லை, நீங்கள் மருந்து கொடுங்கள் என்று வாங்கி கொடுப்பதும் வழக்கம். இவர் ஒரு பல்பொடி தயாரித்திருந்தார், அதற்கு பெருந்தலைவர் சித்தரஞ்சன் தாஸ் நினைவாக "சித்த்டரஞ்சன் பல்பொடி" என்று பெயரிட்டிருந்தார். சேலம் மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா கட்ட விரும்பிய பாரத மாதா ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தலைவர் சித்தரஞ்சன் தாசை அழைக்க இவரே காரணமாக இருந்தார். மூலிகைகள் பற்றிய அறிவு இவருக்கு அதிகமாக இருந்த காரணத்தால் இவர் அந்த மூலிகை வைத்தியத்தையே தனது தொழிலாக ஏற்றுக் கொண்டார்.

இவர் இந்தப் பகுதியில் செல்வாக்குள்ள நிலச்சுவாந்தார். தனது சொத்துக்களைச் சிறுகச் சிறுக விற்று சுதந்திரப் போராட்டத்திற்காகச் செல்வு செய்து விட்டார். இந்த நாடு சுதந்திரம் அடைந்தபோது அவருக்கு வயது 67. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இவருக்கு தள்ளாமையும் வறுமையும் வந்து சேர்ந்தது. 1946இல் அந்தப் பகுதியில் ஒரு ஏரி உடைப்பெடுத்த காரணத்தால் இவரது வீடும் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஏழ்மையின் பிடியில் இவர் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 1953ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி இவரது ஆவி கூடுவிட்டுப் பிரிந்தது. நாட்டுக்காகத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இவருக்கு இதுதான் பரிசா?

இவர் பெயரால் "தியாகி தீர்த்தகிரியார் சதுக்கம்" என்ற இடம் இருக்கிறது. ஆனால் இவருக்கென்று நினைவிடம் எதுவும் இல்லை. 1947இல் தருமபுரி மாவட்ட சித்த வைத்திய சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் இருந்தார். தருமபுரி காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தார். சேலம் மாவட்டத் தலைவராகவும் இருந்திருக்கிறார். கைத்தறிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தையும் ஏற்படுத்தினார். தேச சுதந்திரத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய இவர் துன்பமும் துயரமும் சூழ தன் வாழ்வை முடித்துக் கொண்டார். சுதந்திரம் பெற்று ஆறாண்டு காலம் வாழ்ந்தும் இவருடைய வாழ்வில் ஒளி தோன்றாமலே போய்விட்டது. இவருடைய நினைவாக தருமபுரி நகர் மன்ற மைதானம் "தியாகி தீர்த்தகிரியார் மைதானம்" எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. வாழ்க தீர்த்தகிரி முதலியார் புகழ்!

கடலூர் அஞ்சலை அம்மாள்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
63. கடலூர் அஞ்சலை அம்மாள்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தியாகங்கள் பல புரிந்த வீரர்கள் பற்றிய எல்லா விவரங்களும் கிடைப்பது என்பது அரிதுதான். எத்தனையோ தியாகிகளின் வரலாறு கால ஓட்டத்தில் காற்றோடு காற்றாகக் கலந்து வெளியில் தெரியாமலே பொய்விட்டது. வேறு சிலரது வரலாறோ பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படாத காரணத்தாலேயே மறக்கப்பட்டும் விட்டது. ஒரு நாட்டின் தியாக வரலாறு முறைப்படி அரசாங்கத்தின் முத்திரையோடு பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட தியாகிகளை மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டும். குறைந்த பட்சம் சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களிலாவது அவர்களது நினைவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி வரலாற்றின் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், பெருமளவு மக்கள் மத்தியில் பிரபலமாகாத சில பெயர்களில் கடலூர் அஞ்சலை அம்மாளும் ஒருவர். இவரது கணவரும் ஒரு தியாகி. இவரது மகளும், மருமகனும்கூட தியாகிகள். இப்படி குடும்பமே தியாகிகள் குடும்பமாக இருக்கும் ஒருசிலரில் அஞ்சலை அம்மாள் குடும்பமும் ஒன்று.

இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நம் நாட்டுப் பெண்கள் இப்போது போல சுதந்திரம் பெற்று ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழவில்லை. அந்நிய ஆட்சி நமக்களித்த தீயவற்றில், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்குக் கல்வி அறிவு பெற வாய்ப்பு இல்லாமை போன்றவற்றால் பொதுவாக பெண்கள் பொதுக் காரியங்களில் அதிகம் தலையிடுவதில்லை. இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக நமது பாரத பண்பாட்டிலும், நமது மக்களின் ரத்த ஓட்டத்திலும் கலந்துவிட்ட பெண்ணுரிமை காரணமாக, பெண்கள் அறிவிலே சிறந்தும், நிர்வாகத் திறன், அநீதிகளைக் கொண்டு பொங்கும் பாங்கு இவையெல்லாம் எல்லா காலங்களிலும் சாம்பல் மூடிய அக்கினியாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படி சில பெண்கள் ஆண்களுக்கு நிகராகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றும், தியாகங்கள் பல புரிந்துமிருக்கிறார்கள். அதற்கு அந்தக் குடும்பத்தின் ஆண்மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்குமானால் இவர்களது பங்கு சிறப்பாக அமையும். அப்படி குடும்பச் சூழ்நிலையும், சுதந்திர தாகமும் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்ற கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி இங்கு பார்க்கலாம்.

அஞ்சலை அம்மாள் பிறந்தது 1890ஆம் ஆண்டு. 1921ஆம் ஆண்டில் தனது முப்பத்தியோராவது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவரும் நம் நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். சென்னையில் கர்னல் நீல் என்பவனின் சிலையொன்று இருந்தது. இந்த நீல் முதல் சுதந்திரப் போரின் போது இந்திய மக்களுக்கும், சிப்பாய்களுக்கும் இழைத்த கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொடுங்கோலனின் சிலை சென்னை நகரத்தில் இருப்பது அவமானம் என்று கருதி இந்தச் சிலையை நீக்க ஒரு போராட்டம் நடந்தது. ந.சோமையாஜுலு போன்ற பெரும் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். 1927இல் முதன் முதலாக அஞ்சலை அம்மாள் இந்த நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்திலும், 1933இல் சட்டமறுப்பு மறியலிலும், 1940இல் தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1941லும், 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவர் வாழ்க்கை பெரும்பாலும் சிறைவாசத்திலேயே கழிந்தது எனலாம். ஊர் சுற்றி பார்க்க இவர் அலைந்திருக்கிறாறோ இல்லையோ, பல ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஊர்களில் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகியவை அடங்கும். இவர் கர்ப்பவதியாக இருந்த காலத்தில் சிறை சென்று, பேறு காலம் வந்தபோது சில நாட்கள் வெளியே விடப்பட்டு, பிரசவம் ஆனதும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

1929ஆம் ஆண்டு நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில் இவர் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் முருகப்பா, இவரும் பலமுறை சிறை சென்ற தியாகி. கணவன் மனைவி இருவருமே சிறையில் இருந்தபோது, இவர்களது மகள் லீலாவதி என்ன பாடு பட்டிருப்பார். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலும் இவர் கடலூரிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகள் லீலாவதி ஒன்பது வயதாக இருக்கும்போதே நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வயதிலேயே நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்றார். இவரது தேசப்பணியைக் கண்டு மகிழ்ந்த மகாத்மா காந்தி இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று வார்தா ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார்.

அஞ்சலை அம்மாளும் அவர் கணவர் முருகப்பாவும் கடலூர் சிறையில் இருந்த காலத்தில் வேலூரைச் சேர்ந்த ஜமதக்கினி என்பவரும் கடலூர் சிறையில் இருந்தார். இவர் சிறையில் காரல் மார்க்சின் 'தாஸ் காபிடல்' எனும் நூலை மூலதனம் என்று மொழியாக்கம் செய்தவர். இவர் பிரபல மார்க்சீய சிந்தனையாளராக மலர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றவர். இவர் கடலூர் சிறையில் இருக்கும் காலத்தில் அஞ்சலை அம்மாளையும், முருகப்பாவையும் சந்திக்க சிறைக்கு வரும் மகள் லீலாவதியைச் சந்திக்க நேர்ந்தது. மகள் லீலாவதிக்கும், சிறையில் இருந்த தியாகி ஜமதக்கினிக்கும் காதல் மலர, இவ்விருவருக்கும் திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் ஜமதக்கினி அவர்களோ, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் என்று உறுதியாக இருந்தார். அதன்படியே 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பின் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த ஜமதக்கினி (நாயக்கர்) 1952 முதல் சுதந்திர இந்தியத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றார். அங்கு வெற்றி பெற்றவர் B.பக்தவத்ஸலு நாயுடு என்ற சுயேச்சை. இரண்டாவதாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் வேதாசல முதலியார். இந்த பக்தவத்ஸலு நாயுடு, பின்னர் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபோது, காங்கிரசுக்கு ஆதரவளித்து, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் இவர்கள் அமைச்சர்களாக ஆனபோது, இவர் துணை சபாநாயகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பத்தில், தம்பதிகளைத் தவிர, மகள் மருமகன் ஆகியோரும் சிறை சென்ற தியாகிகளாக இருந்தனர் என்பதும், பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்தவர் இந்த அஞ்சலை அம்மாள் என்பதும் பெருமைப் படத்தக்க விஷயம். வாழ்க அஞ்சலை அம்மாள் புகழ்!

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
62. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

திருச்சி நகரத்தில் சகோதரர்களாக காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டவர்களில் ரா.நாராயண ஐயங்காரும் அவரது தம்பி ரா.கிருஷ்ணசாமியும் முக்கியமானவர்கள். மற்ற சகோதர காங்கிரஸ் காரர்கள் வருமாறு: டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி; எம்.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், எம்.எஸ்.ரங்கசாமி ஐயங்கார்; டி.எஸ்.திருஞாானசம்பந்தம், டி.எஸ். அருணாசலம், வேலாயுதம்பாளையம் எம்.கே.எம்.முத்து, கே.பாலகிருஷ்ணன் ஆகியோராவர். இதில் ரா.நாராயண ஐயங்காரின் தாயின் தியாகம் மிகவும் சிறப்பானது. மகாத்மாவிடம் பக்தியுடைய இந்த முதிய அம்மையார், காந்தி சுடப்பட்டு இறந்தார் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மயங்கி விழுந்து உயிர் துறந்தார்.

சட்ட படிப்பை முடித்துக் கொண்டு திருச்சியில் வக்கீல் தொழிலை மேற் கொள்ள இவர் எண்ணியிருந்த நேரம். வருஷம் 1919. அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கியிருந்த 'ஹோம்ரூல்' இயக்கம் இவரை தேச சேவையில் ஈடுபடவைத்தது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து நாட்டுப் பணியில் இவர் ஈடுபடலானார். அப்போதிருந்த திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினரானார். அதன் செயலாளராகவும் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு டி.வி.சுவாமிநாத சாஸ்திரி தலைவராக இருந்தார். பழம்பெரும் புரட்சி வீரர் வ.வெ.சு.ஐயரும் திருச்சி ஜில்லா காங்கிரசில் அங்கம் வகித்து வந்தார்.

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் சதாசிவமும் அப்போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள். காந்திஜி விடுத்த அறைகூவலுக்கேற்ப இவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு காங்கிரஸ் இயக்கத்தில் பணிசெய்யத் தொடங்கினர். ஒத்துழையாமை இயக்கத்துக்காக இவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். கல்கி அவர்கள் பாரதியாரின் பாடல்களைப் பாடுவார். 1921இல் திருச்சியில் பிரதாப் நாராயண வாஜ்பாய் என்பவர் ஹிந்தி பிரச்சாரத்துக்காக மகாத்மா காந்தியால் அனுப்பப்பட்டு அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவரைப் பற்றிய ஓர் செய்தி. ஒரு நாள் இவர் ஹிந்தி வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு தந்தி அவர் பெயருக்கு வந்தது. அதை வாங்கிப் படித்துவிட்டுத் தன் பையில் வைத்துக்கொண்டு பாடங்களைத் தொடர்ந்து நடத்தினார். வகுப்பு முடிந்ததும் அந்தத் தந்தியில் வந்த செய்தி என்ன என்று விசாரித்ததில் வடநாட்டில் அவரது மனைவி இறந்த செய்தி அது என்று கூறினார். தன் கடமையில் சொந்த சாபாசங்கள் குறுக்கிடாமல் உறுதியோடு செயல்பட்ட அவரைப் பலரும் போற்றினர். இந்த வாஜ்பாய் திருச்சி நகரத்தில் டவுன்ஹால் மைதானத்தில் பல சொற்பொழிவுகளைச் செய்திருக்கிறார். டி.வி.சுவாமிநாத சாஸ்த்திரி, வக்கீல் ஹாலாஸ்யம் போன்றவர்கள் இவர் பேச்சை மொழிபெயர்த்திருக்கின்றனர்.

ரா.நாராயண ஐயங்கார் கதர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். க.சந்தானம் அவர்கள் கதர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். சங்கிலியாப் பிள்ளை என்பவர் கதர் கடை வைத்து வியாபாரம் தொடங்கினார். பெரிய கடைத்தெருவில் பீமா லஞ்ச் ஹோம் எதிரில் இது இருந்தது. 1926-27இல் காந்திஜி திருச்சி வந்தார். டாக்டர் ராஜன் வீட்டில் தங்கினார். அப்போது நாராயண ஐயங்கார் காந்திஜிக்குத் தேவையான சேவைகளைச் செய்துகொண்டு ராஜன் வீட்டிலேயே தங்கி இருந்தார். வாயில் காப்போனாகவும் இவர் செயல்பட்டதுண்டு.

1930இல் ராஜாஜி தொடங்கிய வேதாரண்யம் உப்பு யாத்திரையில் இவரும் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டு சென்றார். வழியில் கல்லணை அருகில் அரசாங்கத்தின் கெடுபிடிக்குப் பயந்து இவர்களுக்கு ஒருவரும் உதவி செய்யவோ, உணவளிக்கவோ பயந்த நிலையில் ஒருவர் நாராயண ஐயங்காரிடம் வந்து காவிரியில் ஓரிடத்தைக் காட்டிவிட்டுப் போய்விட்டார். இவர் போய் அந்த இடத்தில் மணலைத் தோண்டிப் பார்க்க அங்கு ஒரு கட்டு புடலங்காய், ஒரு தார் வாழைக்காய், அரிசி மூட்டைகள், பானையில் தயிர் வைத்து மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன. அத்தனை கெடுபிடியிலும் உதவி செய்ய உத்தமர்கள் இருந்ததை எண்ணி நாராயண ஐயங்கார் மகிழ்ச்சியடைந்தார்.

இவர் திருச்சி இரட்டைமால் தெருவில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு தொண்டர்கள் முகாம் நடத்தினார். அதில் ராஜாஜியின் மகன் நரசிம்மன், சங்கு சுப்பிரமணியன் முதலானோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஐயங்காருக்கு 16மாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. காங்கிரஸ் கமிட்டிக்கு நீலாம்பாள் என்பவர் வாடகைக்கு விட்டிருந்தார். இவர் மீது வழக்கு வந்துவிடாமல் இருக்க வக்கீல் என்ற முறையில் நாராயண ஐயங்கார், தன் வீட்டை வாடகைக்குத்தான் விட்டேன் மற்றபடி எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கோர்ட்டில் சொல்லிவிடு என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் கோர்ட்டில் காங்கிரஸ் தொண்டர் முகாமுக்கு என்று தான் நான் கொடுத்தேன், வாடகைக்காக அல்ல என்று சொன்னார், அதனால் தண்டிக்கவும் பட்டார்.

