Followers

Monday, May 17, 2010

கு. ராஜவேலு.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
58. கு. ராஜவேலு.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற தமிழ் அறிஞர் மற்றும் எழுத்தாளர்களுள் கு.ராஜவேலு ஒருவர். இவர் தனது சிறைவாசத்தை புதிய நூல்கள் இலக்கியங்களைப் படைக்கப் பயன்படுத்திக் கொண்டவர். 1942இல் மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்த "வெள்ளையனே வெளியேறு!" எனும் Quit India இயக்கத்தில் தனது மாணவப் பருவத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இந்த வரலாற்றை இவர் தனது "ஆகஸ்ட் 1942" எனும் புதினத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். பதினொன்று ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் பங்குபெற்று சிறைபுகுந்த மாணவப் பருவ போராட்டத்தைச் சிறிது பார்ப்போம்.

ஈரோடு நகரத்தைச் சேர்ந்த இந்த தேசபக்த இளைஞர் 1942இல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரத்தில் இருந்த அரசர் கல்லூரியில் தமிழ் படித்து வந்தார். அப்போதுதான் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அன்றே மகாத்மாவும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர், காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. வெளியில் பெயர் சொல்லக் கூடிய அளவில் எந்த தலைவரையும் ஆன்கில ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் கூடி தலைவர்கள் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய பந்தல் தீக்கு இறையாகியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அரசர் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடைத் தெருவில் கூடினர். ஆந்திராவைச் சேர்ந்த சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, பிற்காலத்தில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என அழைக்கப்பட்டவரும் நமது கு.ராஜவேலு உள்ளிட்ட தீவிரமான தேசபக்தர்கள் இந்தக் கூட்டத்தில் இருந்தனர். அன்றைய மாணவர்கள் குறிப்பாக திருவையாறு கல்லூரியில் இருந்த மாணவர்கள் அனைவருமே தேசிய சிந்தனை உடையவர்களாக இருந்ததோடு, அவர்களை சோமசேகர சர்மா எனும் தீவிரமான தேசபக்தரும், கு.ராஜவேலும் வழிநடத்தி வந்தனர். இவர்கள் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது ஆட்கொண்டார் சந்நிதி எனப்படும் கடைத்தெரு பகுதியில் போலீஸ் இவர்களைக் கலைந்து போகும்படி கூறியது. அதற்குள் மாணவர்களோடு பொதுமக்களும் நூற்றுக் கணக்கில் கூடி விட்டனர். கடைத்தெருவின் கீழ்புறத்திலிருந்து மாணவர்களும், மேல்புறத்திலிருந்து பெரும் கூட்டமாக பொதுமக்களும் வந்து சேர்ந்ததனால் கடைத்தெரு கொள்ளாமல் மக்கள் கூட்டம். ஆத்திரம் கொண்ட போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியது. உடனே கூட்டத்திலிருந்து கலைந்து சென்றவர்கள் ஒருபுறம் தபால் அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, பொருட்களை நொறுக்கிவிட்டனர். மறுபுறம் மற்றொரு கூட்டம் காவிரி ஆற்றைக் கடந்து தஞ்சாவூர் சாலையில் இருந்த முன்சீப் கோர்ட் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தைச் சூறையாடியது. தஞ்சாவூரிலிருந்து மலபார் போலீசார் கலவரத்தை அடக்க வந்து சேர்ந்தனர். அப்போது முன்சீப் கோர்ட் உள்ளே இருந்த கு.ராஜவேலு காவிரியின் வெள்ளத்தில் குதித்து நீரோட்டத்தோடு நீந்திச் சென்று திருப்பழனம் எனும் ஊரில் கறை ஏறி, பிறகு அவருடன் படித்துக் கொண்டிருந்த அவ்வூர் மாணவனின் உதவியுடன் திருவையாறு வந்தார். அன்று மாலையே இவரும் மற்றும் 42 பேரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்த வழக்கில் இவரும் மற்ற 42 பேரும் 1943இல் தண்டிக்கப்பட்டனர். கு.ராஜவேலு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். இவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம் (அவரும் அப்போது அந்தக் கல்லூரி மாணவர்) பதினெட்டு வயது ஆகாதவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து இவர் விடுதலையான நேரத்தில் தொடுவானில் சுதந்திர வெளிச்சம் தோன்றலானதை யொட்டி, இவர் சென்னை சென்று தனது படிப்பைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். தேசிய உணர்வும், தியாக பின்னணியும் கொண்ட இவரை அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் அடையாளம் கண்டு, இந்த இளைஞரின் வாழ்வு முன்னேறவேண்டும் என்று விரும்பினார். இவர் கல்வி இலாகாவில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் கல்வி இலாகாவில் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்து, ராஜதானி கல்லூரி முதலான இடங்களில் பணியாற்றி, பற்பல நூல்களையில் எழுதினார். ஓய்வுக்குப் பிறகும் தனது எழுத்துப் பணியில் ஈடுபட்டு வயது தொண்ணூறை எட்டும் இவர் இப்போது சென்னையில் அஷோக்நகரில் வாழ்ந்து வருகிறார். இவரது திருவையாற்று அனுபவத்தைக் கேட்டால் இவர் இப்போதும் மனம் உருகிப் பேசுகிறார். இவரோடு சிறைசென்ற பல தியாகிகள் இன்னமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தஞ்சை ஸ்ரீநிவாசபுரத்தில் தியாகி கோவிந்தராஜு, திருவிடைமருதூரில் சண்முகம், மதுரையில் இராம சதாசிவம் போன்றோர் பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தில்லைஸ்தானத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மாணிக்கம் பிள்ளை சில மாதங்களுக்கு முன்புதான் அமரர் ஆனார். இவர்களுக்கு உடற்பயிற்சியும் கஸரத் போன்றவற்றைக் கற்பிக்க ஓர் உடற்பயிற்சி மையத்தை குஞ்சுப் பிள்ளை என்பவர் நடத்தி வந்தார். இவர்தான் திருவையாற்று தேசபக்தர்களுக்கெல்லாம் வழிகாட்டி, குரு எல்லாம். இவர்தான் 13-8-1942இல் நடந்த புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இவர் அமரராகிவிட்டார். இப்படிப்பட்ட தியாகிகளையெல்லாம் உருவாக்கிய திருவையாற்று மண்ணை வணங்குவோம். வாழ்க கு.ராஜவேலு! அவர் இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுவோம்.

No comments:

Post a Comment

Please give your comments here