Followers

Monday, May 17, 2010

தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
66. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமன் தீர்த்தம் எனும் கிராமம். இங்கு குமாரசாமி எனும் தியாகி வசித்து வந்தார். இவர் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றார். இவர் புனே, பம்பாய், சென்னை, பெல்லாரி, சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் இருந்திருக்கிறார். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தனது அறுபது வயதைக் கடந்த பிறகு ஒரு நாள் இவர் சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த இளங்கோவன் என்பவரைச் சந்தித்துத் தனக்கு அளிக்கப்படும் தியாகி பென்ஷனும் தாமிரப் பட்டயமும் இனி வேண்டாம் என்று திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னார். அந்த நேர்முக உதவியாளர் இரண்டு மணி நேரம் குமாரசாமியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரைச் சமாதானப் படுத்த முடியாத நிலையில், கலெக்டர் கருப்பண்ணனைச் சந்திக்கும்படி அனுப்பி வைத்தார். குமாரசாமியும் கலெக்டரைச் சந்தித்து தனக்கு பென்ஷன் வேண்டாம், இந்தத் தாமிரப் பட்டயமும் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தார். கலெக்டர் அதிர்ச்சியில் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு குமாரசாமி சொன்னார்:-

எனக்கு 15 வயது ஆகும்போதே சுதந்திரப் போராட்டத்தில் குதித்து விட்டேன். எனக்கு பி. ராமமூர்த்திதான் தலைவர். அவர் தலைமையில் போராடி பல சிறைகளில் இருந்திருக்கிறேன். எனக்கு தியாகி பென்ஷனும் இந்தப் பட்டயமும் கொடுத்தார்கள். இவற்றால் எனக்குப் பெருமை என்று நினைத்து வாங்கிக் கொண்டேன். ஆனால் நாங்கள் சிறை சென்று தியாகம் செய்து வாங்கிய இவை இப்போது எனக்கு தேவையில்லை. காரணம் வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் சுதந்திர இந்தியாவில் லஞ்சமும், ஊழலும் கரைகடந்து பெருகிவிட்டன. காவல்துறையின் அராஜகமும் அடக்குமுறையும் வெள்ளையர் காலத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களும், அதிகாரிகளும் சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து நேர்மையாகவும், மக்களுக்கு நாணயமாகவும் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நாளுக்கு நாள் இந்த லஞ்சப் பேய் அதிகரிக்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் வெள்ளைக்காரர்களை விட தங்களை மேலானவர்களாகக் கருதிக் கொண்டு சொந்த நாட்டானையே சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். இதற்காகவா இத்தனைப் பாடுபட்டு சுதந்திரம் வாங்கினோம்? என்றார்.

நீங்கள் இந்த மாவட்டக் கலெக்டர். உங்களிடம் இப்போது நான் வந்து பேசுகிறேன். இந்த வாய்ப்புகூட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எனக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் ஒரு முறை குமாரபாளையத்திலிருந்து பவானிக்கு ஒன்பது படி அரிசி கொண்டு போனேன். குமாரபாளையம் செக்போஸ்ட்டில் அரிசி கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். அதனால் நான் கொண்டு சென்ற அரிசியை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். என் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்ப அதே வழியில் வரும்போது அந்த செக்போஸ்ட் வழியாகப் பலர் அரிசி கொண்டு சென்றார்கள். ஒருவரும் தடுக்கப்படவில்லை. போலீஸ் அதிகாரிகளும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஒன்றும் கேட்கவுமில்லை, விசாரிக்கவுமில்லை.

உடனே நான் அங்கிருந்த போலீசாரிடமும், செக்போஸ்ட் அதிகாரிகளிடமும் அவர்கள் மட்டும் அரிசி கொண்டு போகிறார்களே, என்னிடம் கூடாது என்று பிடுங்கி வைத்துக் கொண்டீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நீ அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவது தானே!" என்று கிண்டலடித்தார்கள். உடனே நான் 'சுதந்திரம் வாங்கினாலும் வாங்கினோம், இந்தப் போலீஸ்காரர்களிடமும், பியூன்களிடமும் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்' என்று மனம் வெதும்பிக் கூறினேன். அப்போது அங்கிருந்த ஒரு அதிகாரி 'இவன் மீது ஒரு செக்ஷன் போட்டு கேஸ் புக் பண்ணு' என்றார்.

பிறகு நான் அப்போது பஞ்சாயத்து போர்டு அதிகாரியாக இருந்த என் அண்ணன் மகன் வஜ்ரவேலுவின் பெயரைச் சொன்னதும், போலீஸ்காரர்கள் என்னை அனுப்பி விட்டார்கள். சுதந்திரம் என்பது என்ன என்று நாங்கள் நினைத்தோமோ அந்த சுதந்திரம் இன்று நாட்டில் இல்லை. அதிகார வர்க்கம் தலைக்கொழுத்து ஆடத் துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் பெருகிவிட்டதனால், அரசியல் குறுக்கீடுகளும், அதிகார துஷ்பிரயோகங்களும், நியாம் செத்துக் கொண்டிருக்கிறது என்றேன் என்றார் குமாரசாமி.

வறுமையில் பிடியில் சிக்கிய தியாகி குமாரசாமிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகள் பவானியில் ஆசிரியையாக இருந்தார். மகன் ராமலிங்கம் துணி வியாபாரம். நாட்டுக்கு உழைத்த இதுபோன்ற தியாக சீலர்கள் மனம் நொந்து, வெந்து மடிந்து போவதும், சம்பந்தமில்லாதவர்கள் ஊழலிலும் லஞ்சத்திலும் வாழ்வதிலும்தான் நமது சுதந்திரம் இருக்கிறதா என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுவது இயற்கைதானே? வாழ்க குமாரசாமி போன்ற தியாகிகளின் உணர்வுகள்!

No comments:

Post a Comment

Please give your comments here