வக்கீலான இவரை சேலம் சிறையில் கல்லுடைக்கச் சொன்னார்கள். அவரும் அந்தத் தொழிலை மிகச் சிறப்பாகச் செய்து வந்தார். சிறையில் இவருக்கு 'சி' வகுப்பு கொடுக்கப்பட்டது. திருச்சி வக்கீல்கள் ஒரு போராட்டத்தை நடத்தில் இவருக்கு 'பி' வகுப்பு வாங்கிக் கொடுத்தார்கள். சிறை வாழ்க்கை இவருக்கு உயிருக்கே உலை வைக்கும்படியான உடல்பாதிப்பை ஏற்படுத்தியது. வெளியே வந்தும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்படமுடியவில்லை. இவர் சிறையிலிருந்து வெளிவந்த போது நடந்த வக்கீல்கள் பாராட்டு விழாவில் இவரது தாயார் தன் கையால் நூல் நூற்று நெய்த வேட்டி துண்டுகளை இவருக்குப் பரிசாக அளித்தார்.

1931ம் வருஷம் மதுரையில் காங்கிரஸ் மாகாண மகாநாடு நடந்தது. தீரர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நாராயண ஐயங்கார்தான் செயலாளர். 1934இல் சங்கு சுப்பிரமணியம் இவரை சென்னைக்கு வந்து 'சங்கு' பத்திரிகையை நடத்த அழைத்தார். அங்கு இவர் "காங்கிரஸ்மேன்" எனும் வாரம் மும்முறை பத்திரிகையொன்றையும் வெளியிட்டார். "தன்பின் "ஜெயபாரதி" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். பிறகு "இந்துஸ்தான்" எனும் வார இதழில் 11 ண்டுகள் பணியாற்றினார். அதோடு 'தினமணி', 'சுதேசமித்திரன்" பத்திரிகைகளிலும் சுயேச்சையாக எழுதி வந்தார். தனது ஓய்வு நாட்களைத் திருச்சியில் கழித்தபின் தனது முதிய வயதில் காலமானார் ரா.நாராயண ஐயங்கார். வாழ்க அவரது புகழ்!

க. சந்தானம்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
61. க. சந்தானம்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

தஞ்சை மாவட்டம் தந்த அரிய தலைவர் க.சந்தானம். மன்னார்குடியில் பிறந்து, உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் ஆச்சார்ய கிருபளானி, கே.எஸ்.சுப்பிரமணியம் போன்றவர்களோடு பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, சுதந்திர தாகத்தினால் 1920இல் கல்கத்தா காங்கிரஸிலும் பின்னர் 1921இல் பெஜவாடா காங்கிரஸிலும் கலந்துகொண்டு, வேலையை உதறிவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்து திருச்சியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சேர்ந்து பணியாற்றி, திருச்சி மாவட்டத்தில் சிறைசென்ற முதல் சத்தியாக்கிரகி எனும் புகழ்பெற்றவர் க.சந்தானம். பின்னாளில் இவர் ஜவஹர்லால் நேரு மந்திரி சபையில் அமைச்சராகவும், லெஃப்டினன்ட் கவர்னராகவும் இருந்தபின் ஆயிரம் பிறைகண்ட நிறைவாழ்க்கை வாழ்ந்தகவர் க.சந்தானம். அரசியல் சாணக்கியரான ராஜாஜிக்கு வலது கரம் போல செயல்பட்டு, அவர் ஈடுபடும் எல்லா போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்ட பெருந்தகை க.சந்தானம். வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் தலைவர் ராஜாஜி சிறைபட்டவுடன், தனக்கு அடுத்து க.சந்தானம் 'சர்வாதிகாரி'யாக இருந்து போராட்டத்தை வழிநடத்துவார் என்று ராஜாஜியில் பணிக்கப்பட்டவர் க.சந்தானம். நல்ல கல்விமான், பொருளாதார நிபுணர், இந்திய அரசியல் சட்டம் வகுப்பதில் முனைப்புடன் ஈடுபட்டவர், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று பல பெருமைகளுக்கு உரியவர் க.சந்தானம்.

ஆமதாபாத் காங்கிரஸ் தீர்மானத்தின்படி தமிழ்நாட்டிலும் பலர் தங்களது வக்கீல் தொழிலை கைவிட்டனர். பலர் கல்லூரிகளிலிருந்து வெளியேறினர். திருச்சியில் ஆர்.நாராயண ஐயங்கார், என்.ஹாலாஸ்யம் ஆகியோர் வக்கீல் தொழிலைவிட்டு வெளியேறினர். கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கல்கி ஸ்தாபகர் மணக்கால் சதாசிவம் ஆகியோர் தேசிய கல்லூரியில் படிப்பை விட்டு வெளியேறினர். இவர்கள் அனைவரும் கிராமங்கள் தோறும் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தனர். அப்போது க.சந்தானம் இவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

1922இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் திருச்சி இரட்டை மால் தெருவில் இருந்தது. கமிட்டிக்கு ராஜாஜி தலைவர் செயலாளர் க.சந்தானம். இவரைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லுவார்கள், மன்னார்குடிக்காரரான இவருக்கு தங்குமிடம் காங்கிரஸ் அலுவலகம், ஸ்நானம் காவிரியில், சாப்பாடு ஹோட்டலில், வேலையோ திருச்சி மாவட்ட கிராமங்களில். இவர்களது நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. தடையை மீறி க.சந்தானம் செயல்பட்டதற்காக கைதாகி 6 மாத சிறை தண்டனை பெற்றார். சிறையில் இவருக்கு 'சி' வகுப்புதான் கொடுக்கப்பட்டது. இப்படி இவர் திருச்சி மாவட்டத்தில் முதல் சத்தியாக்கிரகியாகி சிறை சென்றார். இவர் திருச்சி, கண்ணனூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார். கண்ணனூர் சிறையில் கைதிகளுக்கு நடந்த அநீதியை எதிர்த்து இவர் உண்ணா நோன்பிருந்து அவர்களுக்குக் கொடுமையிலிருந்து விடுதலையளிக்கப் பாடுபட்டார்.

அந்தக் காலத்தில் சிறைகளில் 'ஏ', 'பி', 'சி' என்ற பாகுபாடுகள் இல்லை. எல்லா கைதிகளும், கிரிமினல் குற்றவாளிகளும், அரசியல் கைதிகளும், படித்தவர்களும், படிக்காதவர்களும் ஓரிடத்தில்தான். இந்தப் பிரிவினை, ஏ,பி,சி வகுப்புப் பிரிவினை லாகூர் சதிவழக்கு நடந்த காலத்தில் அவ்வழக்கில் ஓர் குற்றவாளியான எதீந்திரதாஸ் என்பவர் 63 நாட்கள் உண்ணா நொன்பிருந்து உயிர்விட்ட பிறகுதான் அரசியல் கைதிகளை கிரிமினர் கைதிகளிலிருந்து பிரித்து தனி வகுப்பு கொடுக்கப்பட்டது. 1930 வரை எல்லா கைதிகளும் ஓரிடத்தில்தான். இப்போதைய சிறை வாசத்தை எந்த வகையிலும் அந்தக் கால சிறைவாசத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை நாமெல்லாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நமது மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தின் விலையைப் புரிந்துகொள்ள முடியும்.

அந்தக் காலத்தில் மாஜிஸ்ட்டிரேட்டுகள் தங்கள் ஆங்கில எஜமானர்களுக்கு எப்படி விசுவாசமாக இருந்தார்கள் என்பதைப் பற்றி க.சந்தானம் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். 1941-42 காலகட்டத்தில் தஞ்சாவூரில் நடந்த சம்பவம் இது. ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஒரு கைதியை அழைத்துக்கொண்டு வந்து அவ்வூர் மாஜிஸ்ட்டிரேட் முன் ஆஜர் செய்கிறார். அந்தக் கைதி யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததாகவும், அரசாங்கத்துக்கு எதிராக துவேஷம் உண்டாக்கும் வண்ணம் கூட்டங்களைக் கூட்டி பேசியதாகவும் குற்றம் சாட்டினார் சப் இன்ஸ்பெக்டர். அதற்கு அந்த மாஜிஸ்ட்டிரேட் இந்த ராஜ துவேஷ குற்றத்துக்காக அந்தக் கைதிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், சிறையில் எவ்வளவு களி படியளக்க வேண்டுமென்பதையும் தண்டனையாக விதித்தார். இந்தக் கைதி யார் என்று விசாரித்ததில் இவர் ஒரு பிறவி ஊமை என்பதும், இவரை அந்த சப் இன்ஸ்பெக்டருக்குப் பிடிக்கவில்லை என்பதால், இந்த மாஜிஸ்ட்டிரேட் வெள்ளைக்கார அரசாங்கத்தைக் குளிப்பாட்டும் விதத்தில் தண்டனை அளித்து விடுவார் என்பது தெரிந்து இப்படியொரு தந்திரம் செய்ததாகவும் தெரிய வந்ததாம். ஊமை எப்படி அரசாங்க விரோத பேச்சைப் பேசியிருக்க முடியும் என்பதைக்கூட விசாரிக்காமல் தண்டனை கொடுப்பதில் அவ்வளவு முனைப்பு அந்த மாஜிஸ்டிரேட்டுக்கு. எல்லாம் எஜமான விசுவாசம்!

1922இல் டிசம்பரில் கயாவில் நடந்த காங்கிரசுக்கு சி.ஆர்.தாஸ் தலைமை வகித்தார். இந்த மகாசபைக்கு க.சந்தானம் பிரதிநிதியாகச் சென்றார். 'மாறுதல் வேண்டுவோர் கட்சி' எனும் பெயரில் காங்கிரசுக்குள் இருந்த குழுவில் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, வித்தல்பாய் படேல், எஸ்.சீனிவாச ஐயங்கார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோர் இருந்தனர். இவர்களுக்கு எதிராக சட்டசபைகளை பகிஷ்கரிக்கும் கட்சியில் வல்லபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் இருந்தனர். இந்த இரு கோஷ்டிகளில் க.சந்தானம் ராஜாஜியின் பக்கமே இருந்தார்.

இராட்டையில் நூல் நூற்கும் இயக்கத்தில் க.சந்தானம் தீவிரமாக இருந்தார். காதி உற்பத்திக்கு ஜம்னாலால் பஜாஜ் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளுக்கு சந்தானம் உறுதுணையாக இருந்தார். 1925 முதல் 1930 வரை இவர் நூற்போர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கதர் காதி சங்கம் திருப்பூரில் தலைமையகமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் சிறை தண்டனை பெற்றார். 1931இல் காந்தி இர்வின் ஒப்பந்தப்படிக்கு இவர் விடுதலையானார். 1932இல் திருப்பூரில் தடையை மீறி ஊர்வலம் சென்றமைக்காக இவர் கைதாகி 6 மாதம் தண்டனை பெற்றார். 1931இல் இவரது மனைவி காலமானார், அடுத்த ஆண்டில் தனது சகோதரரை பறிகொடுத்தார். குடும்ப சோகத்தினால் இவரது அரசியல் வாழ்க்கை சோர்வடையவில்லை.

சிறையிலிருந்து விடுதலையான பின் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழின் ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டார். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்வதற்காக ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். 1940இல் மன்னார்குடிக்குச் சென்று அங்கு யுத்த எதிர்ப்பு பிரச்சார ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி கைதாகி ஒரு வருடம் தண்டனை பெற்றார். அந்த தண்டனையை இவர் திருச்சி சிறையில் கழித்தார். இந்த சிறைவாசத்தின் போது பல பெரிய தலைவர்களின் நட்பும் தோழமையும் இவருக்குக் கிடைத்தது. 1975இல் இவருக்கு சதாபிஷேகம் நடந்தது. வாழ்க க.சந்தானம் புகழ்!

திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
60. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

1919இல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன்வாலாபாக் எனும் இடத்தில் ஜெனரல் டயர் என்பவன் இரக்கமில்லாமல், ஆண், பெண் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோரை பீரங்கி வைத்துச் சுட்டுக் கொன்றது இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரின் கறை படிந்த வரலாற்று நிகழ்ச்சி. உலகம் முழுவதும் இந்த அரக்கத்தனமான செயல் கண்டனத்துக்கு உள்ளானது. மனித இனமே வருந்தி தலைகுனிந்த போது ஜெனரல் டயர் மட்டும் பெருமிதத்தோடு சொன்னான், குண்டுகள் தீர்ந்துவிட்டன, இல்லாவிட்டால் இன்னமும் பல உயிர்களைப் பறித்திருப்பேன் என்று. என்ன ஆணவம்? என்ன திமிர்? இந்தச் செயலை இந்திய தேசபக்தர்கள் நாடெங்கணும் கூட்டங்கள் கூட்டி மக்களிடம் சொல்லி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் திரும்பச் செய்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டதொரு கூட்டம் 1920இல் திருமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசியவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், சென்னை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தவருமான கிருஷ்ணசாமி சர்மா என்பவராவர். இவர் இதற்கு முன்பும் வ.உ.சி. கைதானதை எதிர்த்து கரூரில் பேசிய பேச்சு தேசவிரோதம் என்று சிறையில் அடைக்கப்பட்டவர். மாபெரும் தியாகி. தமிழக மக்களால் மறக்கப்படக்கூடாதவர் ஆனால் மறக்கப்பட்டவர். இப்படிப்பட்ட தேசபக்தரின் வீராவேசப் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு தனக்கு வயது 16தான் என்பதைக்கூட மறந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தேசசேவையில் ஈடுபட்டவர் திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம். இவரது தந்தையார் பெயர் சுப்பிரமணிய ஐயர்.

காங்கிரசில் சேர்ந்ததோடு தனது பணி முடிந்துவிட்டதாக இவர் கருதவில்லை. ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார். மக்களிடம் ஆவேசமாகப் பேசி அவர்கள் உள்ளங் களிலெல்லாம் தேசபக்தி விதையைத் தூவினார். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் இவரால் தயார் செய்யப்பட்ட வீர இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இவர் தேச சேவையில் ஈடுபட்ட நாள் முதலாக இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள், மகாநாடுகள், போராட்ட பிரச்சாரம் என்று இவர் ஈடுபடாத நிகழ்ச்சிகளே இல்லையெனலாம். இவர் வேறு எவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். தானே முன்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்து முன்னணியில் இருப்பார். ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால் போதும், அது முடியும் வரை கண் துஞ்சார், பசி அறியார், கருமமே கண்ணாயிருப்பார். தலைவர் தீரர் சத்தியமூர்த்திக்கு இவரிடம் அன்பு அதிகம். இந்த இளம் வயதில் இப்படியொரு தேசாவேசமா? இவருக்குத் தகுந்த ஆதரவு கொடுத்தால், இவர் பல அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர் என்பதனை தலைவர் உணர்ந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநிலக் குழு உறுப்பினராக சேர்த்தார். தொடர்ந்து காங்கிரசுக்குத் தலைமை வகித்த எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்ஸலம், காமராஜ் ஆகியோரிடம் இவருக்கு நல்ல தொடர்பும் செல்வாக்கும் இருந்து வந்தது.

1930 இந்திய சுதந்திரப் போரில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். தமிழகத்தில் திருச்சி யிலிருந்து வேதாரண்யம் வரை தலைவர் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரக தொண்டர் படையை அணிவகுத்து அழைத்துச் சென்றார். அதே சமயம், மாகாணத்தின் தலைநகரத்தில் ஸ்ரீமதி துர்க்காபாய் தலைமையிலும், டி.பிரகாசம் தலைமையிலும் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. அதில் ஆதிகேசவலு நாயக்கர், ம.பொ.சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த சென்னை போராட்டத்துக்குப் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பி வைத்தார் மீனாட்சிசுந்தரம். இந்தத் தொண்டர் படைக்கு இவரே தலைவராக இருந்து வழிகாட்டலானார். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.

