Followers

Monday, May 17, 2010

க. சந்தானம்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
61. க. சந்தானம்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

தஞ்சை மாவட்டம் தந்த அரிய தலைவர் க.சந்தானம். மன்னார்குடியில் பிறந்து, உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் ஆச்சார்ய கிருபளானி, கே.எஸ்.சுப்பிரமணியம் போன்றவர்களோடு பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, சுதந்திர தாகத்தினால் 1920இல் கல்கத்தா காங்கிரஸிலும் பின்னர் 1921இல் பெஜவாடா காங்கிரஸிலும் கலந்துகொண்டு, வேலையை உதறிவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்து திருச்சியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சேர்ந்து பணியாற்றி, திருச்சி மாவட்டத்தில் சிறைசென்ற முதல் சத்தியாக்கிரகி எனும் புகழ்பெற்றவர் க.சந்தானம். பின்னாளில் இவர் ஜவஹர்லால் நேரு மந்திரி சபையில் அமைச்சராகவும், லெஃப்டினன்ட் கவர்னராகவும் இருந்தபின் ஆயிரம் பிறைகண்ட நிறைவாழ்க்கை வாழ்ந்தகவர் க.சந்தானம். அரசியல் சாணக்கியரான ராஜாஜிக்கு வலது கரம் போல செயல்பட்டு, அவர் ஈடுபடும் எல்லா போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்ட பெருந்தகை க.சந்தானம். வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் தலைவர் ராஜாஜி சிறைபட்டவுடன், தனக்கு அடுத்து க.சந்தானம் 'சர்வாதிகாரி'யாக இருந்து போராட்டத்தை வழிநடத்துவார் என்று ராஜாஜியில் பணிக்கப்பட்டவர் க.சந்தானம். நல்ல கல்விமான், பொருளாதார நிபுணர், இந்திய அரசியல் சட்டம் வகுப்பதில் முனைப்புடன் ஈடுபட்டவர், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று பல பெருமைகளுக்கு உரியவர் க.சந்தானம்.

ஆமதாபாத் காங்கிரஸ் தீர்மானத்தின்படி தமிழ்நாட்டிலும் பலர் தங்களது வக்கீல் தொழிலை கைவிட்டனர். பலர் கல்லூரிகளிலிருந்து வெளியேறினர். திருச்சியில் ஆர்.நாராயண ஐயங்கார், என்.ஹாலாஸ்யம் ஆகியோர் வக்கீல் தொழிலைவிட்டு வெளியேறினர். கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கல்கி ஸ்தாபகர் மணக்கால் சதாசிவம் ஆகியோர் தேசிய கல்லூரியில் படிப்பை விட்டு வெளியேறினர். இவர்கள் அனைவரும் கிராமங்கள் தோறும் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தனர். அப்போது க.சந்தானம் இவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

1922இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் திருச்சி இரட்டை மால் தெருவில் இருந்தது. கமிட்டிக்கு ராஜாஜி தலைவர் செயலாளர் க.சந்தானம். இவரைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லுவார்கள், மன்னார்குடிக்காரரான இவருக்கு தங்குமிடம் காங்கிரஸ் அலுவலகம், ஸ்நானம் காவிரியில், சாப்பாடு ஹோட்டலில், வேலையோ திருச்சி மாவட்ட கிராமங்களில். இவர்களது நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. தடையை மீறி க.சந்தானம் செயல்பட்டதற்காக கைதாகி 6 மாத சிறை தண்டனை பெற்றார். சிறையில் இவருக்கு 'சி' வகுப்புதான் கொடுக்கப்பட்டது. இப்படி இவர் திருச்சி மாவட்டத்தில் முதல் சத்தியாக்கிரகியாகி சிறை சென்றார். இவர் திருச்சி, கண்ணனூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார். கண்ணனூர் சிறையில் கைதிகளுக்கு நடந்த அநீதியை எதிர்த்து இவர் உண்ணா நோன்பிருந்து அவர்களுக்குக் கொடுமையிலிருந்து விடுதலையளிக்கப் பாடுபட்டார்.

அந்தக் காலத்தில் சிறைகளில் 'ஏ', 'பி', 'சி' என்ற பாகுபாடுகள் இல்லை. எல்லா கைதிகளும், கிரிமினல் குற்றவாளிகளும், அரசியல் கைதிகளும், படித்தவர்களும், படிக்காதவர்களும் ஓரிடத்தில்தான். இந்தப் பிரிவினை, ஏ,பி,சி வகுப்புப் பிரிவினை லாகூர் சதிவழக்கு நடந்த காலத்தில் அவ்வழக்கில் ஓர் குற்றவாளியான எதீந்திரதாஸ் என்பவர் 63 நாட்கள் உண்ணா நொன்பிருந்து உயிர்விட்ட பிறகுதான் அரசியல் கைதிகளை கிரிமினர் கைதிகளிலிருந்து பிரித்து தனி வகுப்பு கொடுக்கப்பட்டது. 1930 வரை எல்லா கைதிகளும் ஓரிடத்தில்தான். இப்போதைய சிறை வாசத்தை எந்த வகையிலும் அந்தக் கால சிறைவாசத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை நாமெல்லாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நமது மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தின் விலையைப் புரிந்துகொள்ள முடியும்.

