Followers

Friday, November 5, 2010

ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரை ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரையைச் சேர்ந்த இந்த இஸ்லாமியப் பெரியவர் தன்னுடைய சுதந்திரப் போராட்ட வாழ்க்கையை 1910இல் அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தோடு தொடங்கினார். இவர் பல மொழிகளில் வல்லுனர். இவர் மேடையேறி பேசினால் அனைவரும் ஆழ்ந்து கவனிப்பர். இவருடைய பேச்சுக்கள் எப்போதும் வீண் பேச்சாக இருந்ததில்லை. பல மொழி நூல்களிலிருந்தும், பல்நாட்டு அறிஞர் பெருமக்களின் உரைகளிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசுவார். அவர் பேசுகிறார் என்றால் மதுரையிலும் சுற்று வட்டாரங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வர். அன்றைய ஆங்கில ஆளும் வர்க்கத்தை இவர் தனது பேச்சினால் கலங்க அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போதைய மதுரை மாவட்டம் மிகப் பெரிய அளவுடையது. அங்கெல்லாம் இவர் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊக்கினார். கம்பீரமான இவரது தோற்றமும், பேச்சும் அவற்றில் பொதிந்து கிடக்கும் சுதந்திர வீராவேசமும் மக்களிடையே ஒரு எழுச்சியை ஊட்டுவதாக அமைந்திருந்தது. 1921இல் இவர் நிலக்கோட்டை தாலுகாவில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடைகளுக்குத் தொண்டர்களோடு போய் அங்கு குடிக்க வரும் மக்களை பணிவோடு வேண்டிக் கொள்வார். குடிக்காதீர்கள். குடித்தால் நீங்களும், உங்கள் குடும்பமும் அழிந்து போகும். மனத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போதையில் மனிதர்களை இருக்க வைத்து வெள்ளைக்காரன் இந்த நாட்டில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறான். பெற்ற பொன்னாட்டையும், பிறந்த ஊரையும் அன்னியனுக்கு அடிமையாக்கப் போகிறீர்களா? குடித்துவிட்டு போதை மயக்கத்தில் சாக்கடையில் விழுந்து கிடக்கப் போகிறீர்களா? சுதந்திரப் பொன்னாட்டைப் பார்க்கப் போகிறீர்களா. அப்படியானால் குடியை இன்றோடு நிறுத்தி விடுங்கள் என்பார்.

அதற்கு பதில் என்ன தெரியுமா? குடிகாரர்கள் ஏசுவார்கள். சிலர் அடிப்பார்கள். எச்சிலை உமிழ்வார்கள். கள்ளுக்கடைக் காரர்கள் அடியாட்களைக் கொண்டு தொண்டர்களை அடித்து விரட்டுவார்கள். இத்தனையும் எந்த முணுமுணுப்புமின்றி காந்திய வழியில் அகிம்சை முறையில் இவர் எதிர் கொள்வார். எத்தனை பெரிய மனிதர். இப்படி குடிகாரர்களிடமும், கள்ளுக்கடை அடியாட்களிடமும் அடிவாங்குகிறாரே என்று மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம், ஆதரவு பெருகி வரத் தொடங்கிற்று. தூய வெண்ணிற ஆடை, இஸ்லாமியருக்கு உரிய தாடி, தலையில் குல்லாய், கரங்களில் மூவண்ணக் கொடி, கண்களில் சுதந்திர வெறி இவற்றோடு இந்தத் தூயவரைப் பார்த்த மக்கள் இவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர்.

இவரை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத ஆளும் வர்க்கமும் அவர்களது அடிவருடிகளும் இவரை ஒரு கொள்ளை வழக்கில் சம்பந்தப் படுத்தி வழக்குத் தொடுத்தனர். வழக்கு நடந்து செஷன்ஸ் கோர்ட்டுக்குச் சென்றது. அங்கு இவருக்கு எதிரான எந்தப் புகாரும் போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை என்று இவர் விடுதலையானார். பொய் வழக்குப் போட்டுவிடுவது எளிது. ஆனால் அந்தப் பொய்யிலிருந்து விடுபட்டு உண்மையை வெளிக் கொணர்ந்து வெற்றிகரமாக வெளிவருவது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. ஹாஜி முகமது மெளலான சாகிப் இதில் வழக்காடி வெளியே வந்தார்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அங்கு இவரது பேச்சு மதுரை மாவட்டத்தை விட்டு வெளியே வந்து சென்னை மாகாண பிரதிநிதிகளின் மத்தியில் வெளிப்பட்டது. இவரது பேச்சில் இருந்த வேகம் ஆட்சியாளர்களை மிரளவைத்தது. செடிஷன், அதாவது ராஜத்துரோகம், கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு இவர் மீது போடப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932ஆம் வருடம் மதுரை நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

தேசத்தை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அந்த அளவுக்கு இவர் தனது மதத்தையும் மதித்தார். தேசபக்தி, மதபக்தி இரண்டும் இவரது இரண்டு கண்கள். இப்படிப்பட்ட தேசிய முஸ்லிம்கள் அன்று நாட்டு சுதந்திரத்துக்குப் பாடுபட்டதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இவரது பெயர் சுதந்திரப் போராளிகள் வரிசையில் மதுரையில் சிறப்பாகப் பேசப்பட்டது. மதுரை முனிசிபல் உதவி சேர்மனாகவும், பின்னர் சேர்மனாகவும் இருந்து மதுரை நகரத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். சிறப்பாக தென் மாவட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை மிகச் சிறப்பாகப் பேணிக் காப்பாற்றப்பட்டது.

எந்த ஊருக்குப் போனாலும் சரி, எந்த அவசர வேலைகளுக்கிடையிலும் அந்தந்த வேளைகளில் தொழுகைக்குப் போவதை நிறுத்தியதே கிடையாது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறையிலிருந்த முஸ்லீம்கள் தொழுகை நடத்தத் தனி இடம் ஒதுக்கித் தரப் போராடி வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல, இருண்டு கிடந்த சிறைச்சாலைகளில் விளக்குகளும், குடிதண்ணீர் வசதிகளும் இவர் வாங்கித் தந்தார். இவர் 1886இல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. வாழ்க ஹாஜி முகம்மது மெளலான சாகிப் புகழ்!

1 comment:

  1. பல தேசிய முஸ்லிம்கள் இருந்துள்ளனர்.ஆனால் 'இஸ்லாத்தின் சர்வதேசியம்' என்ற மதக் கோட்பாட்டால், அவர்களால் தாங்கள் வாழும் நாட்டின் மீது பற்று முழுமையாக வைக்க முடியவில்லை என்பதே எதார்த்தம்.மெக்காவை நோக்கி மண்டியிடும் அவர்கள் மனது முழுதும் அங்கே போய்விடுகிறது. "பெரிய சகோதரன்" சவுதியின் ஆணைக்காகக் காத்து நிற்கிறார்கள்.

    ReplyDelete

Please give your comments here