1931இல் நாடக நடிகராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த தியாகி விஸ்வநாத தாஸ் திருநெல்வேலியில் நடைபெற்ற நாடகத்தில் மக்களை விடுதலைக்குத் தூண்டும் விதமாக தேசபக்திப் பாடலை பாடினார் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். விஸ்வநாத தாஸ் கைது செய்யப்பட்டார். இவருக்காக வழக்காடும்படி கோயில்பட்டி சென்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் சம்மதித்து வழக்கை எடுத்துக் கொண்டார்.

1932இல் சட்ட மறுப்புப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டியதற்காக மீனாட்சிசுந்தரம் கைது செய்யப்பட்டு இரண்டரையாண்டுகள் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை இவர் திருச்சிச் சிறையில் கழித்தார். 1941ஆம் வருஷத்தில் தனிநபர் சத்தியாக்கிரகம் அறிவிக்கப்பட்டது. அப்போது மூண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதில் மீனாட்சிசுந்தரம் வேகம் காட்டினார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு 4 மாத சிறைதண்டனை பெற்று மதுரை சிறையில் கழித்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு இவருக்குத் தாமிரப்பட்டயம் கொடுத்து கெளரவித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதற்காக இவர் ஓய்ந்து உட்கார்ந்து விடவில்லை. மாறாக தேச நிர்மாணப் பணிகளில் அதே ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் காட்டி உழைத்தார். திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்துக்கு புனருத்தாரணம் செய்வித்துக் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். தேசபக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தெய்வ பக்தியும் உடையவர். தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டு விட்ட காரணத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே நாட்டுக்காக உழைக்க உறுதிபூண்டுவிட்டார். வாழ்க தியாகி புலி மீனாட்சிசுந்தரம் புகழ்!

சீர்காழி சுப்பராயன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
59. சீர்காழி சுப்பராயன்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

1942இல் நடைபெற்ற "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளில் சீர்காழி உப்பனாற்று பாலத்துக்கு வெடி வைத்த சதி வழக்கு முக்கியமானது. இந்தப் போராட்டம் முழுவதும் வெற்றி பெறவில்லையாயினும், இதில் ஈடுபட்ட சுதந்திரப் போர் வீரர்களை பிரிட்டிஷ் அரசு மிகக் கடுமையாக தண்டித்தது. இதில் குற்றவாளிகளாக அப்போது பிரபலமாக இருந்த பலர் சேர்க்கப்பட்டார்கள். அவர்களில் முதன்மையானவர் சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர் சுப்பராயன் என்பவராவார். மற்ற பிரபலங்கள் குறிப்பாக தினமணி நாளிதழில் பணியாற்றி வந்த ஏ.என்.சிவராமன், ராமரத்தினம், டி.வி.கணேசன், கும்பகோணம் நகர காங்கிரஸ் தலைவர் பந்துலு ஐயரின் குமாரர் சேஷு ஐயர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

சுப்பராயனின் தந்தையார் குன்னம் ரகுபதி ஐயர் நூற்றுக்கணக்கான வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர். ஐந்தாறு கிராமங்கள் இவர் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்தது. இவர் தயாள குணமும், தன்னை அண்டியவர்களை அரவணைத்து ஆதரிக்கும் பண்பு பெற்றவர். தான் பெரிய நிலப்பிரபு என்பதற்காக மற்றவர்களை எளிதாக எண்ணக்கூடியவர் அல்ல. இவர் வீட்டுக் கதவு விருந்தாளிகளுக்கு உணவு படைக்க எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட குடும்பத்தில் தோன்றிய சுப்பராயன் தங்கத் தட்டில் வெள்ளி ஸ்பூன் கொண்டு சாப்பிடும் வசதி படைத்தவர். இவர் குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொண்டவர்கள் மிகப் பெரிய தொழிலதிபர்கள், தலை சிறந்த உத்தியோகஸ்தர்கள். அப்படிப்பட்ட தயாள குணமும், இரக்க குணமும் கொண்ட ரகுபதி ஐயரின் குமாரன் சுப்பராயன் தேசபக்தி காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று, வெளியே வர வாய்ப்பிருந்தும், பிடிவாதமாக சிறைவாசத்தை முடித்தே வெளிவருவேன் என்று நாட்டுக்காகத் தன்னை வருத்திக் கொண்ட மாபெரும் தியாகி. இன்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டாவது வெளியே வரத்துடிக்கும் அரசியல் வாதிகளோடு இத்தகைய தியாக உள்ளம் கொண்டு சுப்பராயனை என்னவென்று சொல்லுவது?

1942இல் பம்பாய் காங்கிரஸ் மாநாடு முடிந்த அன்றே மகாத்மா காந்தி அடிகள் முதலான அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பாதுகாப்புக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சித் தீ பற்றிக் கொண்டது. காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்டது. நாட்டின் பலபாகங்களிலும் வன்முறையும், தீ வைத்தல், தந்தி கம்பி அறுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் கலவரமும், தீ வைப்பும் நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாவட்ட தேசபக்தர்கள் சிலர் ஒன்றுகூடி, பிரிட்டிஷ் அரசாங்கம் போராட்டத்தின் கடுமையை உணரும் வண்ணம் சென்னை மாயவரம் இடையே ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்து அல்லது வெடி வைத்துத் தகர்க்க முடிவு செய்தனர். அதை செயல்படுத்துவதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா ஒரிசா ஆந்திரா எல்லையிலுள்ள சுரங்கத்திலிருந்து வெடிமருந்து குச்சிகளை வாங்கி வந்தார். பல மாவட்டங்களுக்கும் இந்த வெடிப் பொருட்கள் ராமரத்தினம் மூலம் அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கான வெடிகள் கும்பகோணம் பந்துலு ஐயரின் புதல்வரும், தினமணி உதவி ஆசிரியருமான டி.வி.கணேசன், அவரது சகோதரர் சேஷு ஐயர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்த ஊர் பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூர். இந்தப் பகுதியில் எங்கு வன்முறை நடந்தாலும் அது டி.வி.கணேசன் மீதுதான் விழும் என்பதால் இவர்கள் மாயவரம் அருகே ரயில் பாதையில் வெடி வைத்துத் தகர்க்க சீர்காழி உப்பனாறு பாலம்தான் சரியான இடம் என்று முடிவு செய்து, அந்தப் பகுதியில் இளமையும், ஆர்வமும், தேசபக்தியும் உள்ள சீர்காழியைச் சேர்ந்த சுப்பராயனைப் பார்த்துப் பேசினர். அவரும் தன் நண்பர்களுடன் இந்தக் காரியத்தை முடிப்பதாகச் சொல்லி வெடிகளை வாங்கிக் கொண்டார்.

சுப்பராயனும் அவரது நண்பர்களும் சீர்காழி ரயில் நிலையம் அருகேயுள்ள உப்பனாறு பாலத்தில் வெடி வைக்க எல்லா வேலைகளையும் செய்யலாயினர். பாலத்துக்கு அடியில் துளை போட்டு, வெடிகளை அதில் பொருத்தி, திரி தண்ணீரில் படாமல் கம்பி வைத்துக் கட்டி, தீ வைத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்து மறைந்து கொண்டனர். அப்போது அந்த வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் பார்ட்டியின் கண்களில் எரியும் திரி பட்டுவிட்டது. உடனே அவர்கள் அதை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து விட்டனர். போலீஸ் விசாரணையில் இந்தக் காரியத்தைச் செய்யக்கூடியவர் சுப்பராயனாகத்தான் இருக்க முடியும் என்று அவரைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் நண்பர்களும் கைதாயினர். பிறகு தினமணி சிவராமன், ராமரத்தினம், சேஷு ஐயர், டி.வி.கணேசன் ஆகியோர் கைதாகினர். வழக்கு நடந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர்கள் அனைவரும் விசேஷ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். முதலில் சேஷு ஐயர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். முடிவில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் டி.வி.கணேசனும் விடுவிக்கப்பட்டனர். தினமணி ராமரத்தினத்துக்கு ஏழு ஆண்டுகளும், சீர்காழி சுப்பராயனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் பலருக்கு வெவ்வேறு தண்டனைகளுக் அளிக்கப்பட்டது. சுப்பராயன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

சுப்பராயன் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாதலால், இவரது தந்தை மகனை எப்படியாவது வெளியில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் சுப்பராயன் அப்படிப்பட்ட எந்த முயற்சிக்கும் இடமளிக்கவில்லை. சிறை தண்டனையை அனுபவிப்பேன் என்று உறுதியோடு இருந்தார். பின்னர் ஆந்திர கேசரி டி.பிரகாசம் சென்னை மாகாண பிரதமராக பதவி ஏற்று பொது விடுதலை செய்தபோது பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகு சுப்பராயன் விடுதலையானார். விடுதலையான பிறகு திருச்சிக்குச் சென்று அங்கு சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி, பெரும் தொழிலதிபரானார். தானொரு நிலப்பிரபு என்பதோ அல்லது பெரும் தொழிலதிபர் என்பதோ இவரது நடத்தையில் தெரிந்து கொள்ள முடியாது. மிகச் சாதாரண முரட்டுக் கதர் கட்டும் இவர், எவ்வளவு எளியவரானாலும், பழைய நண்பர்களை, உறவினர்களை, தியாகிகளை நேரில் கண்டுவிட்டால் அவர்களோடு பேசி, சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்து, தான் ஒரு பெரிய மனிதர்தான் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறார்.

எந்த வசதியும் இல்லாதவர்கள்கூட பதவிக்கு ஆலாய் பறப்பதும், பதவி கிடைத்ததும் பழைய நிலைமையை மறப்பதும், தலை கனம் கொண்டு அலைவதும் சகஜமாக உள்ள இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தியாகியா? ஆம். சீர்காழி சுப்பராயனைப் பாருங்கள். அவர்தான் ஓர் உதாரண புருஷர். வாழ்க தியாகி சுப்பராயன் புகழ்!

கு. ராஜவேலு.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
58. கு. ராஜவேலு.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற தமிழ் அறிஞர் மற்றும் எழுத்தாளர்களுள் கு.ராஜவேலு ஒருவர். இவர் தனது சிறைவாசத்தை புதிய நூல்கள் இலக்கியங்களைப் படைக்கப் பயன்படுத்திக் கொண்டவர். 1942இல் மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்த "வெள்ளையனே வெளியேறு!" எனும் Quit India இயக்கத்தில் தனது மாணவப் பருவத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இந்த வரலாற்றை இவர் தனது "ஆகஸ்ட் 1942" எனும் புதினத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். பதினொன்று ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் பங்குபெற்று சிறைபுகுந்த மாணவப் பருவ போராட்டத்தைச் சிறிது பார்ப்போம்.

ஈரோடு நகரத்தைச் சேர்ந்த இந்த தேசபக்த இளைஞர் 1942இல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரத்தில் இருந்த அரசர் கல்லூரியில் தமிழ் படித்து வந்தார். அப்போதுதான் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அன்றே மகாத்மாவும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர், காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. வெளியில் பெயர் சொல்லக் கூடிய அளவில் எந்த தலைவரையும் ஆன்கில ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் கூடி தலைவர்கள் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய பந்தல் தீக்கு இறையாகியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அரசர் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடைத் தெருவில் கூடினர். ஆந்திராவைச் சேர்ந்த சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, பிற்காலத்தில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என அழைக்கப்பட்டவரும் நமது கு.ராஜவேலு உள்ளிட்ட தீவிரமான தேசபக்தர்கள் இந்தக் கூட்டத்தில் இருந்தனர். அன்றைய மாணவர்கள் குறிப்பாக திருவையாறு கல்லூரியில் இருந்த மாணவர்கள் அனைவருமே தேசிய சிந்தனை உடையவர்களாக இருந்ததோடு, அவர்களை சோமசேகர சர்மா எனும் தீவிரமான தேசபக்தரும், கு.ராஜவேலும் வழிநடத்தி வந்தனர். இவர்கள் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது ஆட்கொண்டார் சந்நிதி எனப்படும் கடைத்தெரு பகுதியில் போலீஸ் இவர்களைக் கலைந்து போகும்படி கூறியது. அதற்குள் மாணவர்களோடு பொதுமக்களும் நூற்றுக் கணக்கில் கூடி விட்டனர். கடைத்தெருவின் கீழ்புறத்திலிருந்து மாணவர்களும், மேல்புறத்திலிருந்து பெரும் கூட்டமாக பொதுமக்களும் வந்து சேர்ந்ததனால் கடைத்தெரு கொள்ளாமல் மக்கள் கூட்டம். ஆத்திரம் கொண்ட போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியது. உடனே கூட்டத்திலிருந்து கலைந்து சென்றவர்கள் ஒருபுறம் தபால் அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, பொருட்களை நொறுக்கிவிட்டனர். மறுபுறம் மற்றொரு கூட்டம் காவிரி ஆற்றைக் கடந்து தஞ்சாவூர் சாலையில் இருந்த முன்சீப் கோர்ட் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தைச் சூறையாடியது. தஞ்சாவூரிலிருந்து மலபார் போலீசார் கலவரத்தை அடக்க வந்து சேர்ந்தனர். அப்போது முன்சீப் கோர்ட் உள்ளே இருந்த கு.ராஜவேலு காவிரியின் வெள்ளத்தில் குதித்து நீரோட்டத்தோடு நீந்திச் சென்று திருப்பழனம் எனும் ஊரில் கறை ஏறி, பிறகு அவருடன் படித்துக் கொண்டிருந்த அவ்வூர் மாணவனின் உதவியுடன் திருவையாறு வந்தார். அன்று மாலையே இவரும் மற்றும் 42 பேரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்த வழக்கில் இவரும் மற்ற 42 பேரும் 1943இல் தண்டிக்கப்பட்டனர். கு.ராஜவேலு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். இவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம் (அவரும் அப்போது அந்தக் கல்லூரி மாணவர்) பதினெட்டு வயது ஆகாதவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து இவர் விடுதலையான நேரத்தில் தொடுவானில் சுதந்திர வெளிச்சம் தோன்றலானதை யொட்டி, இவர் சென்னை சென்று தனது படிப்பைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். தேசிய உணர்வும், தியாக பின்னணியும் கொண்ட இவரை அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் அடையாளம் கண்டு, இந்த இளைஞரின் வாழ்வு முன்னேறவேண்டும் என்று விரும்பினார். இவர் கல்வி இலாகாவில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் கல்வி இலாகாவில் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்து, ராஜதானி கல்லூரி முதலான இடங்களில் பணியாற்றி, பற்பல நூல்களையில் எழுதினார். ஓய்வுக்குப் பிறகும் தனது எழுத்துப் பணியில் ஈடுபட்டு வயது தொண்ணூறை எட்டும் இவர் இப்போது சென்னையில் அஷோக்நகரில் வாழ்ந்து வருகிறார். இவரது திருவையாற்று அனுபவத்தைக் கேட்டால் இவர் இப்போதும் மனம் உருகிப் பேசுகிறார். இவரோடு சிறைசென்ற பல தியாகிகள் இன்னமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தஞ்சை ஸ்ரீநிவாசபுரத்தில் தியாகி கோவிந்தராஜு, திருவிடைமருதூரில் சண்முகம், மதுரையில் இராம சதாசிவம் போன்றோர் பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தில்லைஸ்தானத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மாணிக்கம் பிள்ளை சில மாதங்களுக்கு முன்புதான் அமரர் ஆனார். இவர்களுக்கு உடற்பயிற்சியும் கஸரத் போன்றவற்றைக் கற்பிக்க ஓர் உடற்பயிற்சி மையத்தை குஞ்சுப் பிள்ளை என்பவர் நடத்தி வந்தார். இவர்தான் திருவையாற்று தேசபக்தர்களுக்கெல்லாம் வழிகாட்டி, குரு எல்லாம். இவர்தான் 13-8-1942இல் நடந்த புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இவர் அமரராகிவிட்டார். இப்படிப்பட்ட தியாகிகளையெல்லாம் உருவாக்கிய திருவையாற்று மண்ணை வணங்குவோம். வாழ்க கு.ராஜவேலு! அவர் இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுவோம்.