அந்தக் காலத்தில் மாஜிஸ்ட்டிரேட்டுகள் தங்கள் ஆங்கில எஜமானர்களுக்கு எப்படி விசுவாசமாக இருந்தார்கள் என்பதைப் பற்றி க.சந்தானம் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். 1941-42 காலகட்டத்தில் தஞ்சாவூரில் நடந்த சம்பவம் இது. ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஒரு கைதியை அழைத்துக்கொண்டு வந்து அவ்வூர் மாஜிஸ்ட்டிரேட் முன் ஆஜர் செய்கிறார். அந்தக் கைதி யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததாகவும், அரசாங்கத்துக்கு எதிராக துவேஷம் உண்டாக்கும் வண்ணம் கூட்டங்களைக் கூட்டி பேசியதாகவும் குற்றம் சாட்டினார் சப் இன்ஸ்பெக்டர். அதற்கு அந்த மாஜிஸ்ட்டிரேட் இந்த ராஜ துவேஷ குற்றத்துக்காக அந்தக் கைதிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், சிறையில் எவ்வளவு களி படியளக்க வேண்டுமென்பதையும் தண்டனையாக விதித்தார். இந்தக் கைதி யார் என்று விசாரித்ததில் இவர் ஒரு பிறவி ஊமை என்பதும், இவரை அந்த சப் இன்ஸ்பெக்டருக்குப் பிடிக்கவில்லை என்பதால், இந்த மாஜிஸ்ட்டிரேட் வெள்ளைக்கார அரசாங்கத்தைக் குளிப்பாட்டும் விதத்தில் தண்டனை அளித்து விடுவார் என்பது தெரிந்து இப்படியொரு தந்திரம் செய்ததாகவும் தெரிய வந்ததாம். ஊமை எப்படி அரசாங்க விரோத பேச்சைப் பேசியிருக்க முடியும் என்பதைக்கூட விசாரிக்காமல் தண்டனை கொடுப்பதில் அவ்வளவு முனைப்பு அந்த மாஜிஸ்டிரேட்டுக்கு. எல்லாம் எஜமான விசுவாசம்!

1922இல் டிசம்பரில் கயாவில் நடந்த காங்கிரசுக்கு சி.ஆர்.தாஸ் தலைமை வகித்தார். இந்த மகாசபைக்கு க.சந்தானம் பிரதிநிதியாகச் சென்றார். 'மாறுதல் வேண்டுவோர் கட்சி' எனும் பெயரில் காங்கிரசுக்குள் இருந்த குழுவில் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, வித்தல்பாய் படேல், எஸ்.சீனிவாச ஐயங்கார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோர் இருந்தனர். இவர்களுக்கு எதிராக சட்டசபைகளை பகிஷ்கரிக்கும் கட்சியில் வல்லபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் இருந்தனர். இந்த இரு கோஷ்டிகளில் க.சந்தானம் ராஜாஜியின் பக்கமே இருந்தார்.

இராட்டையில் நூல் நூற்கும் இயக்கத்தில் க.சந்தானம் தீவிரமாக இருந்தார். காதி உற்பத்திக்கு ஜம்னாலால் பஜாஜ் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளுக்கு சந்தானம் உறுதுணையாக இருந்தார். 1925 முதல் 1930 வரை இவர் நூற்போர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கதர் காதி சங்கம் திருப்பூரில் தலைமையகமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் சிறை தண்டனை பெற்றார். 1931இல் காந்தி இர்வின் ஒப்பந்தப்படிக்கு இவர் விடுதலையானார். 1932இல் திருப்பூரில் தடையை மீறி ஊர்வலம் சென்றமைக்காக இவர் கைதாகி 6 மாதம் தண்டனை பெற்றார். 1931இல் இவரது மனைவி காலமானார், அடுத்த ஆண்டில் தனது சகோதரரை பறிகொடுத்தார். குடும்ப சோகத்தினால் இவரது அரசியல் வாழ்க்கை சோர்வடையவில்லை.

சிறையிலிருந்து விடுதலையான பின் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழின் ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டார். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்வதற்காக ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். 1940இல் மன்னார்குடிக்குச் சென்று அங்கு யுத்த எதிர்ப்பு பிரச்சார ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி கைதாகி ஒரு வருடம் தண்டனை பெற்றார். அந்த தண்டனையை இவர் திருச்சி சிறையில் கழித்தார். இந்த சிறைவாசத்தின் போது பல பெரிய தலைவர்களின் நட்பும் தோழமையும் இவருக்குக் கிடைத்தது. 1975இல் இவருக்கு சதாபிஷேகம் நடந்தது. வாழ்க க.சந்தானம் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here