மட்டப்பாறை வெங்கட்டராமையர்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
57. மட்டப்பாறை வெங்கட்டராமையர்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

ஒரு காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போதெல்லாம் 'மட்டப்பாறை வெங்கட்டராமையர்' எனும் இவரது பெயர் அடிக்கடி அடிபடும். இவர் ஒரு அஞ்சா நெஞ்சம் படைத்த போராளி. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ராஜாஜி, கே.சந்தானம் போன்றவர்கள் சிறைப்பட்டதும் 'சர்வாதிகாரி' பொறுப்பெடுத்துக் கொண்டு இவர் போராடும்போது இவர் பட்ட புளியம் மிளாறு அடி இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைக்கும். அத்தனை கொடிய அடக்கு முறையையும்கூட இவர் தனது வைர நெஞ்சத்தால் எதிர்கொண்டு போரிட்டார் எனும்போது நாம் தலை நிமிர்ந்து பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அல்லவா?

மதுரை மாவட்டத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள இராமராஜபுரம் என்கிற மட்டப்பாறையில் இவர் 1886ஆம் வருஷம் ஜூலை மாதம் பிறந்தார். இவர் தனது ஆரம்ப காலப் படிப்பை கும்பகோணத்தில் தொடங்கினார். பின்னர் இவர் மதுரையில் பாரதி ஆசிரியர் வேலை பார்த்த பெருமைக்குரிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கம் வலுவடைந்து வந்தது. அந்தப் போராட்டம் தேசபக்த உள்ளம் கொண்ட இளைஞர்களைச் சுண்டி இழுத்தது. அதில் வெங்கட்டராமனும் இணைந்து கொண்டார்.

1907ஆம் ஆண்டில் சூரத் நகரத்தில் ஒரு பிரசித்தமான காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டில்தான் காங்கிரசில் இருந்த இரு கோஷ்டிகள் திலகர் தலைமையிலான தீவிர சிந்தனையுள்ள கோஷ்டிக்கும், மிதவாத கோஷ்டிக்கும் போராட்டம் நடந்து மகாநாடு தடைபட்டது. இந்த மகாநாட்டுக்காக மகாகவி பாரதியார் பத்திரிகைகள் மூலம் பல அறிவிப்புகள் செய்து தொண்டர்களை கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. தலைமையில் நூற்றுக்கணக்கானவர்களை ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றார். இந்தத் தொண்டர் படையில் முக்கியப் பங்காற்றியவர் மட்டப்பாறை அவர்கள். தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வ.உ.சி. பாரதி போன்றோர் பாலகங்காதர திலகரின் ஆதரவாளர்கள். மட்டப்பாறையும் யார் பக்கம் இருந்திருப்பார் என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ? சூரத் சென்றதும் இவர் திலகர் பெருமானின் அன்புக்குப் பாத்திரராகி அவருக்கு உறுதுணை புரிந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை இருந்ததால் இவர் அங்கு நல்ல சேவை செய்ய முடிந்தது. மொழிப்புலமை மட்டுமல்ல, இவருக்கு விளையாட்டுகளிலும் ஆர்வமும், திறமையும் இருந்தது. சிலம்பம், மல்யுத்தம், கோழிச்சண்டை, கடா சண்டை, ஜல்லிக்கட்டு முதலியன இவர் பங்கு கொள்ளும் வீரவிளையாட்டுகளாகும்.

1920ஆம் ஆண்டு காலகட்டத்தில் இவர் மதுரை மாவட்டத்தில் சுற்றாத இடம் இல்லை. கிராமம் கிராமமாக இவர் சென்று பிரச்சாரம் செய்தார். இவர் காலடி படாத கிராமமே அந்தக் காலத்தில் மதுரை வட்டாரத்தில் கிடையாது என்பர். இவர் தோற்றத்திலும் சிங்கம். மேடை ஏறிவிட்டால் பேச்சிலும் கர்ஜனை. இவரைக் கண்டு அந்தக் கால மதுரை கலெக்டர் ஹால் என்பவரும், உப்பு சத்தியாக்கிரகத்தின் போது தஞ்சை கலெக்டர் தார்ன் என்பவரும் அச்சமடைந்தார்களாம். இவரது செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம். அந்தக் காலத்தில் நடந்த கள்ளுக்கடை ஏலத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் எவரும் கள்ளுக்கடையை ஏலம் எடுக்க முன்வரவில்லையாம். இவரது இந்தச் செல்வாக்கைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அடிவருடிகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இவர் மீது பொய்யான வழக்கை அதாவது வழிப்பறி செய்ததாக பொய்வழக்கு தொடுத்து இவரை அலைக்கழித்தனர். கோர்ட் கோர்டாகவும், ஊர் ஊராகவும் இவரை அலைய விட்டனர். அப்படியும் இவர் அசரவில்லை. இவர் அத்தனை பொய் வழக்குகளையும் உடைத்தெரிந்து மக்களால் "மட்டப்பாறை சிங்கம்" எனப் போற்றப்பட்டார்.

1921இல் இவர் மீது 'ஜாமீன் கேஸ்' எனும் வழக்கு போட்டு, அதன் மூலம் இவரை ஓராண்டு சிறைக்கு அனுப்பினார்கள். சிறைக்கு வெளியே இருக்கும் காலங்களில் எல்லாம் இவர் ஏதாவதொரு மகாநாட்டை நடத்திக் கொண்டிருப்பார்; அல்லது மக்களைத் திரட்டி சுதந்திரப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்; அல்லது ஏதாவதொரு அரசியல் மேடையில் ஆங்கில அரசுக்கு எதிராக முழங்கிக் கொண்டிருப்பார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் கைதாகி ஒரு வருஷம் சிறைவாசம் இருந்தார். பின்னர் 1932இல் திண்டுக்கல்லில் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு ஓராண்டு சிறை வாசம். 1936இல் சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பழனி தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தேர்தலுக்காக தீரர் சத்தியமூர்த்தி, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருடன், பழனி, கொடைக்கானல் பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சுற்றி பிரச்சாரம் செய்தார். 1937இல் வத்தலகுண்டில் ஒரு காங்கிரஸ் மகாநாட்டை நடத்தினார். இதற்கு ராஜாஜி தலைமை ஏற்றார். போடிநாயக்கனூர் ரங்கசாமி செட்டியார் என்பவர் இவருக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்தக் காலத்தில் மதுரை ஜில்லா பகுதிகளில் நீதிமன்றங்களில் நெடுங்காலமாக தீர்த்து வைக்கப்படாமல் இருந்த பல வழக்குகளை இவர் தலையிட்டு தீர்த்து வைத்திருக்கிறார். அன்பாக இவர் இரு தரப்பாரிடமும் பேசி வழக்கை முடித்து வைக்கும் சாமர்த்தியத்தை அனைவருமே பாராட்டுவார்கள்.

சிவில் வழக்குகள் மட்டுமல்ல, சில திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் இவரிடம் முறையிட்டால் அதில் தலையிட்டு அதனைக் கண்டுபிடித்துக் கொடுப்பார். ஒருமுறை சபாநாயகராக இருந்த சிவசண்முகம் பிள்ளை அவர்கள் இந்தப் பகுதியில் பிரயாணம் செய்துகொண்டிருந்த போது கொடைக்கானலில் சில பொருட்களைத் தவற விட்டு விட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட மட்டப்பாறை அவரிடம் 'நீங்கள் கவலைப் பட வேண்டாம், அவை உங்களிடம் வந்து சேரும்' என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டு, இவர் முயற்சியால் ஆட்களின் துணைகொண்டு களவு போன பொருட்களைக் கண்டுபிடித்து அவரிடம் சேர்தார். இவர் அச்சம் என்ற சொல்லையே அறியாதவர். கடலூர் சிறையில் நெல்லைச் சிங்கம் எஸ்.என்.சோமையாஜுலுவுடன் இவர் இருந்திருக்கிறார். அப்போது அங்கு சிறை சூப்பிரண்டெண்டாக இருந்த இங்கிள் பீல்ட்டால் எனும் வெள்ளையன் இவரை அன்பாக "வெங்கடப்பாறை" என்றழைப்பான். இவர் அனைவரிடமும், சாதி, மத மாத்சர்யமின்றி அன்போடு பழகுவார். திறந்த உள்ளம் படைத்தவர். தெளிந்த சிந்தனையாளர்; இவர் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமானதாக இருக்கும்; செயல் வேகம் கொண்டவர், எதிரிகளைக் கண்டு அஞ்சாத வீர நெஞ்சினர். இத்தனை குணங்களும் கொண்டவர்தான் அமரர் மட்டப்பாறை வெங்கட்டராமையர். வாழ்க இவரது புகழ்!

முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
56. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

முனகல பட்டாபிராமய்யா என்ற பெயரைப் பார்த்தவுடன் இவர் ஏதோ ஒரு ஆந்திரத்து தேசபக்தர் போல இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறதல்லவா? ஆம்! இவரது பூர்வீகம் ஆந்திராவிலுள்ள முனகல எனும் ஊர்தான். இவர் பிழைப்புக்காக தமிழகம் வந்து மதுரை அருகிலுள்ள சோழவந்தானில் குடியேறியவர். இவரது முன்னோர் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலுக்குப் பின்புறம் வைகையாற்றில் பொதுமக்கள் நீராடுவதற்காக ஒரு படித்துறையை அமைத்தார்கள். 'முனகல' எனும் சொல்லுக்கு முனையுள்ள கல் என்று பொருள். இப்படியொரு படித்துறையை பாறாங்கல் கொண்டு கட்டுவார்கள் என்பதாலேயே முனகல என அழைக்கப்பட்டார்கள் போலும்.

முனகல பட்டாபிராமையா ஒரு பன்மொழி வித்தகர். இவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றதோடு, வேத சாஸ்திரங்களிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றவர். இந்தியா முழுவதும் சுற்றி வந்து மக்களை நன்கு அறிந்து கொண்ட பட்டறிவும் பெற்றவர்.

1919இல் நடைபெற்ற ஹோம்ரூல் இயக்கம் இவரை முதன்முதல் நாட்டுப் பணியில் இழுத்து வந்தது. பால கங்காதர திலகர் மதுரை விஜயம் செய்த போது அவருக்கு வரவேற்பு அளிப்பதில் முன் நின்றவர். 1921 - 22 காலகட்டத்தில் நடந்த நாகபுரி கொடிப்போராட்டத்தில் கலந்துகொள்ள மதுரை பகுதியிலிருந்து ஏராளமான தொண்டர்களை அனுப்பி வைத்ததோடு தானும் சென்று கலந்துகொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். மகாத்மா காந்தியின் மதுரை விஜயத்தின் போது அவர் ஜார்ஜ் ஜோசப் பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது ஹரிஜன நிதிக்காக அலைந்து திரிந்து மக்களைத் தூண்டி ஏராளமான பொருளும், நகைகளும் நிதிக்கு அளிக்கத் தூண்டினார். இவரது இந்தப் பணிக்காக மகாத்மா இவரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார்.

1926இல் இவர் சோழவந்தானில் ஒரு தொண்டர் படையை நிறுவி அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்தப் படையை கிராமம் கிராமமாக அனுப்பி அங்கெல்லாம் மக்களுக்கு நாட்டு நடப்படி எடுத்துச் சொல்லி தேசபக்திக் கனலை மூட்டினார். இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் ஆகியவற்றின் செயல் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றினார். இவரது AICC பதவியின் காரணமாக இவருக்கு வட இந்தியத் தலைவர்களின் நட்பும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மகாநாடுகளுக்கு இவர் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற எல்லா போராட்டங் களுக்கும் தொண்டர்களைத் தயார்செய்து அனுப்பும் பணியையும் திறமையாக செய்து வந்தார். அப்படிப்பட்ட அமைப்புகள் பல இடங்களிலும் இருந்தன. காமய கவுண்டன்பட்டியில் இவரது தொண்டர்படை பயிற்சி மையம் இருந்தது. 1930இல் போராட்டங்கள் உச்ச கட்டம் அடைந்த காலத்தில் இவர் கள்ளுக்கடை மறியல் செய்து சிறைபட்டார். இவர் திருச்சி, அலிப்புரம், பெல்லாரி ஆகிய சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார்.

1932இல் காந்தி - இர்வின் ஒப்பந்தம் தோல்வியை அடுத்து ஏற்பட்ட போராட்ட களத்தில் இவர் சர்வாதிகாரி எனும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்ட Sedition குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திருச்சி சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி இவரது அஞ்சா நெஞ்சத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. திருச்சி சிறையில் ஒரு அரசியல் கைதியை வார்டன் நையப் புடைத்துவிட்டார். இதனைக் கண்டித்து கொதித்து எழுந்தார் பட்டாபிராமையா. சிறை தலைமை அதிகாரியிடம் இவர் வார்டனுக்கு எதிராக முறையிட்டார். அவர் அந்தப் புகாரைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இதனைக் கண்டித்து சிறையிலிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் உண்ணாநோன்பு இருக்க இவர் தூண்டினார். சிறையில் கலவரம் மூளும் நிலை ஏற்பட, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குத் தயாராகியது. போலீஸ் துப்பாக்கிக்குத் தனது மார்பைத் திறந்து காட்டி, ஊம்! சுடு என்று இவர் முழக்கமிட்டதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது அங்கிருந்த வடநாட்டு அரசியல் கைதிகள் கங்குலி, சாட்டர்ஜி, கோஷ்குப்தா போன்றவர்கல் தலையிட்டு சமாதானம் செய்து, நிலைமை மோசமடையாமல் காத்தனர்.

1941இல் இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவராக ஆனார். இவரது காலத்தில் மதுரை மாவட்டம் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி முன்னேறியது. இவர் ஜில்லா போர்டு தலைமைப் பதவி வகித்த காலத்தில்தான் 1942இல் காந்திஜி வெள்ளையனே வெளியேறு போராட்ட தீர்மானம் நிறைவேற்றியமைக்காக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் கொதித்து எழுந்தபோது, இவர் மதுரையில் ஹர்த்தால் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்ததோடு, ஜில்லா போர்டு அலுவலகத்தையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் ஹர்த்தாலில் பங்குகொள்ளச் செய்தார். மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஜில்லா போர்டு அலுவலக சாவியை வாங்கி கதவைத் திறக்கும்படியாயிற்று. இவர் சாவியைக் கொடுக்க மறுத்ததால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரலாறெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா? அல்லது தெரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்களா? சொல்ல வேண்டாமா? சும்மா வந்ததா சுதந்திரம்?

'தீண்டாமை' எனும் கொடுமைக்கு சாஸ்திரங்களில் சான்றுகள் இல்லை என்று இவர் தீவிரமாக வாதிட்டார். இதனைத் தகுந்த ஆதாரங்களுடன் மகாத்மாவிடம் இவர் வாதிட்டார். இவரது அழுத்தமான சாஸ்திர ஞானத்தையும், வாதிடும் திறமையையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருந்த பிடிப்பையும் கண்டு மகாத்மா காந்தி வியந்து பாராட்டினார். 1942இல் கைது செய்யப்பட்டு சிறை வாசம் முடிந்து வெளியில் வந்ததும், இவர் தேசியப் பள்ளிக்கூடம், பாரதி வாசகசாலை, கைக்குத்தல் அரிசி சாப்பிடுவோர் சங்கம் போன்றவற்றை நிறுவினார். ஈ.வே.ரா. அவர்கள் தனது பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை எதிர்த்து அதே பத்திரிகைக்கு இவர் ஒரு கட்டுரையை அனுப்பி வெளியிடச் செய்தார். உத்தமபாளையத்திலிருந்து நாராயணசாமி செட்டியார் வெளியிட்டு வந்த "பாரதி" எனும் பத்திரிகையில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

1946இல் இவர் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் முனைப்பு காட்டி உழைத்தமைக்காக இவருக்கு அரசாங்கம் விருது அளித்து கெளரவித்தது. அதற்காக இவருக்கு அளிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை, இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது யுத்த நிதிக்காகக் கொடுத்து விட்டார். சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டபோது அதனை இவர் வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசாங்கத்தின் தாமரப் பட்டயம் பெற்ற இவர் 1977இல் காலமானார். வாழ்க முனகல பட்டாபிராமையா புகழ்!

பெரியகுளம் இராம சதாசிவம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
55. பெரியகுளம் இராம சதாசிவம்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

இராம சதாசிவம் என்ற இந்த தியாகி மதுரை மாவட்டம் பெரியகுளத்தையடுத்த சவளப்பட்டி எனும் குக்கிராமத்தில் மிகமிக எளிய குடும்பத்தில் பிறந்தவரென்றாலும், இவரது தியாக வரலாறு தஞ்சை மாவட்டம் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் 1942 ஆகஸ்ட்டில் நடந்த "திருவையாறு கலவரம்" எனும் போராட்டத்தின் மூலமாகத்தான் தொடங்கியது.

சவளப்பட்டியில் வாழ்ந்த ராமகிருஷ்ண கவுடர், கிருஷ்ணம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் சதாசிவம். இவர் தனது ஆரம்ப காலக் கல்வியை வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் தொடங்கினார். அதன்பின் பல ஆண்டுகள் விவசாயத்தில் ஈடுபட்டு தனது சொந்த நிலபுலன்களை பராமரித்து வந்தார். அப்போது இளைஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கிய ரா.நாராயணசாமி செட்டியார் என்பவரின் தூண்டுதலின் பேரில் இவர் உசிலம்பட்டியில் அப்போது இருந்த விவசாயப் பள்ளியில் 1936 தொடங்கி 1938 வரை விவசாயக் கல்வியைப் படித்து முதன்மை மாணவராகத் தேர்ந்தார். அதனைத் தொடர்ந்து காட்டுநாயக்கன்பட்டி எனும் ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ரா.நாராயணசாமி செட்டியார் இவரது ஆற்றலை இப்படி ஆரம்பப் பள்ளியில் வீணடிக்க விரும்பாமல் இவரை மேற்கொண்டு படிக்கத் தூண்டினார். 1940இல் அவருடைய சிபாரிசோடு தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பு படிக்க சேர்ந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து இவரது முகாம் திருவையாற்றுக்கு மாறியது. இங்குதான் இவருக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு அமைந்தது.

1942இல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பும், சமஸ்கிருத பட்டப் படிப்பும் படிப்பதற்காக வெளியூர்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேர்வார்கள். அப்படி வரும் மாணவர்கள் பெரும்பாலும் அங்கிருந்த கல்லூரி விடுதியில்தான் தங்கி படிப்பார்கள். அப்படி அங்கு தங்கியிருந்த மாணவர்களில் பெரும்பாலும், அன்றைய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமும், அனுதாபமும், தீவிர பற்றும் உள்ளவர்களாக விளங்கினார்கள். அப்படிப்பட்டவர்களில் ஈரோடு நகரத்திலிருந்து வந்து தமிழ் படித்துக் கொண்டிருந்த கு.ராஜவேலு, சேலம் ஆத்தூரிலிருந்து வந்திருந்த எஸ்.டி.சுந்தரம், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும் சமஸ்கிருதக் கல்லூரி மாணவருமான சோமசேகர சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள்.

1942 ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் மகாத்மா காந்தி தலைமையில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேறியது. அந்தத் தீர்மானம் நிறைவேறிய அன்றிரவே மகாத்மா உட்பட எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காந்திஜி எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதைக்கூட அரசாங்கம் தெரிவிக்கவில்லை. பெயர் சொல்லக்கூடிய அளவில் இருந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு பாதுகாப்பு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். பம்பாய் காங்கிரசுக்கு உடல்நிலை காரணமாக வராமல் பாட்னாவில் ஓய்விலிருந்த பாபு ராஜேந்திர பிரசாத், கஸ்தூரிபாய் காந்தி, மகாதேவ தேசாய் உட்பட அனைவரும் சிறையில். நாடு முழுவதும் கொந்தளிப்பு. மக்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் அவரவர்க்கு தோன்றிய முறைகளில் எல்லாம் எதிர்ப்பைக் காட்டினர்.

திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்களும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு உண்ணாவிரத போராட்டத்தைக் கல்லூரி வளாகத்திற்குள் நடத்தினர். அதனை சோமசேகர சர்மா தலைமை வகித்து நடத்தினார். அன்று இரவு உண்ணாவிரதப் பந்தல் எரிந்து சாம்பலாயிற்று. போலீஸ் விசாரணை நடந்தது. 12ஆம் தேதி திருவையாறு புஷ்ய மண்டபத் துறையில் ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் பிள்ளை என்பவரும், அப்போதைய செண்ட்ரல் ஸ்கூல் (தற்போது ஸ்ரீநிவாசராவ் மேல்நிலைப் பள்ளி) ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் பேசினர். 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்பு நடந்தது. காலை எட்டு மணிக்கே அரசர் கல்லூரி மாணவர்கள் தெருவுக்கு வந்து கோயிலின் தெற்கு வாயிலில் ஆட்கொண்டார் சந்நிதி அருகில் கூடினர். கடைகளை மூடும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது போலீஸ் தலையிட்டு மாணவர்களை தடிகொண்டு தாக்கினர். கூட்டம் சிதறி ஓட இதில் பொதுமக்களும் சேர்ந்து கொண்டனர். போலீஸ் மீது கல் வீசப்பட்டது. தபால் அலுவலக பெயர்ப்பலகை உடைக்கப்பட்டது, தபால் பெட்டி தகர்க்கப்பட்டது, தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. சிதறி ஓடிய கூட்டம் முன்சீப் கோர்ட், பதிவு அலுவலகம் ஆகியவற்றை சூறையாடி தீயிட்டுக் கொளுத்தியது. இந்தக் கலவரம் பிற்பகல் வரை தொடர்ந்தது. மாலை தஞ்சாவூரிலிருந்து மலபார் ரிசர்வ் படை வந்தது. நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ராம சதாசிவம் உட்பட எஸ்.டி.சுந்தரம், கு.ராஜவேலு ஆகியோரும் கைதாகினர்.

இறுதியில் 44 பேர் மீது பல்வேறு கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில் ராம சதாசிவம் ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றார். இவருடன் எஸ்.டி.சுந்தரம், கு.ராஜவேலு போன்ற மாணவர்கள் தவிர, திருவையாற்றைச் சேர்ந்த பலரும், குறிப்பாக தற்பொழுது தஞ்சாவூர் ஸ்ரீநிவாசபுரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தியாகி கோவிந்தராஜு, குஞ்சுப் பிள்ளை, சுப்பிரமணியன் செட்டியார், சண்முகம், தில்லைஸ்தானம் மாணிக்கம் பிள்ளை போன்ற பலர் தண்டனை பெற்றனர்.

சிறையிலிருந்து வெளிவந்த ராம சதாசிவம் 1944இல் பெரியகுளம் நந்தனார் மாணவர் இல்லத்தில் பணியில் சேர்ந்தார். 1946இல் இவருக்குத் திருமணம் நடந்தது. சிவகாமி எனும் பெண்ணை மணந்தார். 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் வினோபாஜி அவர்களுடைய சீடனாகி, தனது தம்பியை அவருடைய ஆசிரமத்தில் சேர்த்தார். இந்த உயர்ந்த தியாகி இன்னமும் மதுரையில் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கிறார். வாழ்க இவரது புகழ்.

திண்டுக்கல் மணிபாரதி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
54. திண்டுக்கல் மணிபாரதி
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

திண்டுக்கல் நகரம் வரலாற்றுப் புகழ் பெற்றது. தொழில்துறையில் நல்ல வளர்ச்சியடைந்து மதுரைக்கு அடுத்ததாகக் கருதப்படும் பெரிய நகரம். பூட்டு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஊர். திண்டுக்கல் பூட்டுதான் உலகப் பிரசித்தமானது. இந்தப் பகுதியில் தலையணை போன்ற தோற்றத்தில் அமைந்த ஓர் குன்றிற்கு தலையணைப் பாறை என்று பெயர். இது நாளடைவில் மருவி 'திண்டுக்கல்' என வழங்கப்படுகிறது. இந்தப் பாறை 400 அடி அகலம் 280 அடி உயரமும் கொண்டது. உறுதியான இந்தப் பாறையைப் போலவே இங்கு உறுதியான மனம் படைத்த தேசபக்தர்கள் பலர் தோன்றினார்கள்.

திண்டுக்கல்லில் அமைந்துள்ள கோட்டை 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. 1736இல் ஆற்காடு நவாப் சந்தா சாகேப் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து மைசூர் படை இந்த ஊரைக் கைப்பற்றியது. 1755இல் ஹைதர் அலி இந்த நகரத்தை ஒரு ராணுவ முகாமாக மாற்றியமைத்தார். அதுமுதல் இந்த ஊர் வரலாற்றில் பல போர்களுக்குக் காரணமாகவும் அமைந்தது. மேலும் திண்டுக்கல்லையடுத்த மலைப் பிரதேசத்தில் விளைந்த சிறுமலைப் பழம் எனும் ஒரு அரிய வகை வாழைப்பழம் மிகவும் பிரசித்தமாக இருந்தது. பழனி ஆலயத்திற்கு பஞ்சாமிர்தம் செய்ய இது பயன்பட்டது. அது தற்போது அரிதாகிவிட்டது.

இத்தனை அரிய வரலாற்றுப் பின்னணியுள்ள திண்டுக்கல்லில் தோன்றிய பல தேசபக்தர்களில் மணிபாரதியும் ஒருவர். இவ்வூரிலிருந்து மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த மணிபாரதி இளவயதிலேயே, பள்ளிப்பருவத்திலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு, மகாத்மா காந்தி வகுத்துக் கொடுத்தப் போராட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டார். வயது ஏற ஏற இவரது போராட்டக் களம் விரிவடைந்து கொண்டே சென்றது. மாணவர் இயக்கத்திலிருந்து இவர் நகர காங்கிரஸ் கமிட்டியில் அங்கம் வகிக்கத் தொடங்கினார். சுற்று வட்டார கிராமங்களுக் கெல்லாம் சென்று அங்கு மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டினார். அதற்கேற்ப நல்ல பேச்சுத் திறன் இவருக்கு அமைந்திருந்தது நல்லதாகப் போயிற்று. மக்கள் இவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினார். வெகுகாலம் "திண்டுக்கல் மணிபாரதி" என்ற பெயர் மேடைப் பேச்ச்சில் திறமையானவர் என்று மக்களுக்குத் தெரிந்திருந்தது.

திண்டுக்கல்லை மையமாக வைத்துச் சுற்றுப்புற கிராமங்களில் சுதந்திரப் பிரச்சாரம் செய்து வந்த இவர், நாளடைவில் அப்போதைய தேசிய வாதிகளாகவும், பின்னர் பொதுவுடமை கட்சியினராகவும் இருந்த ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன் இவர்களோடும், ஆன்மீகமும் தேசியமும் இரு கண்களாக மதித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர்களுடன் இணைந்து சென்னை மாகாணம் முழுவதும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

1930ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரகம், தமிழகத்தில் ராஜாஜி நடத்திய வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரக யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல போராட்டங்கள் நடந்த காலம். இந்த காலகட்டத்தில் திண்டுக்கல் மணிபாரதி சிறைப்பட்டு ஒரு வருடம் கைதியாக இருந்தார். இந்த தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த இவர் மீண்டும் 1932இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கைதாகி சிறை சென்றார்.
2
தொழிலாளர்களுக்காகப் போராடத் தொடங்கிய இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசில் இணைந்து பாடுபட்டார். INTUC எனப்படும் தேசிய தொழிலாளர் இயக்கத்தில் அப்போது முனைப்புடன் ஈடுபட்டிருந்த ஜி.ராமானுஜம், ரங்கசாமி, எம்.எஸ்.ராமச்சந்திரன், வேலு போன்றவர்களோடு சேர்ந்துகொண்டு தொழிலாளர்கள் நலனுக்காகப் போராடலானார். 1936இல் சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக முழுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஊர் ஊராக சென்று மேடைகளில் காங்கிரசுக்கு வாக்களிக்க வெண்டினார். இவருடன் தீரர் சத்தியமூர்த்தி, கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரும் மேடைகளில் முழங்கி வந்தனர். இந்தத் தேர்தலில்தான் அப்போது ஆட்சி புரிந்த ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியமைத்தது, ராஜாஜி 'பிரதமர்' (முதல்வர்) ஆனார்.

1940இல் பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். செளந்திரா மில் தொழிலாளர் சங்கத்துக்குத் தலைவராக இருந்த மணிபாரதி கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இவர் விடுதலை யடைந்த நேரம், மகாத்மா காந்தி அறிவித்த "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டம் நாடெங்கும் வெடித்துக் கிளம்பியது. தேசத் தலைவர்கள் அனைவரும் சிறைப்பட்டிருந்த அந்த நேரத்தில், போராட்டத்தைத் தலைமையேற்று நடத்த ஆளில்லாமல், பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களுமே அவரவருக்குத் தோன்றிய விதத்தில் போராட்டம், அதிலும் வன்முறைப் போராட்டம் நடத்தது தொடங்கியிருந்த நேரம். மணிபாரதி மட்டும் விட்டுவைக்கப்படுவாரா? இவரும் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு கைதியாக சிறை வைக்கப்பட்டார். இவர் வேலூர், கண்ணனூர் ஆகிய இடங்களில் தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தார். இவருடன் சிறையில் எம்.எஸ்.முனுசாமி, ஏ.ராங்கசாமி ஆகிய தேசபக்தர்களும் இருந்தனர்.

இவர் தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தில் நெடுநாட்கள் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராக தமிழ்நாட்டின் மேடைகள் தோறும் முழங்கி வந்தார். காமராஜர் முதலான தமிழகத் தலைவர்கள் இவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். வாழ்க திண்டுக்கல் மணிபாரதி புகழ்.

தேனி என்.ஆர். தியாகராஜன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
53. தேனி என்.ஆர். தியாகராஜன்
எழுதியவர்: வெ. கோபாலன்

கர்ம வீரர் காமராஜ் அவர்கள் தமிழக அரசியலில் கோலோச்சிய காலத்தில் தென் தமிழ்நாட்டிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமை மிக்க உறுப்பினர்களில் தேனி என்.ஆர். தியாகராஜனும் ஒருவர். திராவிட இயக்கத்தினர் தேனி, கம்பம் பக்கம் கூட்டங்கள் போடுவதற்குக்கூட அச்சப்படக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தவர் தேனி என்.ஆர்.தியாகராஜன். நெஞ்சுத் துணிவும், தேசப் பற்றும், தூய கதராடையும், அச்சமற்ற பேச்சும் இவரது அடையாளங்களாகத் திகழ்ந்தன.

இவர் தேனிக்கு அருகிலுள்ள இலட்சுமிபுரம் எனும் கிராமத்தில் பிறந்தார். கிராம காங்கிரஸ் கமிட்டியிலிருந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய திரு தியாகராஜன், படிப்படியாக வளரத் தொடங்கினார். 1939இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1931 முதல் 1942 ஆகஸ்ட் புரட்சிவரையிலான எல்லா போராட்டங்களிலும் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இவர் இல்லாத சிறைச்சாலைகளே இல்லை எனலாம். அலிப்புரம், வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி என இவர் இருந்த சிறைகளின் எண்ணிக்கை அதிகம்.

தேனி நகரத்தில் ஊர்ச்சந்தைக் கூடும் இடத்துக்கு அநியாய கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தியாகராஜன் போராடினார். அதில் இவர் கைது செய்யப்பட்டு வழக்கில் ஒன்பது மாதம் சிறை தண்டனை பெற்றார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் தலைமறைவாக இருந்து கொண்டு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது திறமையும், ஆற்றலும் இவரது பெருமையை நாடறியும்படி செய்தது. தொடக்கம் முதலே இவர் மாநில காங்கிரஸ் கமிட்டியில் ஓர் முக்கிய இடம் பெற்றிருந்தார். அதுமட்டுமல்ல காமராஜ் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்தார்.

1949ஆம் ஆண்டு இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுவரை பிரிட்டிஷ் அரசுக்கு ஜால்ராக்களாக இருந்து கொண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு வரவேற்பும், விருந்தும் அளித்து வந்த ஜில்லா போர்டு இவர் காலத்தில் மக்கள் பணி செய்யத் தொடங்கியது. பல நல்ல திட்டங்களை இவர் கொண்டு வந்து நிறைவேற்றினார். 1957இல் நடைபெற்ற சென்னை சட்டசபைத் தேரதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1964இல் இவர் சென்னை சட்டசபை மேல்சபை உறுப்பினரானார்.

1968இல் மேல்சபை எதிர்கட்சித் தலைவராக இருந்து சிறப்பாக பணி புரிந்தார். இவர் மிகவும் சுமுகமாக அனைவரிடமும் பழகக் கூடியவர். நல்ல பண்பாளர். அதிகம் நண்பர்களைப் பெற்றவர். நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. இவர் 1969 ஏப்ரல் மாதம் உடல்நலமில்லாமல் இருந்து இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தியாகி என்.ஆர். தியாகராஜன் புகழ்!

பழனி கே.ஆர்.செல்லம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
52. பழனி கே.ஆர்.செல்லம்
எழுதியவர்: வெ.கோபாலன்

தமிழகத்தில் மிக அதிக வருமானம் தரும் ஆலயம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம். இன்று நேற்றல்ல காலங்காலமாய் பழனி மிகப் பிரசித்தி பெற்ற ஊர். பழனி பஞ்சாமிர்தமும், சித்தநாதன் விபூதியும் உபயோகிக்காதவர்கள் அரிது. அப்படிப்பட்ட புண்ணியத் தலத்தில் தோன்றிய ஓர் அரிய தியாகிதான் கே.ஆர்.செல்லம் ஐயர். பழனிக்கு அருகில் கலையம்புதூர் என்றொரு கிராமம். அங்கு கே.எஸ்.இராமநாத ஐயர் தம்பதியருக்கு 1908இல் மகனாகப் பிறந்தவர் கே.ஆர்.செல்லம். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு. விழா கொண்டாடுகிறார்களா காங்கிரஸ்காரர்கள்? நமக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட தொண்டர்களை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல் இப்படிப்பட்ட தியாகபுருஷர்கள் இந்த நாட்டில் தோன்ற மாட்டார்கள்.

இவர் மாணவப் பருவத்திலேயே நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே இவர் பழனி நகரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். அப்போது காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் மணி செட்டியார் என்பவர். அவரது தலைமையின் கீழ் செல்லம் செயலாளராக இருந்து பணியாற்றினார். இளமைத் துடிப்பும், தேசாவேசமும் இவரை பம்பரமாகச் சுழன்று செயல்பட வைத்தன. ஊர் ஊராக, கிராமம் கிராமமாக இவர் சுற்றி வந்து காங்கிரஸ் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறிவந்தார். காந்திய சிந்தனைகளை மக்கள் மனங்களில் ஊட்டி வந்தார். நூல் நூற்றல், கதர் அணிதல், வெளிநாட்டுத் துணிகளை பகிஷ்கரித்தல் போன்றவற்றில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.

தேசபக்தி காரணமாக தேசசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், வயிற்றுப் பாட்டுக்காக ஒரு சொந்தத் தொழில் வேண்டாமா? பழனியிலேயே ஒரு உணவகத்தை உருவாக்கினார். இவரது உணவகம் தேசபக்தர்கள் கூடும் படைவீடாக மாறியது. இங்கு வரும் தேசபக்தர்களுக்கு உணவளித்து உபசரித்தார். இவர் ஹோட்டலில் வருவோர் மத்தியில் அந்தக் காலத்திலேயே ஜாதி பாகுபாடோ, வித்தியாசமோ எதுவும் இல்லாத சமத்துவ விடுதியாகத்தான் அது விளங்கியது. இவரைச் சுற்றி எப்போதும் காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டிருப்பர். எந்தப் போராட்டமானாலும் இவர் வழிகாட்டுதலுக்காக இளம் தொண்டர்கள் காத்திருப்பார்கள். அப்படி இவரது வழிகாட்டலில் பற்பல தொண்டர்கள் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார்கள். 1930இல் தொடங்கிய இவரது இந்தப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

பழனி நகரத்து மக்கள் இவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டார்கள். இவர் சொன்ன வழியில் போராட்டங்கள் நடைபெற்றன. இவரது எளிமை, இனிய பேச்சு, பணிவு இவை காரணமாக மக்கள் இவரை மிகவும் விரும்பிப் பின்பற்றலாயினர். 1932இல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இவர் தொண்டர்களை தயார் செய்து அனுப்பி வந்தார். அந்நியத் துணி பகிஷ்காரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. அதில் இவரது பங்கு மகத்தானது. 1934ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பழனிக்கு விஜயம் செய்தார். அந்த சமயத்தில்தான் ஹரிஜனங்கள் பழனி ஆலயத்தில் நுழையத் தடை இருப்பதறிந்து இவரும் கோயிலுக்குச் செல்லவில்லை. பின்னர் 1937இல் ராஜாஜி தலைமையில் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயம், பழனி தண்டபாணி ஆலயம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தபின்னர்தான் காந்தி இவ்விரு கோயில்களுக்கும் வருகை புரிந்திருக்கிறார். மகாத்மா பழனி வந்தபோது ஹரிஜன நிதிக்காக இவர் பணம் திரட்டி காந்தியடிகளிடம் கொடுத்தார். காந்திஜியோடு நெருங்கி பழகி அவருக்கு
2

உபசாரங்கள் செய்து தங்க வைத்தார். ஊரில் நடைபெறும் கூட்டங்கலில் எல்லாம் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை ஹரிஜன நிதிக்குக் கொடுக்க வைத்தார்.

1935, 36 ஆகிய ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, பாபு ராஜேந்திரபிரசாத், தீரர் சத்தியமூர்த்தி, வி.வி.கிரி ஆகியோர் பழனிக்கு விஜயம் செய்த போது அவர்களையெல்லாம் தனது விருந்தினராக ஏற்றுத் தங்க வைத்து உபசரித்து அனுப்பிவைத்தவர் செல்லம் ஐயர். 1937இல் நடைபெற்ற சென்னை சட்டசபைத் தேர்தலில் மட்டப்பாரை வெங்கட்டராமையர் நின்றார். இவருக்கு ஆதரவாக செல்லம் ஐயர் ஊர் ஊராகச் சென்று வாக்குகள் சேர்த்தார். காங்கிரசின் மஞ்சள் பெட்டி வெற்றிக்காக இவர் தீரர் சத்தியமூர்த்தியுடன் சுற்றுப்பயணம் செய்து பாடுபட்டார்.

ராஜாஜியின் ஆணைப்படி மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தது போல் இவர் பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆலயப் பிரவேசம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவர் இப்படிச் செய்ததால் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், அவைகளை இவர் தீரத்துடன் எதிர்கொண்டார்.

1942இல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் போது இவரும், பி.ராமச்சந்திரன், பி.எஸ்.கே.லக்ஷ்மிபதிராஜு ஆகியோரும் கோஷமிட்டுக்கொண்டு ஊர்வலம் சென்றபோது ரிமாண்டில் 15 நாட்கள் இருந்தார். தேச சேவைக்காகச் சிறை செல்லும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவிகளை இவர் செய்து வந்தார். ராஜாஜி யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்டிவிட மாட்டார். அப்பேற்பட்ட ராஜாஜியாலேயே பெரிதும் பாராட்டப்பட்டவர் பழனி செல்லம் ஐயர் அவர்கள். இவரது பணி சுதந்திரம் பெற்றபின்பும் தொடர்ந்து நடந்து வந்தது. வாழ்க பழனி கே.ஆர். செல்லம் ஐயரின் புகழ்!

மதுரை ஜார்ஜ் ஜோசப்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
51. மதுரை ஜார்ஜ் ஜோசப்.
எழுதியவர்: வெ. கோபாலன்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரையின் பங்கு மகத்தானது. தமிழகத்தின் கலாச்சார தலைநகரமாக விளங்கும் இந்த மதுரை இன்றும்கூட புதிதாக தோன்றுகின்ற அரசியல் இயக்கங்களாகட்டும், ஏற்கனவே செயல்படுகின்ற இயக்கங்களின் மாநாடுகளாகட்டும் இந்த மதுரை நகரத்தில் நடந்தால் மிகவும் பிரகாசமான எதிர்காலம் அமைந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அப்படிப்பட்ட மதுரை மண்ணில்தான் எத்தனையெத்தனை அரசியல் இயக்கங்கள்; எத்தனையெத்தனை அரசியல் நிகழ்ச்சிகள். வெகுகாலம் நமது ஆலயங்களின் கதவுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடைக்கப்பட்டிருந்ததே, அப்போது அதை அனைவருக்கும் திறந்து விட்ட பெருமை மதுரையைத்தான் சேரும். ராஜாஜியின் விருப்பப்படி மதுரை தியாகி ஏ.வைத்தியநாத அய்யர் தலைமையில் ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசம் செய்தது இந்த மதுரையில்தான். அந்த ஆலயப் பிரவேசத்தை எப்படியும் தடுத்துவிடுவது என்று ஒரு சாரார் தலைகீழாக நின்று முயன்றதும் இந்த மதுரையில்தான். ஆலயப் பிரவேசம் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற தன் முழு பலத்தையும் பசும்பொன் தேவர் அவர்கள் செலுத்தியதும் இந்த மதுரையில்தான். அதே பசும்பொன் தேவர் ஓர் வழக்கில் கைது செய்யப்பட்டதும் இந்த மதுரையில்தான். அடே அப்பா! இந்த மதுரை மண் எத்தனை வரலாற்றுச் செய்திகளைத் தன் மடியில் வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

அத்தகைய புனிதமான நகரத்தில் காங்கிரஸ் இயக்கம் எத்தனையோ தலைவர்களையும் தொண்டர்களையும் உருவாக்கியிருக்கிறது. மதுரை காந்தி என்ற பெயர் என்.எம்.ஆர்.சுப்பராமனுக்கு. அவர் காலத்திலேயே காந்திய கொள்கையால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்திலும், காங்கிரஸ் தொண்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்காக ஆஜராகித் தன் வாதத்திறமையால் பலரது விடுதலைக்குக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ஜோசப் ஆவார்.

ஜார்ஜ் ஜோசப் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டவர். மக்கள் இவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தனர். அந்த பெயர் "ரோஜாப்பூ துரை" என்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மகாத்மா இந்திய சுதந்திரப் போரை தலைமை ஏற்று நடத்துமுன்பாகவே ஜார்ஜ் ஜோசப் 1917இல் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தக் காலத்தில் அரசியல் போராட்டங்கள் வலிமையடையாமலும், தீவிரமான அரசியல் இயக்கங்கள் நேரடியாக சுதந்திரம் பெற போதுமான அளவில் நடவடிக்கைகள் எடுக்காத காலகட்டத்தில் இந்தியர்களின் பிரச்சினைகளை இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய தலைவர்களைக் கொண்ட குழுவொன்று இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் மூன்று பேர் உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர்தான் மதுரை ஜார்ஜ் ஜோசப். மற்ற உறுப்பினர் சேலம் பி.வி.நரசிம்மையர். இவரைப் பற்றி மகாகவி பாரதியார்கூட தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அன்றைய சென்னை சட்டசபையில் இவர் பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். மூன்றாவது உறுப்பினர் மாஞ்சேரி ராமையா என்பவராவார். இவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் புறப்பட்டு கப்பலில் சென்றனர். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் இவர்களது வரவை விரும்பவில்லையாதலால் தடைசெய்தது. ஜிப்ரால்டர் வரை இவர்கள் போன கப்பல் போய்ச்சேர்ந்தபோதும், இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல் இவர்கள் இந்தியா திரும்ப நேர்ந்தது.

தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இவர் மிகவும் அக்கறை காட்டினார். சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காக தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். இது 1918ஆம் ஆண்டில் நடந்தது. 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாடுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். இவரது மனைவியும் இவரது நடவடிக்கைகள் அனைத்திலும் ஒத்துழைப்புக் கொடுத்ததோடு தாமும் பல போராட்டங்கலிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கணவருக்கு வலது கரமாகச் செயல்பட்டார்.

இவர் பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்த பிரபலமான வழக்கறிஞர். பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இவர் மட்டும் தன் தொழிலில் கவனம் செலுத்தி சம்பாதிப்பது என்று இருந்திருபாரானால் பெரிய கோடீஸ்வரராக ஆகியிருக்கமுடியும். என்றாலும்கூட நாட்டுப் பற்று, ஏழை எளியவர்களின்பால் உள்ள அன்பு, தொழிலாளர் பிரச்சினைகளில் இவருக்கிருந்த ஈடுபாடு இவற்றின் காரணமாக இவர் தன் தொழிலைக் காட்டிலும், நாட்டுச் சேவையையே பெரிதும் மதித்துப் போற்றினார். இந்த காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மதுரை ஜார்ஜ் ஜோசப்பை பெரிதும் கவர்ந்தது. அதில் முழுவதுமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயகத்தில் ஈடுபடுவதற்காக, பெரும் வருவாய் ஈட்டித்தந்துகொண்டிருந்த தனது வக்கீல் தொழிலை உதறித் தள்ளினார்.

ஆங்கில பாணியிலான தனது உடை பழக்கத்தை மாற்றிக்கொண்டு தூய முரட்டுக் கதராடை அணையலானார். மகாத்மா அறிவித்த எல்லா போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப்தான் முன்னணியில் இருந்தார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அலகாபாத் நகரத்திலிருந்து "இண்டீபெண்டெண்ட்" எனும் பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகைக்கு ஜார்ஜ் ஜோசப்தான் அதிபர். அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரைகளுக்காக இவர் அலகாபாத்தில் கைதுசெய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றார். இவரது சிறை தண்டனை நைனிடால் எனும் இடத்தில் கழிந்தது. சிறையில் இவருடன் இருந்த முக்கியமான தலைவர்கலில் ஜவஹர்லால் நேருவும் ஒருவர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அப்போது மகாத்மா காந்தி நடத்தி வந்த "யங் இந்தியா" எனும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியரானார். அந்தப் பத்திரிகை வாயிலாக இவர் எழுதிய கட்டுரைகளின் மூலம் இவர் பல தேசபக்தர்களை உருவாக்கினார். சுதந்திரக் கிளர்ச்சி படித்த மக்கள் உள்ளங்களில் எழ இவரது எழுத்துக்கள் காரணமாயிருந்தன. உலகத் தலைவர்கள் பலருடன் இவர் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர்களில் ராம்சே மக்டனால்டு, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோரும் அடங்குவர்.

1937ஆம் வருடம் காங்கிரஸ் கட்சி சட்டசபைக்கு போட்டியிட்டு பெரும்பாலான இடங்களை வென்று ஆட்சி அமைத்தது நமக்கெல்லாம் தெரியும். அந்த சட்டசபையில் ஜார்ஜ் ஜோசப் அங்கம் வகித்தார். ஓராண்டு காலம் அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த சமயம் 1938இல் இவர் இம்மண்ணுலக வாழ்வை நீத்து அமரர் ஆனார். வாழ்க ஜார்ஜ் ஜோசப் அவர்க ளின் புகழ்!

மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
50. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

மதுரை நகரமும், அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களும் நாடு போற்றும் நல்ல பல தியாகிகளைக் கொடுத்திருக்கிறது. தென் மாவட்டங் களில்தான் எத்தனை எத்தனை சுதந்திரப் போர் நிகழ்ச்சிகள்? பெயர் தெரிந்த, பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்கள், அவர்கள் அத்தனை பேரையும் நினைவுகூர முடியாவிட்டாலும், ஒரு சிலரைப் பற்றிய விவரங்களையாவது நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் அல்லவா? அந்த வகையில் மதுரை ஸ்ரீநிவாஸ ஐயங்கார் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

1919ஆம் ஆண்டு தொடங்கி ஒரு சில ஆண்டுகள் மதுரை வீதிகளில் ஓர் புதுமை தொடங்கி நடந்து வரலாயிற்று. விடியற்காலை நேரம். கிழக்கே வெள்ளி எழும் பொழுது; அப்போது மகாகவி பாரதியாரின் "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்" எனும் பூபாள ராகப் பாடல் இனிமையாகப் பாடப்பெறும் ஒலி கேட்கும். இந்தப் பாடல் ஒலி கேட்ட மாத்திரத்தில் ஆங்காங்கே பல வீடுகளிலிருந்து சிறுவர்கள் எழுந்து வந்து அவசர அவசரமாக, அந்த பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிப் பாடலைப் பாடிக்கொண்டு, கையில் ஒரு மூவண்ணக் கொடியை ஏந்திக்கொண்டு, வெள்ளை அங்கியும், காவி தலைப்பாகையுமாக வந்துகொண்டிருக்கும் அந்த மனிதரோடு சேர்ந்து கொள்வார்கள். நேரமாக ஆக அந்த பாரத மாதா பஜனை கோஷ்டி பெரிதாக ஆகிவிடும். இந்த பஜனை பல தெருக்களைச் சுற்றிவிட்டு இறுதியில் அந்த மனிதரின் வீட்டுக்குப் போய்ச்சேரும். அங்கு அந்த சிறுவர்களை உட்கார வைத்து நாட்டு நடப்பையும், ஆங்கிலேயர்களை நம் நாட்டை விட்டுத் துரத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசுவார். அந்த பேச்சு அந்த இளம் சிறார்களின் அடிமனதில் போய் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. இதனைக் கண்டவர்கள் பலர் இவர் ஒரு 'சுயராஜ்யப் பைத்தியம்', இவர் சுயராஜ்யம் வாங்கப் போகிறாராம். அதற்கு இந்த குழந்தைகளின் பட்டாளத்தைத் தயார் செய்கிறார் என்று கேலி பேசுவார்கள்.

மகாகவி பாரதியார் பாடல்கள் அனைத்தையும் இவர் மதுரை தெருக்களில் பாடிப் பிரபலப் படுத்தினார். இவற்றில் பல பாடல்கள் வெளியிடப்பட்டிருக்காது; இருந்த போதிலும் அவை ஸ்ரீநிவாஸவரதன் பாடிப் பாடி பிரபலப் படுத்தி விடுவார். இவரைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் உடனடியாக பாரதியாரும் அவரது பாடல்களும்தான் நினைவுக்கு வரும், அந்த அளவுக்கு இவர் 'பாரதி பக்தன்'; ஏன்? இவரை பாரதிப் பித்தன் என்றே சொல்லலாம்.

1917ஆம் வருஷம், இவர் அன்னிபெசண்ட் நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தில் பங்கு கொண்டார். சுதந்திரப் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு இவர் பலமுறை சிறை சென்றார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இவர் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். இவரை எல்லோரும் 'நிஷ்காம்யகர்மன்' என்றும் 'கர்மயோகி' என்றும் அழைக்கலாயினர். இவர் மிகமிக
2

எளிமையானர். இவர் பிறந்தது 1896ஆம் வருஷம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று. வாழ்க்கையில் எவரிடமும் வேற்றுமை பாராட்டாதவர். அனைவரும் இவருக்குச் சமமே! தேசியம்தான் இவருக்கு மதம். தேசியம்தான் வாழ்க்கை. பிறருக்கு உதவுவதென்பது இவரது இரத்தத்தில் ஊறிய பண்பு. தலைசிறந்த தேசியவாதிகளாகத் திகழ்ந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவம், வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதி ஆகியோரிடம் நட்பு கொண்டு பழகியவர். 1919இல் இவர் பொதுச்சேவையில் ஈடுபட்ட நாள்முதல் காங்கிரஸ் இயக்கத்தின் கட்டளைகள் அனைத்திலும் பங்கேற்றவர். தன் கொள்கைகளைச் சிறிதுகூட விட்டுக்கொடுக்காதவர். எதிர் கட்சிக்காரர்களானாலும், அவர்களுக்கு உரிய மரியாதைக் கொடுத்து வந்தவர்.

இவர் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துத் தேறியவர். நல்ல எழுத்தாளர்; சொற்பொழிவாளர். நல்ல குரல் வளம் இருந்ததனால் நன்கு பாடக்கூடியவர். பாரதியார் பாடல்களை இனிய குரலில் பாடி பிரபலப்படுத்தியவர். இவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் அதனை பொறுப்போடும், திறமையோடும் செய்யும் ஆற்றல் படைத்தவர். கலைத் துறையிலும் இவர் தன் திறமையைக் காட்டத் தவறவில்லை. நாடகங்களில் நடித்தார்; திரைப்படங்களும் இவரை ஏற்றுக் கொண்டன. ஆங்காங்கே இவர் பல வாசகசாலைகளையும், சங்கங்களையும் அமைத்தார். இவருக்குத்தான் மகாகவி பாரதி கடையத்தில் இருந்தபோது தன் நூல்களை பிரசுரம் செய்வது பற்றி மிக விரிவாக கடிதம் எழுதினார். தீப்பெட்டிகளைப் போல் தன் நூல்கள் அனைவர் கைகளிலும் அரையணா, காலணா விலைக்குப் போய்ச்சேர வேண்டுமென்று பாரதி விரும்பி எழுதியது இவருக்குத்தான்.

1936இல் தனது நாற்பதாவது வயதில் தன் மூத்த தாரத்தை இழந்தார். 1943இல் தன் ஒரே மகனையும் இழந்தார். இவரது முதல் மனைவி ஒரு தேசபக்தை. பத்மாஸினி அம்மையார் என்று பெயர். அவரைப் பற்றி நாம் முன்பே ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம். மறுபடியும் அதே பத்மாஸினி எனும் பெயரில் 1946இல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு மகனும் பிறந்தனர். இந்த பத்மாஸினியும் இவருக்கு ஏற்றபடி தேசபக்தராயும், நல்ல இசை ஞானம் உள்ளவராகவும் இருந்தார். இவர் தனது 67ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டு 1962 பிப்ரவரி 4ஆம் தேதி சோழவந்தானில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தேசபக்தர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் புகழ்!

Compiled by: V.Gopalan

தியாகி பி.எஸ். சின்னதுரை

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
49. தியாகி பி.எஸ். சின்னதுரை
தொகுப்பு: வெ.கோபாலன்

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சட்டசபையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக சட்டசபை உறுப்பினராக இருந்து விவாதங்களில் சிறப்பாகக் கலந்துகொண்டு பணியாற்றியவர் பி.எஸ்.சின்னதுரை. பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடும் வயது இல்லாத நிலையில் பெரிய தலைவர்களுக்கிடையே செய்திகளை ரகசியமாகப் பரிமாரிக்கொள்ள ஒவர் தூதனாகப் பயன்பட்டு வந்தார். விளம்பரத் தட்டிகளை எழுதி ஊரில் பல பகுதிகளிலும் கொண்டுபோய் வைப்பார். சுவர்களில் கூட்ட விளம்பரங்களை எழுதுவதோடு, அறிவிப்பு செய்து மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளையும் செய்து வந்தார். அப்படி இவர் பணியாற்றும் காலங்களில் பலமுறை போலீசாரிடம் மாட்டிக்கொண்டு புளியம் மிளாரினால் அடிவாங்கி கால் வீங்கிக் கிடந்த நாட்களும் அதிகம்.

இவர் பல்லடத்தில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சுப்பராய செட்டியார். இவர் படிக்கும் காலத்தில் இவருக்கு அமைந்த ஆசிரியர்களில் பலர் தேசபக்தர்கள். அவர்கள் ஊட்டிய தேசபக்தி இவர் ரத்தத்தில் கலந்துவிட்டது. இவர் தன் வயதுக்கும் மீறிய பணிகளில், தேச சேவையில் ஈடுபட்டு பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.

ஒரு ஆலையில் தொழிலாளியாக சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்த போதே தேச சேவையை இவர் உயிர் நாடியாகக் கருதி வந்தார். மால நேரங்களில் எங்கெங்கு பொதுக்கூட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று பெஞ்சுகளைத் தூக்கிப் போடுவது முதல் மேடையை தயார் செய்வது வரை பல வேலைகளைத் தானே முன்வந்து செய்வார். நாளடைவில் பெரிய தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு இவரும் மேடைப் பேச்சாளர் ஆனார். பலரிடமிருந்து தெரிந்துகொண்ட செய்திகள் இவரது பேச்சில் வெளிவர அவை மக்கள் மனதில் போய் தைக்கத் தொடங்கியது. இவர் பேச்சில் வீரம் வெளிப்படும், செய்திகளில் உணர்ச்சி விளையாடும், கோழைகளையும் நிமிர்ந்து நிற்கச் செய்யும் அதிரடிப் பேச்சாக இவரது பேச்சுக்கள் அமையும்.

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதும், இவர் தீவிரமாக யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். ஊர் ஊராகச் சென்று மக்களிடம் இந்தப் போர் நம்மை கலந்தாலோசிக்காமல் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்காக ஈடுபடும் போர். இதில் நம் மக்களும், செல்வமும் வீணடிக்கப்படுவது நியாயமில்லை. நாம் எந்த விதத்திலும் இந்தப் போரில் அவர்களுக்கு உதவக்கூடாது. இது ஏகாதிபத்திய போர். நம்மை அடக்கி ஆள்வோரின் போர், எனவே இது நமக்கு எந்த வகையிலும் தொடர்புடையதில்லை என்று பேசினார். இத்தகைய பேச்சு இவரை சிறைச்சாலையில் கொண்டு போய் சேர்த்தது. தொழிலாளர் சின்னதுரை, சிறைக்கைதியானார்.

1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் தலைவர்கள் இல்லாமலேயே பொதுமக்களாலும், தொண்டர்களாலும் நடத்தப்பட்டது. அதில் சின்னதுரை ஈடுபட்டார். அப்போதைய கோவை மாவட்ட தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமி அவர்கள் தலைமையில் போராட்டம் வலுத்தது. சூலூர் விமான தளம் தகர்க்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ரயில்கள் கவிழ்க்கப்பட்டன. பல இரகசிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் வன்முறை விளையாடியது.

பி.எஸ்.சின்னதுரை கைது செய்யப்பட்டு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். சித்திரவதைக்கு ஆளானார். எதற்கும் மனம் கலங்காமல் நாட்டு விடுதலை ஒன்றையே சதாகாலம் எண்ணிக் கொண்டிருந்தார் அவர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொழிலாளர்களின் தலைவர் ஆனார். பல தொழிற்சங்கங்களுக்கு இவர் தலைவராக இருந்து அவர்கள் நலன் கருதி அரிய தொண்டாற்றினார். சென்னை சட்டசபையில் உறுப்பினராக இருந்து பல சேவைகளை ஆற்றியிருக்கிறார். இவரது எளிமை, அடக்கம், தெளிந்த சிந்தனை, கனிவான பேச்சு இவைகள் இவரது எதிரிகளாலும் போற்றி பாராட்டப்பட்டன. வாழ்க தியாகி பி.எஸ்.சின்னதுரை புகழ்!

தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
48. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்
தொகுப்பு: வெ.கோபாலன்

தொழிலாளர் பற்றி கவிமணி

உழுது பயிர் செய்வோன் - வயிற்றுக்கு உணவு பற்றாமல்,
அழுதழுது நிதம் - நிற்பதறியீரோ! ஐயா!
கோடி கோடியாக - நீங்கள் குவித்திடும் லாபம்
வாடும் எம்மக்கள் - உண்ணா வயிற்றுச் சோறலவோ?
மனம் திரியாமல் - காலை மாலை எப்பொழுதும்
குனிந்து வேலை செய்வோர் - கும்பி கொதிக்கலாமோ? ஐயா!
வாழ வேண்டுமெனில் - தொழில்கள் வளர வேண்டுமையா!
ஏழை என்றொருவன் - உலகில் இருக்க லாகாதையா!

பல்லடம் அருகே மல்லகவுண்டன்பாளையம் எனும் சிற்றூரில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் ராம கவுண்டர் பழனியம்மாள் தம்பதியருக்கு 1926ஆம் ஆண்டில் பிறந்தவர் செங்காளியப்பன். கோவையில் ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். காலப் போக்கில் மகாத்மா காந்தியடிகளின் வழிகளைப் பின்பற்றி தேச சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942 ஆகஸ்ட்டில் இந்தியா முழுவதும் பற்றி எரிந்த "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்ட போது இவருக்கு வயது 16. சூலூர் விமான தளம் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 1943 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, இவர் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அலிப்பூர் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் இவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். கிட்டத்தட்ட உயிர் பிரிந்து விட்டது என்று சொல்லும் அளவில் இவர் எலும்பும் தோலுமாக அலிப்பூர் சிறையில் வயிற்றுக் கடுப்பு நோய் பிரிவில் துணியால் மூடப்பட்டு கிடத்தப்பட்டிருந்தார். அந்தச் சிறையில் அடைபட்டிருந்த எல்லா கைதிகளும், தங்கள் உணவை மறந்து, இந்த ஒரு உயிருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டதின் விளைவு அன்றிரவு வேகு நேரத்துக்குப் பின் அவர் அபாய கட்டத்தைத் தாண்டினார்.

சிறையிலிருந்து வெளியே வந்த செங்காளியப்பன் தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபடத் தொடங்கினார். தொழிலாளர் நலனுக்காக அவர்கள் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக போராடும் பணியோடு, நாட்டின் விடுதலையையும் அவர் மற்றொரு கண்ணாக எண்ணி பாடுபட்டார். வெள்ளை வெளேர் என்ற கதராடை, அரைக்கை சட்டை, நெற்றியில் வெள்ளை திருநீறு, சிரித்த முகம், அமைதியான பண்பு இவற்றோடு இவர் வலம் வந்து தொழிலாளர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார். இவரை அனைவருமே "தொழிலாளர் தோழர்" என்றே அழைத்தனர்.

தியாகசீலர்களின் உழைப்பாலும், அவர்களது வியர்வையாலும், தியாகத்தாலும், ரத்தத்தாலும் 1947 ஆகஸ்ட் 15இல் நாடு சுதந்திரம் பெற்றது. என்றாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவரது பணி தொடர்ந்து நடந்தது. 1962இல் நடந்த பொதுத் தேர்தலில் இவர் பல்லடம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கோவை பகுதி தொழிலாளர்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்த என்.ஜி.ராமசாமி அவர்களின் ஆன்மா இவரை ஆசி வழங்கி வாழ்த்தியிருக்கும்.

இவருடைய பெரு முயற்சியால் தியாகி என்.ஜி.ராமசாமிக்கு சிங்காநல்லூரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. இவரது சட்டசபைப் பணிகளின்போது தொழிலாளர்கள் நலத்துக்காக இவர் பங்கேற்ற விவாதங்களும், இவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களும் ஏராளம். வாழ்க தொழிலாளர் தோழர் செங்காளியப்பன் புகழ்!

கோவை தியாகி கே.வி.இராமசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
47. கோவை தியாகி கே.வி.இராமசாமி
தொகுப்பு: வெ.கோபாலன்.

இந்திய சுதந்திரப் போரில், சுதேசி இயக்கத்தைத் தொடங்கி வைத்து அன்னிய துணிகளை பகிஷ்கரிக்கவும், தூய கதராடைகளையே அணிய வேண்டுமென்று மகாத்மா காந்தியடிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தானும் தன் குடும்பத்தார் அனைவரும் கதராடை அணியவும், காந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த மதுவிலக்கு, கதராடை அணிதல் போன்றவற்றில் உறுதியாக இருந்தவருமான தியாகி கே.வி.இராமசாமி அவர்களைப் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

கோவை மாவட்டத்தில் கோவைக்குக் கிழக்கே விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் கண்ணம்பாளையம் இவரது ஊர். இவரது தகப்பனார் வெங்கடராய கவுண்டர். இவர் மகாத்மாவின் வழிகளைப் பின்பற்றி நடந்து தனது மகனும் மற்றவர்களும் காந்திய நெறியில் நடக்கக் காரணமாக இருந்தவர். இவர் ஒரு விவசாயி. உணவு தானியங்களை உற்பத்தி செய்வதோடு தனது கடமை தீர்ந்ததாக இவர் நினைக்கவில்லை. மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் அரிய தர்ம காரியங்களையும் மேற்கொண்டிருந்தார்.

வெங்கடராய கவுண்டரின் மூத்தமகன் கே.வி.இராமசாமி. இவர் வெள்ளை கதராடை, தலையில் காந்தி குல்லாய் இவற்றோடு கிராமங்கள் தோறும் தனது சைக்கிளில் சென்று காந்திஜியின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியும், குடியின் கேடுகளை விளக்கிப் பேசியும், நாடு விடுதலையடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதோடு, ஒரு பள்ளிக்கூடத்தையும் தொடங்கி அதன் மூலம் சுதந்திர தாகத்தை வளர்த்தார். இவருக்கு உறுதுணையாக இவரது தம்பி கே.வி.தாண்டவசாமி கவுண்டரும் ஒத்துழைத்து வந்தார்.

1930ஆம் வருஷத்தில் இவரது குடும்பம் முழுவதுமே மகாத்மா காந்தியடிகளின் போராட்ட திட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டு, மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். இதில் தந்தை வெங்கடராய கவுண்டர், மகன் கே.வி.ராமசாமி, தாண்டவசாமி, ஆகியோரோடு விசுவாமித்திரன், செல்லப்ப கவுண்டர், படைக்கலம் வீடு சுப்பண்ண கவுண்டர், தொட்டிக்கட்டு வீடு கந்தப்ப கவுண்டர் ஆகியோரும் பங்கேற்றனர்.

1937இல் சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறப் பெட்டிதான் அடையாளம். இப்போது போல அப்போது சின்னங்கள் வழங்கப்படவில்லை. அந்தத் தேர்தலில் இவரது குடும்பம் முழுவதும் கிராமம் கிராமமாக நடையாய் நடந்து, மூவண்ணக் கொடியேந்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தனர். இவர்கள் உழைப்பு வீண்போகவில்லை. காங்கிரசின் மஞ்சள் பெட்டி வெற்றி வாகை சூடியது.

1938இல் திரிபுராவில் நடந்த காங்கிரசுக்கு இவர் தன் நண்பர் இம்மானுவேலுடன் சைக்கிளிலேயே புறப்பட்டார். அந்த காங்கிரசின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1939இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. போருக்கு எதிராக காங்கிரசார் பிரச்சாரம் செய்தனர். மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமா செய்தன. சென்னை மாகாண ராஜாஜி தலைமையிலான அரசும் ராஜிநாமா செய்தது. அரசை எதிர்த்து நடந்த தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு கே.வி.ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலூரில் நடந்த மறியலில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் பம்பாய் காங்கிரசில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேறியது. உடனே தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சி வெடித்தது. கோவையில் தேசபக்தர்கள் ஒன்றுகூடி திட்டம் வகுத்தனர். கோவை பீளமேடு ராதாகிருஷ்ணா மில்லைத் தகர்த்து மத்திய சிறையில் இருந்த தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமியையும் மற்றவர்களையும் விடுதலை செய்வது என்று தீர்மானித்தனர். பைக்காரா மின் நிலையத்தை அழிப்பது என்றும் தீர்மானித்தனர். சூலூர் விமான நிலையம் தாக்கி தீவைக்கப்பட்டது. சிலர் பிடிபட்டனர். கே.வி.ராமசாமியின் தகப்பனார் வெங்கட்டராய கவுண்டர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் 26ஆம் தேதி தலைமறைவான கே.வி.ராமசாமி நான்கு ஆண்டு காலம் தன் தலை மறைவு வாழ்க்கையில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார். இவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.500 பரிசு தருவதாக அரசாங்கம் அறிவிப்பு செய்திருந்தது. என்ன ஆச்சரியம்! இந்தப் பணியில் ஈடுபட எவரும் முன்வரவில்லை. துரோகிகளாக மாற எவரும் தயாராக இல்லை.

1946இல் இடைக்கால அரசு அமைந்த பிறகு இவர்கள் மீதிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. கே.வி.ராமசாமியும் சுதந்திரமாக வெளியே வந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் தான் திருமணம் செய்து கொள்வது என்று விரதம் இருந்த கே.வி.ஆர். அங்ஙனமே சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த வீரத் திலகம், தியாகி கே.வி.ராமசாமி 1965ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தியாகி கே.வி.ராமசாமி புகழ்!

வேதாரண்யம் தியாகி வைரப்பன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
46. வேதாரண்யம் தியாகி வைரப்பன்.
தொகுப்பு: வெ. கோபாலன்.

1930 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாளன்று திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து ராஜாஜி தலைமையில் சுமார் நூறு தொண்டர்கள் கிளம்பி பதினைந்து நாட்கள் நடைப் பயணம் செய்து வேதாரண்யம் சென்றடைந்து அங்கே அகஸ்தியம்பள்ளி எனும் இடத்தில் உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாக்கிரகத்தை இங்கே தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் ராஜாஜி, சந்தானம், சர்தார் வேதரத்தினம் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி புளியம் மிளாறினால் அடிபட்டு, உதைபட்டு சிறை சென்று செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி இவர்கள் ஒருபக்கம் உப்பு சத்தியாக்கிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்கள் நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாயினும், தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவர்களது அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சில அரிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் வேதாரண்யத்தில் நாவிதராக இருந்த ஓர் இளைஞர் செய்த அரிய காரியமும், அதன் விளைவாக அவர் சிறை சென்று தியாகியான விதமும் சற்று வித்தியாசமானது, ஏன்? வேடிக்கையானதும் கூட. அந்த நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.

வேதாரண்யம் புகழ்மிக்க புண்ணிய ஸ்தலம். இங்குள்ள ஆலயத்தில் அடைபட்டுக் கிடந்த கதவை பார்வதி தேவியாரின் தாய்ப்பால் அருந்திய திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பதிகம் பாடி திறந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஒருசேர இத்தலத்துக்கு விஜயம் செய்து பாடியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல தாயுமானவ சுவாமிகளின் எட்டாவது வாரிசாக வந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஏற்பாடு செய்து அவ்வூரில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றது. வேதரத்தினம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும், ஊரில் பலருக்கும் முடிவெட்டும் நாவிதராக வைரப்பன் என்றொரு இளைஞர் இருந்தார். இவருக்கு பிள்ளை அவர்களின் மீது மரியாதை, அன்பு, ஏன் பக்தி என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பிள்ளை அவர்களை போலீசார் கைவிலங்கு கால் விலங்கிட்டு வீதி வழியே இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு ஊரே அழுதது. பிள்ளை அவர்களின் மனைவியும், அவரது ஒரே மகனான அப்பாக்குட்டி குழந்தையாக இருந்து இந்த காட்சியைக் கண்டு வருந்தியிருக்கிறார்கள்.

போலீசார் விலங்கிட்டு வேதரத்தினம் பிள்ளையைத் தெருவோடு அழைத்துச் செல்வதைப் பார்த்து அக்கம்பக்கத்துப் பெண்கள், பிள்ளையவர்களின் மனைவியிடம் ஓடிச்சென்று, ஐயோ, ஐயாவை இப்படி அடித்து இழுத்துச் செல்கிறார்களே அண்ணி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று அலறி அழுதனர். கையில் மகன் அப்பாக்குட்டியை வைத்துக் கொண்டு இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெருமைக்குரிய தாய், ஐயா என்ன குற்றம் செய்தார்? திருடினாரா, பொய் சொன்னாரா? இல்லையே. இந்த நாட்டு ஜனங்கள் எல்லோரும் சுதந்திரம் பெற வேண்டுமென்றுதானே போராடினார். இதோ இழுத்துச் செல்கிறார்களே இந்த போலீஸ்காரர்களுக்கு உட்பட. பிறகு நான் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று 'வந்தேமாதரம்' என்று முழங்க, இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டிருந்த குழந்தையும் எல்லாம் தெரிந்தது போல கையைத் தூக்க, அத்தனைப் பெண்களும் ஒருமுகமாக வந்தேமாதரம் என்று முழங்கினர். பிள்ளை அவர்களிடம் பக்தி விஸ்வாசம் கொண்ட நாவிதர் வைரப்பன் இந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் கொதித்து, ஆத்திரமடைந்து, இந்த வெள்ளை அரசாங்கத்துக்கும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் போலீசாருக்கும் ஏதாவதொரு வகையில் பாடம் கற்பிக்க வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டார். அதை உடனே செயல் படுத்தவும் துணிந்தார்.

போராடவும், கோஷம் போட்டு போலீசாரின் தடியடிக்கு ஆளாகி சிறைக்குச் செல்லும் நூற்றுக் கணக்கான தொண்டர்களின் தியாகம் இவரையும் போராடத் தூண்டியது. இவர் ஓர் சபதம் மேற்கொண்டார். தனது தொழிலை போலீசாருக்கோ, அடக்குமுறைக்கு துணை போகும் அரசாங்க அதிகாரிகளுக்கோ செய்வதில்லை, அதாவது அவர்களுக்கு சவரம் செய்வதில்லை என்று உறுதி பூண்டார். அதை மிகக் கட்டுப்பாட்டோடு கடைபிடிக்கவும் செய்தார். அது போராட்ட காலமல்லவா? வெளியூரிலிருந்து பல போலீஸ்காரர்கள் பணியின் நிமித்தம் அவ்வூருக்கு வந்திருந்தனர். அப்படி முகம் தெரியாத ஒரு புதிய போலீஸ்காரர் சாதாரண உடையில் வந்து வைரப்பனிடம் முகச் சவரம் செய்து கொள்ள விரும்பினார். வைரப்பனும் அவரைப் பலகையில் உட்கார வைத்து முகத்தில் நீர் தடவி, சோப்பின் நுரை போட்டு கத்தியைத் தீட்டி பாதி சவரம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வைரப்பனுக்குத் தெரிந்த ஒரு நபர் அங்கு வந்தார். அவர் சும்மாயிராமல், "என்ன வைரப்பா! போலீஸ்காரங்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருந்தியே! இப்போ என்ன ஆச்சு? போலீஸ்காரர் ஒருவருக்கு சவரம் செய்து கொண்டிருக்கியே!" என்று கேட்டு விட்டார்.

வைரப்பனுக்கு அதிர்ச்சி. உடனே எழுந்து கொண்டார். "ஐயா! நான் உங்களுக்கு முகச் சவரம் செய்ய முடியாது. நீங்கள் வேறு இடம் பாருங்கள்" என்று சொல்லிவிட்டார். பாதி முகச் சவரம் செய்துகொண்ட நிலையில் முகத்தில் சோப் நுரையுடன் நிற்கும் அந்த போலீஸ்காரர் கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் அசைந்து கொடுக்கவில்லை. தன் போலீஸ் தோரணையில் மிரட்டிப் பார்த்தார். அதற்கும் வைரப்பன் அஞ்சவில்லை. "என்னால் செய்ய முடியாது, நீங்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். ஆத்திரமடைந்த போலீஸ்காரர் வைரப்பனை கைப்பிடியாக அழைத்துக் கொண்டு போய் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி "தம்பி! ஒழுங்காக அந்த போலீஸ்காரருக்கு மீதி சவரத்தையும் செய்துவிடு! இல்லாவிட்டால் தண்டிக்கப் படுவாய்" என்றார்.

வைரப்பனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தான் மேற்கொண்ட விரதம் சந்திக்கு வந்து விட்டது. இது எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்பது ஒரு புறம். மற்றொரு புறம் தனது எஜமான் வேதரத்தினம் பிள்ளையவர்கள் "வைரப்பா! நீயெல்லாம் போராட்டத்தில் கலந்து கொண்டால், உன்னைப் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். அப்புறம் உன்னை நம்பியிருப்பவர்கள் திண்டாடுவார்கள், நீ வெளியே இருந்து கொண்டு உன்னால் முடிந்த ஆதரவைக் கொடுத்துக் கொண்டிரு" என்று சொல்லியிருந்தாரே, இப்போது தானும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிபதியின் முன்பு நிற்கிறோமே என்று மகிழ்ச்சி.

நீதிபதியைப் பார்த்து வைரப்பன் சொன்னார், "ஐயா! எஜமானே! போலீஸ்காரருக்கு மிச்சம் சவரத்தை நம்மாலே செய்ய முடியாதுங்க! அப்படி செய்துதான் ஆகணும்னா, ஐயாவே செய்து விட்டுடுங்க!" என்று சொல்லிக் கொண்டே தனது சவரச் சாதனங்கள் கொண்ட தகரப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீது வைத்து விட்டார். கோர்ட்டே கொல்லென்று சிரித்தது. நீதிபதிக்கு வந்ததே கோபம். வைரப்பனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து தீர்ப்புக் கூறிவிட்டார். வைரப்பனுக்கு ஏக மகிழ்ச்சி. தானும் போராடி ஜெயிலுக்குப் போகப் போகிறோம். நம் தலைவர் பிள்ளை அவர்களை அவமானப் படுத்திய இந்த போலீஸ்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லதொரு பாடம் புகட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சி. அவர் அப்போது இளைஞர்தான், பிறகு சிறை வாசம் முடித்து வெளியே வந்து தியாகி வைரப்பன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு நீண்ட காலம் உயிரோடு இருந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் அவரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டு விட்டால் போதும். அவர் உற்சாகம் கரைபுரண்டு ஓட அதை வர்ணிப்பார். தானும் தன் தலைவரைப் போல ஜெயிலுக்குப் போய் தியாகியாகி விட்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரீ இராமபிரானுடைய அணை கட்டும் பணியில் உதவியதாகச் சொல்லப்படும் அணில் போல தானும் இந்த நாட்டு விடுதலைப் போரில் தன் பங்கைச் செலுத்திவிட்ட மகிழ்ச்சி அவருக்கு. அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில் வேதாரண்யத்தில் நடைபெற்றது. அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யத்தில் அவருக்கு ஓர் நினைவுத் தூண் நிறுவப்பட்டிருக்கிறது. வாழ்க தியாகி வைரப்பன் புகழ்!